"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Friday, July 1, 2016

ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிலாளர்களைப் பாதுகாக்க, பொது வேலை நிறுத்தத்திற்கு போராடு! உண்ணாவிரத திசை திருப்பலை நிராகரி!


இதழ் - 391
ஜூலை, ஆகஸ்ட் 1989

ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சாலை மூடி ஆறுமாத காலமாகிறது. தொழிலாளர் குடும்பங்கள் பசியும் பட்டினியுமாக வாடிக் கொண்டு இன்னல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. மூடிய தொழிற்சாலையால் வாடிய குடும்பங்களின் வறுமையைப் போக்க ஆலையைத் திறக்க தொழிற்சங்கம் எடுத்த நடவடிக்கைகள் எண்ணற்றவை என்று தொழிற்சங்கம் வேண்டுமானால் பறை சாற்றிக் கொள்ள முடியும். உண்ணாவிரதங்கள், பொதுக்கூட்டங்கள் இவற்றின் மூலம் தொழிற்சாலை திறக்கப்பட்டதா என்றால் இல்லை இல்லவே இல்லை. கடந்த கால வரலாற்றில் எத்தனையோ கம்பெனிகள் மூடப்பட்டன. இதேபோன்ற போராட்டங்களால் வெற்றி கிடைத்ததா? இல்லை, பின் ஏன் இதே வகைப் போராட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன? இதுவரை ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சங்கத்தின் AITUC தலைமை காட்டிய வழியில் தொழிலாளர்கள் பெற்ற பலன் சிறைச்சாலை, தடியடி, மண்டை உடைப்பு, இரத்தம் சிந்தல் தான் இப்படிப்பட்ட போராட்டங்களினால் பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை எனத் தெரிந்திருதும் தலைமை தொழிலாளர்களை இத்தகைய செல்லாக் காசுப் போராட்டங்கள் பால் திசை திருப்புவதன் காரணம் திட்டமிட்டு தொழிலாளர்களை சோர்வடையச் செய்வதற்காகத்தான்.

தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு உடன்பட வேண்டும் என்று ஸ்டாலினிச ஏ..டி.யு.சி. தலைமை கூறியதும் தொழிலாளர்கள் ஐ.டி.யு.சி. இராமசாமியை நிராகரித்து விட்டார்கள். தலைமை தங்கள் கையை விட்டு விட்டுப் போய்விடக் கூடாதே என்று கருதிய ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைமை கோபு, தங்க மணிகளை அனுப்பி மீண்டும் தொழிலாளர்களை சோர்வடையச் செய்து ஸ்டாண்டர்ட் மோட்டார் முதலாளி முத்தையாவுக்கு அடிபணியச் செய்யும் வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

முதலாளித்துவத்தின் நலனைப் பேணி காக்கும் வகையில், முதலாளித்துவத்தின் போலீஸ்காரனாக தொழிற்சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு முதலாளிகளின் முதல்தர ஏஜெண்டுகளாக தொழிற்சங்க அமைப்புக்குள் செயல்படுகின்றார்கள். 'தொழிற்சங்கம் என்பதே பேரம் பேசுவதற்குத் தான்' என்று கூறிக் கொள்கிறார்கள் சம்பளம் குறைத்துக் கொள்வதில் பேரமா? ஆட்குறைப்பில் பேரமா? எப்படிப்பட்ட பேரம் என்பதைத் தான் அவர்களால் வரையறுத்து கூற முடியவில்லை. இவர்கள் காந்திய வாத உண்ணாவிரதப் போராட்டத்தை தமது வேலைத் திட்டமாக உயிர் மூச்சாக கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே தொழிலாளி பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறான், மேலும் தொழிலாளி உண்ணாவிரதம் இருக்க வேண்டுமாம், ஒரு வருடத்திற்கு மேலும் அரசாங்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் ஸ்டாண்டர்ட் மோட்டார் பிரச்சினை தெரியாமல் இருக்கின்றதா? இவர்கள் தான் தம்மை மார்க்சியவாதி கம்யூனிஸ்டுகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களா? உண்ணாவிரதம் தான் கம்யூனிசத்தின் வேலைத்திட்டமா? தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள்? பின் இவர்கள் யாரிடம் தான் அரசியல் பேசுவார்கள் என்று தெரியவில்லை; இவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதும், மனு கொடுப்பதும், நியாயம் கேட்பதிலுமே காலத்தை கழிக்கின்றார்கள். தொழிலாள வர்க்கத்தின் எதிரியான முதலாளி வர்க்கத்துடன் போராட அவர்கள் தயாராக இல்லை. அரசாங்கத்தின் அலுவலகமான B.I.F.R. க்கு போய் வரும் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றார்கள். கம்பெனியின் உள்ளே வந்து பார்க்காமலும், தொழிற்சங்க நிர்வாகிகளை சந்திக்காமலும், முதலாளி கொடுத்த அறிக்கையின்படி IDBI 1200 பேர் வேலையில் இருந்து நீக்க வேண்டும். சம்பள வெட்டு செய்ய வேண்டும். வேலைப்பளுவை கூட்ட வேண்டும் என்று தொழிலாளியை அடிமையாக்குகிறது. அதை எடுத்துக் கொண்டு ஓடோடி வருகின்றார்களாம் கோபு, ஜனார்த்தனம் தொழிற்சங்க தலைமைகள். முதலாளி எந்தவித நஷ்டமும் அடையக் கூடாது. அவனுக்கு லாபம் ஒன்றே குறிக்கோள். ஆனால் உழைக்கும் தொழிலாளயோ அடிமை விலங்கை ஏந்திக் கொண்டு உழைக்க வேண்டும். இதற்கு தொழிலாளியை தயார்படுத்த தொழிற்சங்கத் தலைமைகள் 'முன்னால் தொழிற் சங்க நிர்வாகிகளாக இருந்தவர்கள் கலைமகள் கலாசாலையில் நடந்த ஜெனரல்பாடியில் கொடுத்த அறைகூவலை (ஒரு பைசா இழக்க மாட்டோம், நம்பி தொழிலாளர்கள் அவர்களையே போராட்டக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இன்றோ அவர்களில் ஒரிருவரைத் தவிர மற்றையோர் ஏதாவது விட்டுக் கொடுக்கும் யோசனையை கூறும் அளவிற்கு முதலாளித்துவத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டு விட்டார்கள். S. M. P. I. தொழிற்சங்கம் ஏன் A. I. T. U. C. உடன் இணைக்கப்பட்டது. வருடாவருடன் தவறாமல் ஆயிரக் கணக்கில் பணம் பெற்றுக் கொள்கிறது. A. I. T. U. C. இன்று பட்டினியால் வாடும் தொழிலாளிக்கு ஏனைய தொழிற்சங்கங்களிலிருந்து நிதி திரட்டி ஏன் தொழிலாளர்களுக்கு தரவில்லை. அதன் குறிக்கோள் வருடாவருடம் மாநாடு நடத்துவது மட்டுந்தானா? மாநில அளவில் உண்ணாவிரதத்திற்கு அணி திரட்ட முடிந்த அதனால் ஏன் ஒரு ஒட்டுமொத்த பொது வேலை நிறுத்தத்திற்கு அணி திரட்ட முடியாது. A. I. T. U. C. யால் தனது வேலைத்திட்டத்தை மார்க்சிய அடிப்படையில் பகிரங்கமாக கூற முடியுமா? ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றியடைய இதன் வேலைத்திட்டம் என்ன?

ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிலாளர்களுக்கு ஆதரவாக முழு ஏ..டி.யு.சி, சி..டி.யு. தொழிலாளர்களையும் அணி திரட்டல் முடியாது. அது 'ஆகாசக் கோட்டை' என்று மறுத்த ஸ்டாலினிச ஏ..டி.யு.சி. தொழிற்சங்கத் தலைமை இன்று மாதில அளவில் அனைத்து ஏ..டி.யு.சி. அமைப்புகளும், தொழிற்சாலைகளின் கதவடைப்புகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம்! காந்திய போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணி திரட்ட முடியுமாம்! கார்ல்மார்க்சின் வர்க்கப் போராட்டத்திற்கு அணிதிரட்ட முடியாதாம்!

எனவே தோழர்களே!

முதலாளி முத்தையாவுக்குச் சாதகமான, சம்பளவ வெட்டை, 1200 தொழிலாளர்களை நீக்கக் கோரும், 5 வருடம் சம்பளம் பற்றிய பேச்சுக்கு வாய்பூட்டு போடும், I.D.B.I. அறிக்கையை நிராகரிக்க வேண்டும்!

ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சங்கத் தலைமையில் உள்ள ஏ..டி.யு.சி. கோபுக்களுக்குடன் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், சி..டி.யு. ஜனார்த்தனம் சார்ந்த CPI (m) ஸ்டாலினிசத் தலைமை ஜனநாயக மாதர்கள் உண்ணாவிரதப் போராட்டம் என்றும் முதலாளிகளுக்கு முதுகு சொரியும் காந்தியப் போராட்டங்களைக் கைகழுவி விட்டு ஸ்டாண்டர்ட் மோட்டார் உட்பட அனைத்து ஆலைகளையும் வங்கிகளையும் முதலாளிகளுக்கு ஒரு பைசா கூட நஷ்டஈடு எதுவுமின்றி, தொழிலாள வர்க்க ஆதிக்கத்தின் கீழ் தேசியமயம் ஆக்க AITUC, CITU உட்பட அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் மாநாட்டைக் கூட்டி, காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தில் இறங்கும்படி தொழிலாளர்கள் அவர்களை நிர்பந்திக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் தொடுக்கும் சம்பள வெட்டு, ஆட்குறைப்பு, ஆலைமூடல்களை முறியடிக்க ராஜீவ்காந்தியின் முதலாளித்துவ ஆட்சிக்குப் பதிலாக வி.பி. சிங்கின் முதலாளித்துவ அரசாங்கத்தை கொடணு வர முயற்சிக்கும் முதலாளித்துவ கட்சிகளுடன் CPI, CPI (m) ஸ்டாலினிசக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் சேர்ந்து நடத்தும், 'ஆகஸ்டு பந்திற்குப் பலிலாக, முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவை முறித்துக் கொண்டு, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடும்படி ஸ்டாலினிச சிபிஐ. சிபிஐ (எம்) தலைமைகளை தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும்

கைலாசம் —

No comments:

Post a Comment