"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Sunday, July 17, 2016

ஸ்ராலினிச குண்டர்களதும் முதலாளித்துவ போலீசினதும் கூட்டுத்தாக்குதலை தோற்கடி! தோழர் ராம் மீதான பொய் வழக்கை வாபஸ் வாங்கப் போராடு!


[Police arrests ‪SLL-India‬ comrade and files case against him. SLL_India struggles to release him.]

Thozhilalar Paathai, Volume 402 (File no 404)
March, 1991

பி அண்டு சி ஆலைமூடல் அபாயத்துக்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் டிராட்ஸ்கிசத் தொழிலாளர் அணியின் சார்பில் 1989 சென்னைத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் ராம் மீது சி.பி.எம். ஸ்டாலினிச குண்டர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதலின் பின்னர் போலீசார் தோழர் ராமை கைது செய்து செக்சன் 75ன் கீழ் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை உடனடியாக வாபஸ் வாங்கும்படி சென்னைத் தொழிலாளர் சங்கமும் இதர தொழிற்சங்க அமைப்புகளும் முன் வரவேண்டுமென்று டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் சோசலிசத் தொழிலாளர் கழகமும் அறைகூறுகின்றது.

தோழர் ராம் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்திய ஸ்டாலினிச குண்டர்களை கைது செய்யாமல், தாக்கப்பட்டவரை கைது செய்து அவர் மேல் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தார் என்று போலீசார் வழக்குத் தொடர்ந்திருப்பது ஸ்டாலினிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையிலான நெருக்கமான உறவை பிரதிபலிப்பதாக உள்ளது. மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைமூடல்கள், ஆட்குறைப்புகள் ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளாக்கப்படுவதற்கு சிபிஎம் சிபிஐ அரசியல் தலைமைகளும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளான சிஐடியு யும் ஏஐடியுசி யும் துணையாக இருந்தன. அது போலவே சென்னையில் பின்னி இன்சினியரிங். எம்.எப்.எல்., மெட்டல்பார்க்ஸ் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் போன்ற பல ஆலைகளில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும் ஆலைமூடல்களுக்கும் வழி வகுத்து கொடுத்தனர்.

இவ்வாறாக சிபிஐ சிபிஎம் கட்சித் தலைமைகளும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளும் செயல்படுவதற்கு காரணம் அவர்களின் வேலைத்திட்டம் திவாலாகி மடிந்து கொண்டிருக்கும் லாப உற்பத்தி முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவது அல்ல. அதனால் முதலாளித்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியின் போது வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்துவதற்கு பதிலாக தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களை பலியாக்க முதலாளித்துவ அணியினருடன் கை கோர்த்து தேசிய ஐக்கியம் மத சார்பின்மை போன்ற கோஷங்களை எழுப்பி வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புகின்றனர்.

மேலும் இன்றைய ஆழமான இந்திய முதலாளித்துவ, பொருளாதார நெருக்கடி நிலைமையில் செத்து மடியும் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் தேசிய முன்னணியுடன் கூட்டரசாங்கம் அமைக்க தயாராக இருப்பதாக சிபிஐ தலைமை அறிவித்துள்ளது. அதே வேளை சிபிஎம் தலைமை, தேசிய முன்னணி ஸ்திரமான ஆட்சி அமைக்க இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்டாலினிசத் தலைமைகளின் எதிர்புரட்சிகரமான வேலைத்திட்டத்துக்கு எதிராக மாற்று சோசலிச வேலைத்திட்டத்திற்காக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடி வருகிறது.

இதன் காரணமாகவே முதலாளித்துவ ஏஜண்டுகளான ஸ்டாலினிச அதிகாரத்துவம் குண்டர்களின் பலாத்காரம் மூலம் உண்மையான மார்க்சிஸ்டுகளை—டிராட்ஸ்கிஸ்டுகளை மௌனமாக்க முயற்சிக்கின்றனர்.

அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள டிராட்ஸ்கிச இயக்கத்தை கொலை மிரட்டல் மூலம், குண்டர் தாக்குதல்களின் மூலம் மௌனமாக்க முடியாது. ஸ்டாலினிஸ்டுகளின் எதிர்ப்புரட்சிகர அரசியலையும், தொழிற்சங்க காட்டிக்கொடுப்பு வேலைகளையும் அம்பலப்படுத்து. தொழிலாளர்கள், இளைஞர்கள் மத்தியில் புரட்சிகர நனவுள்ள மார்க்சியத்திற்கான போராட்டத்தை சோசலிசத் தொழிலாளர் கழகமும் டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் பன்மடங்கு தீவிரப்படுத்தும்.

No comments:

Post a Comment