"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1992-October. Show all posts
Showing posts with label 1992-October. Show all posts

Tuesday, September 20, 2016

மேற்கு வங்க ஸ்டாலினிச அரசாங்கத்தின் போலீஸ் கற்பழிப்புகளும் ஜோதிபாசுவின் வக்காலத்தும்!


Thozhilalar Paathai 52 (File no 427)
October 1992

-அகிலன்

ஸ்டாலினிச சிபிஐ (எம்) ஜோதிபாசுவின் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் போலீசார், செப்டம்பர் 23ம் தேதியன்று கிழக்கு கல்கத்தாவிலுள்ள புல்பகான் போலீஸ் நிலையத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

 
பத்மினிகளும் நெஹார் பானுக்களும்

அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் தன் கணவர் எதிரிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பத்மினிக்கு நீதி கேட்டு குரல் கொடுப்பதாக பாசாங்கு செய்து வரும் சிபிஐ (எம்) கட்சியும், அதன் மாதல் சங்கங்களும், இளைஞர் அமைப்பும் (DYFI) சரி அனைத்துமே முதலாளித்துவ அரசு எந்திரங்களுள் ஒன்றான போலீசைப் பாதுகாத்து கொண்டு, சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று பிரமைகளை உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் திணித்து வருவதை நாம் ஏற்கனவே பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால் கல்கத்தாவில் நெஹார்பானு போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு குரல் கொடுக்க சிபிஐ (எம்) மாதர் சங்கம், இளைஞர் சங்கம் உட்பட ஒருவர் கூட மூச்சை விடவில்லை. அதோடு மட்டுமல்ல இது சம்பந்தமாக பத்திரிகையாளர் ஒருவர், “இம்மாதிரி (ஹொர்பானு போன்ற நடைபாதைவாசி) பொண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறதா" எனக் கேட்டதற்கு சிபிஐ (எம்) தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான ஜோதிபாசு "(நகரின்) நடைபாதைகளில் வசிக்கும் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியாது" - ஸ்டேட்ஸ்மென் 24 செப்டம்பர் - என்று வெளிப்படையாக அறிவத்ததன் மூலம் உழைக்கும் மக்களுக்கு மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உத்தரவாதம் செய்திருக்கிறார்.

புல்பகான் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்புகளும்

24 பன்கானாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட நெஹார்பானு கை ரிக்ஷா இழுக்கும் கணவனால் கைவிடப்பட்ட நிலையில், வீட்டு வேலைச் செய்து தனது 7 வயது மகனையும் 10 வயது மகளையும் காப்பாற்றி வருகிறார்.

செப் 23ம் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்கு புல்பகான் போலீஸ் நிலைய கான்ஸ்டபிள் நீல்கமல் கோஷ், தூங்கிக் கொண்டிருந்த நெஹார் பானுவை எழுப்பி, வழக்கு சம்பந்தமாக அவள் தேவைப்படுவதாகவும், உடன் வருமாறும் அழைத்தான். தனது சக நடைபாதை வாசிப் பெண்ணின் வழக்கு சம்பந்தமாக அங்கு அவள் பலமுறை சென்றிருக்கிறார். இருப்பினும் முடிந்து போன அந்த வழக்குக்காக கான்ஸ்டபிள் கூப்பிட்டதும் நெஹார்பானுவுக்கு சந்தேகம் வந்து வர மறுத்திருக்கிறார்.

நீல்கமல் கோஷின் முயற்சி எடுபடாமல் போகவே, போலோநாத் எனும் கான்ஸ்டபிள் டிரைவரையும், சனாதன்முரு எனும் கான்ஸ்டபிளையும் அனுப்பி நெஹார் பானுவை அழைத்து வருமாறு கூறியிருக்கிறான். போலீஸ் வாகனத்தைக் கண்டதும் நெஹார் பானு அலறியிருக்கிறார். அப்படியும் அவரை விடாமல் பலாத்காரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கு நீல்கமல் கோஷ் அவரை முதலில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பிறகு அங்கு குடிபோதையுடன் இருந்த காளிபடாமுடு சாதன் பௌமிக், ரபிலோசன் மகதா ஆகி மூன்று கான்ஸ்டபிள்களும் நாசம் செய்துவிட்டு அதிகாலை 2 மணிக்கு மீண்டும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி வந்து நடைபாதையிலேயே அவளைத் தள்ளிவிட்டு போய் விட்டனர்.

விஷயம் வெளியில் அம்பலமாகியதும், நெஹார் பானுவை சமூக சேவை நிறுவனத்தையும் எதிர்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களையும் தடுத்தது ஸ்டாலினிஸ்ட் ஜோதிபாசுவின் போலீஸ். இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக மிரட்டியதுமே ஒரு மணி நேரம் கழித்து சந்திக்க அனுமதித்தனர். ஏற்கனவே சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது மகனுடன் தனக்கு நேர்ந்த கதியையும் எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் நெஹார் பானுவை போலீஸ் நிர்பந்தப்படுத்தி, அந்த போலீஸ் கிரிமினல்களை நிரபராதி என விடுவிப்பதற்கு அறிக்கை வாங்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது. தொடக்கத்தில் டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் பதவி வகிக்கும் அதிகாரி மருத்துவ பரிசோதனை சம்பந்தமாக முரண்பட்ட தகவல்களை அளித்திருக்கிறார். இதுவும் போலீஸின் சதி முயற்சியை ஊர்ஜிதப்படுத்துகிறது.

மேற்கு வங்க போலீஸ் கற்பழிப்புகள்

போலீஸ் துறையைத் தனது கையில் வைத்திருக்கும் ஸ்டாலினிஸ்ட் ஜோதிபாசு "இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். அத்துடன் மட்டுமல்லாமல், இந்த கற்பழிப்பு சம்பந்தமாக எந்தவித கருத்தும் கூறாமல், உயர் போலீஸ் அதிகாரி "உரிய நடவடிக்கை" எடுத்ததற்காக பாராட்டைத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினிச சிபிஐ யின் பாராளுமன்ற உறுப்பினர் கீதாமுகர்ஜி கூடுதல் DGP க்கு விடுத்த கடிதத்தில், மிட்னாப்பூரின் பிங்லா பகுதியைச் சேர்ந்த ஜாசோராஜ்பூர் கிராம ஆதிவாசிப் பெண்ணை, கிராமத் தலைவரின் மகனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பின்னரும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததையும் அதே போல் இன்னொரு ஆதிவாசிப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவளது குடிசை அழிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலதுசாரி முதலாளித்துவ பங்காளராக சீரழியும் ஸ்டாலினிசம்

உழைக்கும் மக்களை ஒடுக்க போலீசை நவீனப்படுத்தி வரும் ஸ்டாலினிச ஜோதிபாசுவின் அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சர்வதேச ரீதியாக ஸ்டாலினிசம் எதிர்ப்புரட்சி முகாமுக்கு போய்விட்டது என்றார் ட்ராட்ஸ்கி. இன்று சர்வதேச ரீதியாக ஸ்டாலினிஸ்டுகள் பண்பியல் ரீதியாக மாற்றம் அடைந்து ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதியாக மாறி விட்டனர்.

ஜோதிபாசு தனது மகனை முதலாளியாக்கி அரசு செலவின் லண்டன் சுற்றுப்பயணம் செய்து, நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதிநிதியாக NRI முதலாளிகளுக்கு இந்தியாவில் முதலீடு செய்யும்படியும், குறிப்பாக மேற்கு வங்கத்தில் சுரண்ட வரும்படியும், அதற்கு ஒத்துழைப்பு தருவதாகவும் சுவராஜ் பாட்டீலுக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரசின் வேட்பாளர் சர்மாவுக்கு ஆதரவளித்து முதலாளித்துவ அரசாங்கத்தைப் பாதுகாத்து வரும் ஸ்டாலினிச சிபிஐ (எம்) கட்சி பஞ்சாப், அசாம், காஷ்மீரில் இராணுவ அரச பயங்கரவாதத்திற்கு முழு ஆதரவு தருவதோடு தான் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தை உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராகத் திருப்பி வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் இந்த போலீசின் பாலியல் பலாத்காரங்கள்.

முதலாளித்துவ போலீஸ் இராணுவத்தை கலை

முதலாளித்துவ அரசு எந்திரங்களை நொறுக்காமல் பத்மினிக்களுக்கும், நெஹார் பானுகளுக்கும் விமோசனம் கிடையாது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் மூலம் அல்லாமல் முதலாளித்துவ அரசு எந்திரங்களை நொறுக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்காமல் சோசலிசப் புரட்சி சாத்தியமில்லை. அத்தகைய தலைமை நெருக்கடியை தீர்ப்பது, தொழிலாள வர்க்கத்துக்குள் டிராட்ஸ்கிச தலைமையைக் கட்டுவதிலும், ஸ்டாலினிச துரோகத் தலைமைகளை தொழிலாள வர்க்க இயக்கத்திலிருந்து உடனடியாக வெளியேற்றுவதிலுமே தங்கியிருக்கின்றது.

சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடு!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் பின்வரும் வேலைத் திட்டத்தை முன் வைக்கிறது.

ஃ முதலாளித்துவ போலீஸ்-இராணுவத்தை கலை!

ஃ தொழிலாளர் பாதுகாப்பு படையணிகளைக் கட்டு!

ஃ பாலியல் பலாத்காரத்தை விசாரணை செய்வதற்கு தொழிலாளர்-இல்லத்துப் பெண்கள் ஆகியோர் கொண்ட மக்கள் விசாரணைக் குழுவை அமை!

ஃ முதலாளித்துவ அரசு எந்திரத்தைத் தூக்கிவீசி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ காலவரையற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகு!

ஃ ஸ்டாலினிச, சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகளை தொழிலாள வர்க்க இயக்கத்திலிருந்து உடனடியாக வெளியேற்று!

ஃ சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டு!

Sunday, September 18, 2016

மதுரை கோட்ஸ் ஆலைத் தொழிலாளர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு! தொழிலாளர் பாதுகாப்பு குழுவை அமை!


Thozhilalar Paathai 52 (File no 427)
October 1992

சுந்தரம்

நெல்லை மாவட்டம் விக்கரமசிங்கபுரம் மதுரை கோட்ஸ் ஆலை தொழிலாளர்கள் ஆலை தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக போலீசாரால் சுடப்பட்டதை சோசலிசத் தொழிலாளர் கழகம் மிகவும் வன்மையாக கண்டனம் செய்வதோடு, தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தொழிலாளர் பாதுகாப்பு அணிகளை அமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றது.

அக் 17ம் தேதி தங்களின் போனஸ் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்த தொழிலாளர் மீது ஜெயலலிதா அரசாங்கத்தின் போலீஸ் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர். மதுரை கோட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் மதுரை, திருச்சி, விக்கிரமசிங்கபுரம் தூத்துக்குடியிலும் கேரளத்தில் கொரட்டியிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளது. இந்த வருடம் கம்பெனிக்கு கொழுத்த லாபம் வந்தும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நியாயமான போனஸை கொடுக்க மறுத்தது, இதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். விக்கிரசிங்கபுரத்தில் உள்ள தொழிலாளர்களின் ஊர்வலத்தில் முதலாளித்துவ அரசு எந்திரம் தடியடி பிரயோகமும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் மதுரை கோட்ஸ் நிறுவனத்தின் - தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மரண நெருக்கடியில் உள்ள இந்த முதலாளித்துவ அமைப்பில்-சந்தைக்கான உற்பத்தியில்-மலிந்த கூலிக்காகவும், கச்சாப் பொருட்களுக்காகவும் வெறி பிடித்த நாய் போல் அலைகின்றனர். இந்த நிலையில் ஒன்றை ஒன்று விழுங்கும் நிலையில் பன்னாட்டு பகாசுர கம்பனிகள் தொழிலாளர்களை கோரமாக சுரண்டவும், தொழிற்சங்க உரிமைக்கு வேட்டு வைக்கவும் முற்படுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே துப்பாக்கிச் சூட்டிற்கு பின் தொழிற்சங்க அலுவலத்தை திறப்பதற்கு போலீஸ் தடை செய்துள்ளது.

ஸ்டாலினிச கட்சிகள்

இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து எந்த ஆபத்தும் வராமல், சந்தர்ப்பவாத அடிப்படையில் மாறி மாறி முதலாளித்துவ கட்சிகளை ஆதரித்துக் கொண்டு இருக்கும் ஸ்டாலினிச கட்சிகளும் அதன் தொழிற்சங்க பிரிவுகளான CITU, AITUC யும் தொழிலாள வர்க்க இயக்கத்தில் இருந்து கொண்டு, எந்த ஒரு போராட்டத்தையு் துரோகத்தனமாக காட்டிக் கொடுத்து தொழிலாள வர்க்கத்தை சோர்வடைய செய்து நிராயுதபாணியாக்கி வருகின்றார்கள். இந்த துப்பாக்கி சூட்டிற்காக 22ம் தேதியன்று தமிழகம் முழுவதுமுள்ள ஆலை வாயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுவது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் போராட்டத்தில் தன் பிடியை விட்டு நழுவி போய் விடாமல் இருக்கவே ஆகும். (.ம்) நரசிம்மராவின், ஜெயலலிதாவின் அரசுகள் கொண்டு வந்த புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்து நாடு பரந்த அளவில் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துடன் முடிந்தது. முதலாளித்துவ அரச எந்திரத்தின் ஒரு பகுதியான போலீசை, “திருத்தி அமைக்க வேண்டும்" என்றும் "கடிவாளத்தை மீறிய குதிரையாக" போலீஸ் இருக்கின்றது என்று கூறும் இந்த கட்சி தலைமைகள் இவர்கள் ஆளுகின்ற மேற்கு வங்கத்தில் நடக்கும் போலீஸ் அராஜகத்திற்கு என்ன கூறுவார்கள்.

முதலாளித்துவ சொத்துடமையை தனியுடைமையை காப்பாற்றும் ஆயுதம் தாங்கிய பிரிவாகிய போலீசை ஸ்டாலினிச தலைமைகள் போலீஸ் துறை என்றும் அதை சீரமைக்க வேண்டும் என்றும் கூறுவது அரசாங்கத்தின் மற்ற துறைகளை போல் இதுவும் ஒரு துறை என்ற பிரமையை தொழிலாளர்களிடையே ஊட்டுவதற்காகும். தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளித்துவத்தின் அரசு இயந்திரத்தை சீர்திருத்த முடியும் என்று எதிர்புரட்சிகர ஸ்டாலினிச தலைமைகள் பரப்பும் பிரமையை நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு அணிகளை கட்ட வேண்டும். முதலாளித்துவ அரசு இயந்திரத்தை தொழிலாள வர்க்க பலத்தினால் உடைத்தெறிந்து மாற்று புரட்சித் தலைமையை கட்டும் போராட்டத்துடன் இது பின்னி பிணைந்ததாகும்.