"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1990-February. Show all posts
Showing posts with label 1990-February. Show all posts

Saturday, November 24, 2018

மகளிர் மேம்பாட்டு கழக தொழிலாளர் போராட்டம்


Thozhilalar Paathai Volume 029
February 1990

S. ராம்

கடந்த ஆறுவருட காலமாக குறைந்த சம்பளத்தைக் கொடுத்து தங்களது உழைப்பைச் சுரண்டியும், கழிவறை, குடிநீர் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமலும் விடுப்புகால உரிமைகளை வழங்காமலும் தாங்கள் கொத்தடிமைத்தனமாக நடத்தப்படுவதற்கு எதிராகவும், ஊதிய உயர்வு கேட்டால் அச்சகங்களை தனியாருக்குத் தாரைவார்க்க சதித்திட்டமிடும் முயற்சிக்கு எதிராகவும் பெண்கள் முன்னேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களுக்கு அனைத்துத் தொழிலாள வர்க்கமும் தங்களது ஒன்றுபட்ட வர்க்க ஆதரவினைத் தர வேண்டும்.

1984 ஆம் ஆண்டு மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசால் தொடங்கப்பட்ட மகளிர் மேம்பாட்டுக் கழகம் கிண்டி தொழிற்பேட்டே, தாம்பரம் சானிட்டோரியம், சிவகாசி ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.

சென்னையில் 150 தொழிலாளர்களும் சிவகாசணியில் 150 தொழிலாளர்களும் (உடன் ஊனமுற்றோர்) இதில் வேலை செய்து வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள அச்சகத்தில் ஐந்து ஆண் தொழிலாளர்களுடன் பெண் தொழிலாளர்களும், மின்னணுவியல் உபகரணங்கள் தயாரித்தலிலும், தாம்பரம் சானிட்டோரியத்தில் கல்வி உபகரணங்கள் தயாரித்தலிலும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

ஆவடி தொழிற்சாலைக்கு வேண்டிய கேபிள்பார்ம் (Cableform), மற்றும் டி.வி. காயில் (T.V. Coil), Printed Circuit Board போன்றவற்றை செயது கொடுக்கும் தொழிலாளர்கள் மிகவும் கோரமாகச் சுரண்டப்படுகின்றார்கள். அரசுத் துறைகளுக்கு வேண்டிய புத்தகங்கள், பற்றுச்சீட்டுக்கள், ஆவின் பால் வழங்கும் அட்டைகள், கோஃஆப் டெக்ஸ் கவர்கள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுத்த போதிலும், இவர்கள் குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதுடன், கொத்தடிமைகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றனர். நிர்வாகமும் மாறி மாறி வரும் முதலாளித்துவ அரசாங்கங்களும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்குப் பின்னர் கன்சாலிடேட் சம்பளமாக மாதம் ரூ. 300- தான் கொடுத்து வருகின்றார்கள்.

ஆனால் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களோ தங்களது ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து 11-12-1989 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்.

இவ்வளவு பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் கழிவறை வசதியே இல்லை. குடிதண்ணீர் வசதியும் கூடக் கிடையாது. இவர்களது உழைப்பை மட்டும் ஒட்டச் சுரண்டும் மாறி மாறி வந்த மூன்று முதலாளித்துவ அரசாங்கங்களும் நிர்வாகமும் இதுவரையில், குறைந்தபட்ச ஊதியங்களைக் கூட கொடுக்கவில்லை.

பயிற்சிக்காலம் ஒரு வருடம் தான் என்று முதலில் அறிவித்த நிர்வாகம் 2 1/2 ஆண்டுகள் வரை அதனை அப்படியே நீடித்தனர். பயிற்சிக்காலத்தில் உதவித்தொகை என்று ரூ. 200 மட்டுமே கொடுத்தனர். பயிற்சிக் காலத்தில் ஒரு நாள் லீவு எடுத்தாலும் போதும், அதற்குத் தண்டனையாக மேலும் 2 நாட்களையும் சேர்த்து மொத்தத்தில் மூன்று நாள் சம்பளத்தை அந்த உதவித் தொகையில் வெட்டி எடுத்துக் கொள்வார்கள். 5 நிமிடம் காலதாமதமாகி விட்டாலும் போதும் அன்றைக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பயிற்சியை முடித்தாலும் சரி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் கூட கொடுப்பதும் கிடையாது.

அதிகாரிகளின் ஆணவம்

இவர்களுக்கு வருகின்ற அரசு அதிகாரிகளும், மேலாளர்களும் தங்களின் அதிகாரத்துவ நலன்களைப் பேணுவதில் குறியாய் இருக்கிறார்களேயொழிய தொழிலாள வர்க்கத்தின் குறைகளை, தேவைகளை, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இதுவரை உருப்படியாய் முயற்சி எடுக்கவில்லை.

கழிவறை வசதி செய்து தரக்கேட்டதற்கு "மௌண்ட் ரோடிலுள்ள சித்தாளுகளை எல்லாம் போய் பாருங்க. அவர்களெல்லாம் அப்படியா பயன்படுத்துகிறார்கள்?” என்று தலைக்கணம் பிடித்த ஐ..எஸ். பெண் அதிகாரி செல்வி ரமேஷ் என்பவர் ஆணவத்தோடு கூறியிருக்கிறார்.

தன்னெழுச்சியான போராட்டங்கள்

2 1/2 வருடமாகியும் பயிற்சிக் காலத்தை நீடிப்பதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர் தொழிலாளர்கள். அவர்களை சமாதானம் செய்வதற்காக அப்போது (1986ல்) விழா ஒன்றுக்கு வருகை தரவிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா விழா மேடையிலேயே உங்கள் பணி நியமனம் பற்றி அறிவிப்பார் என்று கூறினார்கள். விழாவிற்கு வருகை தந்த பெண் அமைச்சர் பெண் தொழிலாளர்களை அணுகி அவர்களைப் பற்றி அறிய அக்கறை கொள்ளவில்லை. அதிகாரிகளும் தொழிலாளர்களை அமைச்சர் அருகே செல்லவிடாமலும் பார்த்துக் கொண்டார்கள். 'அமைச்சரிடம்' இவர்களெல்லாம் அன் எஜூகேட்டட் (படிப்பறிவில்லாதவர்கள்) என்று கூறிவிட்டார்கள். அதிகாரிகள் ஏமாற்றியது கண்டு கொதித்தெழுந்த தொழிலாளர்கள் அப்போதைய பொது மேலாளர் நாராயணனை அணுகிக் கேட்டு, உருப்படியாக எதுவும் சொல்லாமல் மழுப்பி போது விரக்தியுற்ற தொழிலாளர்களில் சிலர் 'அப்ப வாங்கடி' என்று தங்கள் சக தோழர்களை அழைக்கையில், 'அப்ப போங்கடி' என்றார் அந்தத் திமிர்பிடித்த அதிகாரி.

முதல் வேலைநிறுத்தம்

தாங்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது கண்டும் ஏமாற்றப்படுவது கண்டும் வெகுண்ட தொழிலாளர்கள் அடுத்த நாளே வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். நிர்வாகம் விரைந்து வந்து 150 தொழிலாளர்களுக்கு பணி ஆணைகளை (Worker order) கையில் கொடுத்து, அடிப்படை சம்பளம் ரூ. 220 என்றும் பஞ்சப்படி 30 என்றும் போட்டு ரூ. 259 ஐ மாத சம்பளமாகக் கொடுக்க முன்வந்தது.

தொடர்ச்சியாகத் தொழிலாளர்கள் போராடியதால் ரூ. 259 லிருந்து 285 ஆகவும் 300 ஆக பின்னர் உயர்த்தப்பட்டது.

தொழிலாளர்களுக்கு சம்பளம் பற்றி எழுதுவது, உறையில் போடுவது ஆகிய எல்லா வேலைகளையும் இந்தத் தொழிலாளர்களே செய்து வருகிறார்கள். அதற்கென்று எழுத்தர் எவரும் அமர்த்தப்படவேயில்லை. ஸ்வீப்பரும் கூட நிச்சயிக்கப்படவில்லை.

எக்ஸ் கிராசியா (Exgratia) பெற்று வந்த தொழிலாளர்களுக்கு அதுவும் நிறுத்தப்பட்டது. மகளிர் மேம்பாட்டுக் கழகம் லாபம் நடத்தும் நிறுவனம் ஆகிவிட்டபடியால் இனிமேல் போனால்பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அரசு ஆணையின்படி கிடைக்க வேண்டிய ரூ. 25 இடைக்கால நிவாரண தொகையை ஏற்கனவே தொழிலாளர்கள் பெற்று வந்த ரூ. 300 உடன் சேர்த்து, 325 ஆக கன்சாலிடேட் சம்பளமாக (Consolidated Pay) போட்டுக் கொடுத்தது. ஆனால் தொழிலாளர்கள் அந்த இருப்பத்தைந்து ரூபாயையும் ஒன்று சம்ளத்துடனோ அல்லது பஞ்சப்படியுடனோ சேர்த்தாலன்றி தாங்கள் வாங்கமாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

1 கிலோ அரிசி ரூபாய் ஐந்துக்கு விற்கும் வேளையில், பஸ், ரயில், பயணத்திற்கே மாதம் ரூ. 75 செலவழித்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டு வாடகை தான் கொடுக்க முடியுமா? ஒருவேளைச் சாப்பாடு தான் நிறைவாக சாப்பிட முடியுமா?

ஏனைய அரசுத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களோடு ஒப்பிடுகையில், 'மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகிறார்கள் என்பது தெரியும். ஒரு அரசு கடைநிலை ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 750, மொத்த சம்பளம் ரூ. 1672.50. ஆனால் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமோ ரூ. 235 தான் மொத்தச் சம்பளமோ ரூ. 300 தான்.

தொழிற்சங்கம் அமைத்தலும் போராட்டமும்

மேலும் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தங்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும் தொழிலாளர்கள் 1988ல் தொழிற்சங்கத்தை அமைத்தனர். இச்சங்கம் சி..டி.யுவின் கீழுள்ள இன்டஸ்டிரியல் எஸ்டேட்ஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனுடன் இணைக்கப் பெற்றுள்ளதுடன், தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தொழிற்சங்கத் தலைவர் சென்றுபேசும் பொழுதும் கூட அலட்சியப்படுத்தி வருகின்றனர் அதிகாரிகள்.

தங்கள் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியசட்டத்தை அமல்படுத்தவும், அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிவறை வசதிகளை விடுப்புகால அனுமதி ஆகியவற்றை நிறைவேற்றவும் கோரி 1989 ஜூன் மாதம் ஒரு அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். பின்னர் தொடர்ந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள் நடாத்தியும் எவ்வித பலனும் ஏற்படாததால் 1989 டிசம்பர் 11 முதல் வேலைநிறுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

தொழிலாளர் நல (?) ஆணையகமும் தொழிலாளர் போராட்டமும்

பின்னி பீச் என்ஜினியரிங், ஸ்டாண்டர்ட் மோட்டார் போல முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சாதகமாகவே ஆலோசனைகளும் தீர்ப்புகளும் வழங்கி வரும் ஆணையகம், தொழிற்சங்கம் போட்ட வழக்கில்—பேச்சு வார்த்தையின் போது 'சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக் கீழே உள்ளவர்களுக்காக பயிற்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், லாபநோக்கிற்காக நடத்தப்படவில்லை என்றும் எனவே (வறுமைக் கோட்டுக் கீழேயே அழுந்திக்கிடக்க வேண்டும்) ஒன்றும் செய்ய முடியாது. நீங்களே கூட்டுறவு முறையில் நடத்துங்கள் என்று கையை விரித்து விட்டது.

உண்மையில் இங்கு ஆவின், கோஆப்டெக்ஸ், டாப்கோ, சமூகநலத்துறை போன்றவற்றுக்காக அச்சு வேலைகள் மின்னணுவியல் பொருட்கள் ஆகிய அனைத்தும் லாபத்திற்காக செய்யப்படுகையில், மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களின் உழைப்பு அதற்காக கறந்து எடுக்கப்படுகையில் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தொழிலாளர்கள் மட்டும் சேவை நோக்கில் தங்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அனுமதிக்க வேண்டுமாம்.

முதலாளித்துவ அரசின் கபட நாடகம்

லாபநோக்கிற்கான முதலாளித்துவ உற்பத்தியில் போட்டாபோட்டியில், கூட்டுறவு முறையில் நடத்த முடியாது என்பது நன்கு நெரிந்ததே. 'கூட்டுறவு முறையில் நீங்களே நடத்துங்கள்' என்று அமைச்சர் சுப்புலட்சுமியும் தொழிலாளர் நல (?) ஆணையமும் கூறிவருகின்ற அதேவேளையில் கிண்டியில் உள்ள அச்சகத்தையும், சிவகாசியில் உள்ள அச்சகத்தையும் தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான சதித்திட்டத்தை முதலாளித்துவ தி.மு.. அரசாங்கம் தீட்டி வருகிறது.

முதலாளித்துவ அரசாங்கமும் ஸ்டாலினிச தொழிற்சங்கமும்

ஸ்டாலினிச சி..டி.யு. தொழிற்சங்கத் தலைமைகளும் தர்ணாக்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று கோட்டை முன்பும், தொழிலாளர் நல (?) ஆணையகம் முன்பும் நடத்தி முதலாளித்துவ தி.மு.. அரசின் மனம் நோகாதவாறு போராடி வருகிறார்கள்.

வாயில் பந்தல் போடக் கூடாது, நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது, தொழிற்பேட்டைக்குள் பந்தல் போடக் கூடாது என்றும் தொழிலாளர்கள் ஆலைவாயில்களின் முன் ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தக் தடைவிதித்து அவற்றை 'எழிலகம்' முன் நடத்தக் கூறிவரும் தொழிலாளர் விரோத தி.மு.. அரசாங்கத்தோடு ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடி வரும் சி.பி.. (எம்) ஸ்டாலினிசத் தலைமைகள் புதுவை, பழனி, தேர்தல்களிலும் தி.மு.. ஜனதா தளம் போன்ற முதலாளித்துவக் கட்சிகளையே மீண்டும் அரியணையில் ஏற்றுவதற்கு தலைகீழாக நின்று உழைத்து வருகிறார்கள்.

ஏதோ அரசு அதிகாரிகள் தவறுகள் செய்வது போலவும் முதலாளித்துவ அரசாங்கம் ஏதும் அறியாத அரசாங்கம் போலவுமான ஒரு பிரமையை ஸ்டாலினிசத் தொழிற்சங்கத் தலைமைகள் தொழிலாளர்களிடையே விதைத்து வருகிறார்கள். தொழிலாளர் நல (?) ஆணையரோ அல்லது காவல்துறை அதிகாரியோ எவராக இருப்பினும் முதலாளித்துவ அரசாங்கத்தின் அரச எந்திரத்தின் பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்குத் தெரிந்தே செய்யப்படுகின்றன என்பது தான் கண்முன் நடக்கும் உண்மை.

கொத்தடிமைத்தனத்திற்கும் கோரச்சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ள தொழிலாள வர்க்கத்தைத் தனிமைப்படுத்தி, ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், பின்னிபீச் என்ஜினியரிங் மெட்டல்பாகஸ், பி&சி மில் போன்ற நிலைக்கு ஆளாகவிடாமல், வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தொழிலாளர்கள் பின்வரும் வேலைத்திட்டத்தில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஃ அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், அரசு குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை நிறைவேற்றவும், அச்சகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதைத் தடுக்கவும் போராடிவரும் மகளிர் மேம்பாட்டுக் கழகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாள வர்க்கத்தையும் ஒருபொது வேலைநிறுத்தத்தில் இறக்கிப் போராடுமாறு (CITU) சி..டி.யு (AITUC) ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் முன்னெடுக்க தொழிலாளர்களுக்கான பொருளாதார நிதி உதவிகளைத் திரட்டித் தருமாறு சி..டி.யு, ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ இந்தியா முழுவதும் கதவடைப்பு செய்யப்பட்டு உள்ள 800 க்கும் மேற்பட்ட ஆலைகளைத் திறக்கவும் ஆட்குறைப்பு ஆலைகள் மூடல் இவற்றை முறியடிக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தையும் அனைத்து ஆலைகளையும் வங்கிகளையும் ஒரு பைசா கூட நஷ்டஈடு கொடுக்காமல், தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் அரசுடைமையாக்க அகில இந்திய அளவில் ஒரு காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தில் இறங்குமாறு சி..டி.யு.சி., ..டி.யு.சி. தலைமைகளை நிர்பந்தி!

ஃ சி.பி.. (எம்), சி.பி.., ஸ்டாலினிசத் தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான தமது உறவினைத் துண்டித்து கொண்டு சோசலிச வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தும் ஒரு தொழிலாளர் விவசாய அரசாங்கம் அமைக்கப் போராடுமாறு நிர்பந்தி!

ஃ நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாள கழகத்தில் இணைந்து தொழிலாளர் ஆட்சி அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுங்கள்!

Friday, November 23, 2018

காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை பேணு! இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்களை காஷ்மீரில் இருந்து வாபஸ் வாங்கப் போராடு! இந்திய உபகண்டத்தில் ஒரு ஐக்கிய சோசலிச குடியரசுகளை அமைக்கப் போராடு!


Thozhilalar Paathai Volume 029
February 1990

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள சூடான பிரச்சனைகளான பலகோடிக்கணக்கான வேலையின்மை, லட்சக்கணக்கான ஆலைமூடல்கள், ஆட்குறைப்புகள், சம்பள வெட்டுகள், விலைவாசியேற்றம் போன்றவற்றினால் தொழிலாளர்கள், வறிய விவசாயிகள், இளைஞர்களிடமிருந்து இருநாட்டு திவாலான முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிராக வளர்ச்சியடையும் எதிர்ப்புகளை திசை திருப்பவும், வர்க்கப் போராட்டங்களை குரூரமாக நசுக்குவதற்காக போலீஸ்-ராணுவ ஒடுக்குமுறை அரசு இயந்திரங்களைப் பலப்படுத்தவும் இந்தியா, பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்கள் தட்டி எழுப்பும் யுத்த தேசியவெறிக் கூச்சல்களை இந்தியா, பாகிஸ்தான் தொழிலாள வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய அடிப்படையில் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் அறை கூவுகிறது.

ஜம்மு-காஷ்மீர் சம்பந்தமாக இந்தியா, பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களின் பொய் பித்தலாட்டங்கள் நிறைந்த உரிமை கோரல்களை தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை பேணி இந்திய உபகண்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும்-இந்திய (இந்து-முஸ்லீம்) தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டுச் சதியாலும் உருவாக்கப்பட்ட மதவாத அரசு அமைப்புகளை தூக்கி வீசி இந்திய உபகண்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வறிய விவசாயிகளின், ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவுடன் ஸ்தாபிக்க போராட வேண்டும். உபகண்டத்தில் உலக சோசலிசக் குடியரசின் ஒரு பகுதியாக ஐக்கிய சோசலிசக் குடியரசுகள் அமைக்க போராட வேண்டும்.

உண்மை என்னவென்றால் ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இந்தியா, பாகிஸ்தான் இருநாட்டு முதலாளித்துவ ஆட்சிகளும் தமது ராணுவத்தினால் ஒடுக்கி வருகின்றன. காஷ்மீர் சம்பந்தமாக இந்தியா, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் எழுப்பும் கோரிக்கைகள் மோசடியானவை என்பதை ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பெயரில் செயற்படும் தேசியவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அமனுல்லாகானின் அறிக்கை மேலும் அம்பலப்படுத்தி உள்ளது. “போர் நிறுத்த எல்லைகளைத் தாண்டி செல்ல வேண்டாம் என்று நான் நமது மக்களுக்கு இராணுவச்சட்ட ஆணை மாதிரியான ஒன்றை விடுத்துள்ளேன். 1,400 கிலோமீட்டர் போர்நிறுத்த எல்லைகளுக்கு குறுக்கே ஒரு தொடராக ஆங்காங்கே நடைப்பெறும் சிறுசண்டைகள் ஒரு தொடர்ச்சியான பதில் தாக்குதலை உண்டு பண்ணி போராக வெடிக்கலாம். அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருக்கடி நிலைமைகளை உண்டு பண்ணக்கூடும், அது எமக்கு சாதகமானதாக இருக்காது. ஒரு போர் மூளுமாயின் நாம் நடுவிலே நசுக்கப்பட்டு ஒரு பலிக்கடா ஆக்கப்படுவோம்.” (இந்தியன் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 8, 1990).

காஷ்மீர் மக்களுக்கு டில்லி ஆட்சியாளர்கள் மீதுள்ள வெறுப்பு நவம்பரில் நடந்த மக்களவைத் தேர்தல்களை பெருமளவில் பகிஷ்கரித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் வாக்குப்பதிவே நடைபெறவில்லை. பாரமுல்லா, ஆனந்தநாக் தொகுதிகளில் 3% பேர் தான் வாக்களித்தனர். டில்லி ஆட்சியாளர்கள் காஷ்மீரின் வளர்ச்சி சம்பந்தமாக காட்டி வந்த புறக்கணிப்பினால் அங்கு தொழிற்துறை வளர்ச்சி எதுவுமே இல்லாமல் இருந்து வருகிறது. அதிகரித்து வரும் வேலையில்லா எண்ணிக்கையும், விலைவாசி ஏற்றமும் அங்கு சமூக நெருக்கடியை மேலும் உக்கிரப்படுத்தி உள்ளது.

கடந்த பல மாதங்களாக போலிசாருக்கும் அங்குள்ள இளைஞர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. தேசிய முன்னணி அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரின் மகள் காஷ்மீர் தேசிய இயக்கத்தினரால் கடத்தப்பட்டு, அரசாங்கத்தினால் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமது அமைப்பை சேர்ந்த 5 பேரை விடுவிக்கக் கோரி பணயக் கைதியாக வைக்கப்பட்டார். அந்த 5 பேரும் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்னரே உள்துறை அமைச்சரின் மகள் விடுவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியை ஒடுக்க மேலதிகமான ராணுவம் அனுப்பப்பட்டது. பத்திரிகை தணிக்கையும் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டது. இந்திய அரசாங்கத்துக்கும், அரச படையினருக்கும் எதிரான காஷ்மீர் மக்களின் எழுச்சி பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டது என்றும், காஷ்மீர் இந்தியாவை சேர்ந்த பகுதி என்றும் காஷ்மீர் தொடர்பாக நேருக்குநேர் நின்று சண்டையிட பாகிஸ்தான் விரும்பினால் தகுந்த வகையில் பதிலடி கொடுக்க இந்திய மக்களும், இந்திய ராணுவ வீரர்களும் தயாராகவே இருக்கின்றனர் என்று பிரதமர் வி.பி. சிங் முழக்கம் செய்துள்ளார்.

காஷ்மீரின் சுயநிர்ணய உரிமை நிராகரிப்பு

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி அணுகுகிறார்கள் என்பதை லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக மேலதிகாரி சர்யார்கான் பின்வருமாறு கூறியுள்ளார். “நாம் சுயநிர்ணய உரிமையை பற்றி பேசும் போது நாம் கருதுவது காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைய தீர்மானிக்க வேண்டும். காஷ்மீரின் சுதந்திரம் விளையாட்டின் ஒரு பகுதி அல்ல' காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இருக்க தீர்மானித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாக என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு [Print is not clear] ... இருபகுதியினரும் ஒப்புக் கொண்டு உள்ளனர். காஷ்மீர் மக்கள் செய்ய வேண்டியது என்னவெனில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு பணிந்து செல்வதாகும். இந்த ஒப்பந்தத்திற்கு புறம்பாக நீங்கள் பேசும் ஒரு மூன்றாவது தெரிவின் சாத்தியத்தை என்னால் காண முடியவில்லை" (இந்து, பிப்ரவரி 18, 1990. . 9).

மேற்கூறிய இந்த அறிக்கை பாகிஸ்தான், இந்திய ஆளும் வர்க்கத்தினர் சுயநிர்ணய உரிமை பற்றிய கோட்பாட்டை விபச்சாரம் செய்து காஷ்மீர் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான தேசிய சுயநிர்ணய உரிமையை எப்படி தமது பூட்ஸின் கீழ் போட்டு நசுக்குகின்றனர் என்பது தெளிவாகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தில் 370ம் பிரிவு சேர்க்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்று என அறிவிக்கப்பட்டது. இதன்படி தனிக்கொடி, தனி அரசியல் அமைப்பு தனி அரசியல் நிர்ணய சபை வைத்துக் கொள்ள காஷ்மீருக்கு உரிமை உண்டென்றும் உண்மையான காஷ்மீரிகள் தான் அங்கு சொத்து உடமையாளர்களாக இருக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டது. நேருவின் ஆட்சி காலத்தில் காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்த ஷேக்அப்துல்லா காஷ்மீரின் சுதந்திரம் பற்றி பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று டில்லி அரசை நிர்பந்தித்ததன் காரணமாக அவர் தேசத்துரோகி என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி ஆட்சியின் அடிவருடிகளான பக்ஷிகுலாம் முகமது, சாதிக் ஆகியோர் ஒருவரின் பின் ஒருவராக 1974 வரை காஷ்மீரின் முதல் மந்திரிகளாக இருந்தனர், டில்லியின் பொம்மையாக செயற்பட ஒப்புக் கொண்டதற்கு இணங்க ஷேக்அப்துல்லா சிறையில் விடுவிக்கப்பட்டு டில்லி ஆட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொண்டார். இவ்வாறே ஷேக் அப்துல்லாவின் பின் முதல்வரான பாரூக் அப்துல்லாவும் அதே போல் ஷாவும் காஷ்மீர் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை காட்டிக் கொடுத்தனர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சூழ்ச்சி

கிழக்கில் திபெத்தையும், வட கிழக்கில் சீனாவின் சிங்கியாங் மாகாணத்தையும் வடமேற்கில் ஆப்கானிஸ்தானின் எல்லைகளையும் கொண்டு ஜம்மு-காஷ்மீர் ஒரு மூல உபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பினும், லடாக் பள்ளத்தாக்கில் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்து, முஸ்லீம் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து செய்த சதியின் விளைவாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் மிக இறுக்கமான புரட்சிகர ஐக்கியத்துடன் இணைந்து செயல்பட்ட இந்திய உபகண்டத் தொழிலாள வர்க்கம் மதவாதரீதியில் பிரிக்கப்பட்டு இந்து இந்தியாவும், முஸ்லீம் பாகிஸ்தானும் உருவாக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய பஞ்சாபி வங்காளி தேசிய இனத்தவர்களும் பிரிவினையின் விளைவாக மத அடிப்படையில் கூறு போடப்பட்டன. அந்த சமயத்தில் ஜம்மு காஷ்மீர் தனி ஒரு அரசாங்க ஹரிசிங் என்பபடும் மன்னரால் ஆட்சி செய்யப்பட்டது. இந்திய உபகண்டத் தொழிலாள ஒடுக்கப்படும் மக்களை மதவாத அடிப்படையில் பிரிவினை செய்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேமான ஜம்மு-காஷ்மீர் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் ஒரு தனி அரசாக இருக்க அனுமதிக்கவில்லை. அதனால் 1947, ஜூன் 3ல் மவுன்பட்டன் (பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி) காஷ்மீருக்கு சென்று ஜம்மு-காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக இருப்பது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அப்படியான அரசு பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட மாட்டதென்றும் கூறினார். ஆகஸ்ட் 15, 1947க்குள் இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒன்றுடன் இணைவது பற்றி தீர்மானிக்க வேண்டுமென்று மன்னர் ஹரிசிங்கிடம் கூறப்பட்டது. ஆனால் இது மன்னரால் நிராகரிக்கப்பட்டது.

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பல்வேறு அழுத்தங்களை பாகிஸ்தான் கொடுத்தது. நிலப்பாதை வழியாக காஷ்மீருக்கு செல்லும் உணவு பெட்ரோல், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாகிஸ்தானால் தடுத்து நிறுத்தப்பட்டன. பின்பு காஷ்மீர் மீது பழங்குடி மக்களின் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டது. ஹரிசிங் மன்னர் ஆட்சி ஆபத்தில் இருக்கையில் காஷ்மீரை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜன் இந்தியாவிடம் உதவி கேட்டார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள மன்னர் சம்மதிப்பாராயின் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி சிறீநகரை பாதுகாக்க இந்தியா தயார் என்று கூறப்பட்டது. இந்த நிபந்தனைக்கு காஷ்மீர் பிரதமர் ஒப்புக் கொண்டதற்கு இணங்க இந்திய ராணுவம் காஷ்மீரை ஆக்கிரமித்தது. ஜம்மு-காஷ்மீர் அரசின் ஒரு பகுதியாக இருந்த ஜில்சிட் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பது சம்பந்தமாக 1965ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்மூண்டது. அதன்பின்னர் 1971ல் பங்களாதேசம் சம்பந்தமாக போர்மூண்டது, 1972ல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் சிம்லாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் போர்க்கால கட்டத்தின் போதும் அதைத் தொடர்ந்தும் தொழிலாளர்கள் மேல் வேலைப்பளு சுமத்தப்பட்டது. வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதமாக்கப்பட்டன. அதிக வரிகள் விதிக்கப்பட்டனட. இன்றைய உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பிரமாண்டமான உள்நாட்டு வெளிநாட்டு கடன்களுடன் உலக ஏகாதிபத்திய வங்கியாளர்களின் அடிவருடிகளாக செயற்படும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அவர்களுடைய ஆட்சிக்கு எதிரான தொழிலாளர்களின், ஏழை விவசாயிகளின், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டங்களை திசைதிருப்பவும் நசுக்கவும் இந்து இஸ்லாம் மதவெறிகளை தூண்டிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் இந்துவெறியை தூண்டி இனக்கலவரங்களை உண்டு பண்ணும் வேலையை தேசிய முன்னணி ஆட்சியை தக்க வைக்கும் ஒரு முக்கிய கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி, மிக தீவிர இந்து வெறி அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்றவற்றுடன் சேர்ந்து செய்கிறது. அயோத்தியில் பாபரி மசூதி பள்ளிவாசல் அருகில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அதற்கான தயாரிப்புகளை தேசிய முன்னணி ஆட்சியின் ஆதரவுடன் செய்து வருகிறது. பிப்ரவரி 14ம் தேதி ராமர் கோயிலை கட்ட ஆரம்பிப்பதாக இருந்த திட்டத்தை, விசுவ ஹிந்து பரிஷத்தும், ராம ஜன்மபூமி முக்தி யக்ஞ சமிதியும் பிரதமருடன் நடத்திய விவாதத்தின் பின் 4 மாதங்கள் ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளன. இந்து மதவெறி அமைப்புகள் எதிர்ப்பார்த்தது போல் இது நெருக்கடியிலுள்ள டில்லி ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் உதவியாக இருந்தது. இஸ்லாம் மதவெறி அமைப்புகள் இதனையும், காஷ்மீரில் நடக்கும் இந்திய ராணுவத்தின் அட்டூழியத்தையும் தமது பிற்போக்கு மதவெறி பிரச்சாரத்தை முன்னெடுக்க பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பகுதி என்பதை மாஸ்கோ ஸ்டாலினிச அதிகாரத்துவமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒப்புக் கொண்டுள்ளதாக டில்லி ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். இந்திய உபகண்டத்தில் தொழிலாளர்களின் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கி உலக ஏகாதிபத்தியத்தின் தெற்கு ஆசியா போலீஸ்காரனாக செயற்படும் இந்திய அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆலோசனையுடனும் உதவியுடனும் செய்யப்பட்டால் அது ஏகாதிபத்திய, முதலாளித்துவ நலன்களுக்கு அனுகூலமாக செய்யப்பட்ட ஒன்று என்பதை நன்கு அறியும் மாஸ்கோ ஸ்டாலினிச அதிகாரத்துவமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பது இயல்பானதே.

இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில், இரண்டாம் உலகப்போரின் பின்பு உருவான சம்பிராதய 'சுதந்திர நாடுகளின்' ஜனநாயக சமத்துவத்தின் அடிப்படையில் வேறுபட்ட மொழி பேசுவோரும் மத மற்றும் இனரீதியான பிரிவினரும் வாழும் ஒரு தனி தேசிய அரசை உருவாக்க ஏகாதிப்பதியம் அனுமதிக்கவில்லை. தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்வோராக அல்லாமல் அவர்களை ஒடுக்கும் ஏகாதிபத்தியத்தின் ஜூனியர் பங்காளிகளாகவே செயற்பட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு இந்நிலை பற்றி பின்வருமாறு கூறியது. “இப்படியான முதலாளித்துவ நாடுகள் மீதான ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் விளைவுகள் பெயர் போனதாகும். உள்நாட்டில் பெருத்தமான தொழிற்துறையை வளர்க்க முடியாத நிலையில் அவற்றின் பொருளாதார தலைவிதிகள் ஒரு சிறு மூலவளங்களை ஏற்றுமதி செய்வதுடன் பிணைக்கப்பபட்டு ஒரு பிரமாண்டமான கடன் சுமையின் கீழ் மூச்சுத் திணறுகின்றன. பின்தங்கிய நாடுகளில் உள்ள பரந்த கல்வி அறிவின்மை, நோய் பட்டினி போன்றன மூச்செடுக்க விடாமல் செய்யும் நிலைமையை உண்டாக்கியுள்ளன. உள்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சி அரிதான ச்ம்பவங்களாகவே இருந்தது. அப்படி ஏதாவது இருந்தாலும் கூட அவை சாதாரணமாக ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு உற்பத்தியின் பகுதிகளாகவே இருந்தன. அவை சிப்பாக ஏகாதிபத்தியத்தின் உயர்ந்த லாபத்திற்கான மூலவளங்களாகவே ஊக்குவிக்கப்பட்டன. அவ்வாறான போலியான பொருளாதார வளர்ச்சி ஒடுக்கப்படும் மக்கள்தொகையின் தேசிய நலன்களுக்கு எவ்விதத்திலும் அத்தகைய நிலைமைகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் குதூகல அரவணைப்புடன் தோன்றுவது சமூகங்களுக்கு இடையிலான கோர யுத்தங்களாகும். இந்தப் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆட்சி தொடரும் வரை தீர்க்க முடியாது. சுதந்திர காலப் போராட்டங்களை தொடர்ந்து தோன்றிய இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஷ், பர்மா போன்ற உண்மையில் உலகில் பழைய காலனித்துவ நாடுகளின் வரலாறும் தீர்க்கமாக நிரூபிப்பது முதலாளித்துவ வர்க்கம் உண்மையான தேசிய ஒன்றிணைப்பையும் அரசியல் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முடியாது என்பதாகும்".

1947ல் ஏகாதிபத்திய பிரிவினைக்கு ஆதரவளித்த ஒன்றுபட்ட ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று மூன்றாக பிளவுற்று இருப்பினும் பிரிவினையை தொடர்ந்து ஆதரிப்பதுடன் காஷ்மீர் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை இந்திய ராணுவம் ஒடுக்குவதை ஆதரவளிக்கின்றனர். இலங்கையில் ஈழ மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை இந்திய ராணுவம் நசுக்குவதற்கும் சி.பி.எம், சி.பி.ஐ ஸ்டாலினிசத் தலைமைகள் ஆதரவளித்து வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து இந்திய, பாகிஸ்தான் துருப்புகளை வெளியேற்றவும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை பேணவும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு போராட வேண்டும் என சோசலிசத் தொழிலாளர் கழகம் அறை கூவுகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் விடுதலை இந்திய உபகண்டத்திலுள்ள தொழிலாள வர்க்கமும், ஒடுக்கப்படும் மக்களும் 1947 பிரிவினைக்கு எதிராக இந்திய உபகண்டத்தை மறுஐக்கியம் செய்யும் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். இந்திய உபகண்டத்தில் உருவாக்கப்பட்ட மத, இனவாத அரசுகளை தகர்த்தெறிந்து உலக சோசலிசக் குடியரசின் பகுதியாக உபகண்டத்தில் ஒரு ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை அமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

காஷ்மீரிலுள்ள தொழிலாளர்களும், வறிய மக்களும் பாகிஸ்தான் மதவாத ஆட்சியாளர்களின் உதவியுடன் காஷ்மீரில் ஒரு மதவாத அரசை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் அனைத்து முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ இயக்கங்களையும் நிராகரிக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் தொழிலாளர்களுடன் புரட்சிகர ஐக்கியம் பூண்டு இந்திய, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிப்பதுடன் இந்திய உபகண்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக அணி திரள வேண்டும்.

இந்த புரட்சிகர முன்னோக்கில் போராடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தை ஜம்மு-காஷ்மீரிலும் இந்திய உபகண்டத்தின் ஏனைய பகுதிகளிலும் கட்டி எழுப்ப முன்வருமாறு வர்க்க நனவுடைய தொழிலாளர்களையும் புரட்சிகர இளைஞர்களையும் அழைக்கிறோம்.