"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Sunday, July 3, 2016

சென்னையில் பொதுக்கூட்டம்: 'தமிழீழ மக்களுக்கு எதிரான சிறிலாங்க அரசின் இனவாத யுத்தமும், இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கடமையும்'


நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மாத வெளியீடு

[‪‪‎Socialist Labour League India‬ insists it's trotskyist tradition with Bolshevik Leninist Party, and hails the struggles of Revolutionary Labour League and explains its strategy.]

Thozhilalar Paathai, Volume 34 (File no 397)
July, 1990

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் 'தமிழீழ மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவாத யுத்தமும் இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கடமையும்' எனும் தலைப்பின் கீழ் 18-7-90 அன்று சைதாப்பேட்டை தேரடித் திடலில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது.


கூட்டத்திற்கு சென்னை பி.அண்டு.சி ஆலையின் டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியின் செயலாளர் தோழர் மோசஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். சிறிலங்கா இனவாத முதலாளித்துவ அரசு தமிழீழ தேசிய இனத்திற்கு எதிராக தொடுத்துள்ள யுத்தத்தையும் அதற்கு இந்திய முதலாளித்துவ அரசாங்கம் வழங்கும் ஆதரவை முறியடிக்க முன் வரவேண்டியது இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கடமையாகும் என்று தோழர் மோசஸ் ராஜ்குமார் அவரது தலைமை உரையில் வலியுறுத்தி பேசினார். இந்திய ஸ்டாலினிச கட்சிகளான சி.பி.எம்., சி.பி.. தலைமைகள் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பதையும், இந்தியாவிலும் இலங்கையிலும் முதலாளித்துவ அமைப்பைக் காக்க துணை புரியும் அவர்களது துரோக அரசியலையும் மோசஸ் அம்பலப்படுத்தினார். “எமது கட்சி ஓர் உலகக் கட்சி, அந்த வகையில் சிறிலங்காவினுள் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் சிங்கள மொழி பேசும் தொழிலாள வர்க்கத்தையும் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தி போராடி வருகிறது. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே பாட்டாளி வர்க்க சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து தமிழீழ தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, அத்றகாக சிங்களமொழி பேசும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துப் போராடி வருகிறது. தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில், வர்க்க சுதந்திரத்தின் அடிப்படையில் முன்னெடுப்பதன் மூலமே வென்றெடுக்க முடியும் என்று போராடி வருகிறது.

இந்திய ஆக்கிரமிப்பு படை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென்று போராடியது புரட்சி கம்யூனிஸ்ட் கழகமும், இந்தியாவில் உள்ள சோசலிச தொழிலாளர் கழகமும் ஆகும். இந்திய ஆக்கிரமிப்புப் படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த பொழுது கோர்பச்சேவ், பீரங்கிப்படகுகளை இந்தியாவுக்கு அளிக்கக்கூடாது என்று கோர்பச்சேவ் அமெரிக்காவிற்கு வருகை தந்த நேரம் ஆர்ப்பாட்டம் செய்தது அமெரிக்க டிராட்ஸ்கிச இயக்கமான வொர்க்கர்ஸ் லீக் என்று தோழர் மோசஸ் கூறினார்.

அடுத்து பேசிய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் உறுப்பினரும் ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சங்க கமிட்டி உறுப்பினருமான தோழர் கைலாசம், தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதற்கு துணை போகும் இந்திய இலங்கை ஸ்டாலினிஸ்டுகள் தொழிற்சங்கப் போராட்டங்களிலும் முதலாளிகளின் ஏஜண்டுகளாக தொழிலாள வர்க்கத்தினுள் செயல்படுகின்றனர். இது அவர்களின் வர்க்க சமரசக் கொள்கையின் அடிப்படையிலான துரோகம் என்றார். முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கம் நடத்தும் போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் ஏழை விவசாயிகளின் ஒடுக்கப்படும் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி தோழர் கைலாசம் பேசினார்.

இறுதியாக 'தொழிலாளர் பாதை' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த தோழர் ராம் பேசினார். அவர் பேசுகையில் குறிப்பிட்டது பின்வருமாறு:

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்கா அரசின் இனவாத யுத்தம் தொடர்பாக முதலாளித்துவக் கட்சிகளும், ஸ்டாலினிச கட்சிகளும் கூட்டங்களை கண்டன ஆர்ப்பாட்டங்களை, ஊர்வலகங்களை நடத்தி வருகின்றன. அதற்கும் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. முதலாளித்துவக் கட்சிகளில் ஒருசாரார் இந்திய முதலாளித்துவ அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தும், மறுசாரார் இந்திய அமைதி கொல்லும் படையை வாபஸ் வாங்கியதே தவறு என்றும் கூறுகின்றனர். ஸ்டாலினிஸ்டுகளோ இந்திய இலங்கை உடன்படிக்கையை சரிவர அமல்படுத்தவில்லை என்கின்றனர். ஆனால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்று தான் இந்தியத் தொழிலாள வர்க்கத்தைப் பார்த்துக் கோரிக்கை விடுக்கின்றது.

முன்பு இருந்த எம்.ஜி.ஆர். ராஜீவ்காந்தி அரசாங்கமாக இருந்தாலும் சரி, தற்போது இருக்கும் கருணாநிதி-வி.பி.சிங் அரசாங்கமாக இருந்தாலும் சரி தமிழீழ தேசிய இனத்தின் முதுகில் குத்துவதிலே குறியாயிருந்தனர். முன்பிருந்தவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்தனர் தற்போது இருப்பவர்கள் பாக்ஜலசந்தியில் கடற்படைக் கப்பலை நிறுத்தி வைத்து இனவாத யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஐ.தே. கட்சி (UNP) அரசாங்கத்தினருக்கு ஒத்துழைப்புத் தருகின்றனர். அந்த வகையில் முதலாளித்துவ தி.மு.. 20ஆம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, முன்னர் கூட முதலாளித்துவ அ.தி.மு.. அரசாங்கமும் இதே மாதிரி பந்த் ஒன்றை நடத்தியது. புறநிலைரீதியாக இப்பிரச்சினையானது, தொழிலாள வர்க்கத்தின் கைகளில் சென்றுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை கொண்டே இவ்வித 'பந்தினை' ஆளும் வர்க்கம் ஏற்பாடு செய்கிறது.

தேசிய இனப்பிரச்சினை என்பது ஏதோ சிறிலங்காவிற்கு மாத்திரம் தான் என நினைக்க வேண்டாம். காஷ்மீர், நாகா, பஞ்சாப் பிரச்சினைகள் இந்தியாவிற்குள்ளும் பலூச்சி சிந்தியர்களினது பிரச்சினை பாகிஸ்தானுக்குள்ளும் சக்மா பழங்குடி மக்கள் போராட்டம் பங்களாதேஷிற்குள்ளும் வெடித்துக் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன.

வரலாற்றுரீதியாக இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வோமேயானால் லங்காசமசமாஜக் கட்சி-டிராட்ஸ்கிசத்தை கைவிட்டு திருத்தல்வாதக் கட்சியாக மாறுவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பகுதியில் அதற்கு தமிழ் பேசும் மக்களிடையே கணிசமான செல்வாக்கு இருந்தது. ஆனால் 1964ல் இதே லங்காசமசமாஜக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கத்தில் பங்கு கொண்டது. இதனுடைய விளைவு ஏற்கனவே UNP, SLFP முதலாளித்துவக் கட்சிகளின் பேரினவாதக் கூச்சலுக்கு எதிராக ல... கட்சியை நம்பி இருந்த தமிழ் பேசும் மக்கள், நம்பிக்கை இழந்து, தங்களுக்கென போராட தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் அணி திரண்டனர். அதேபோல் தென் இலங்கையில் குட்டி முதலாளித்துவ ஜே.வி.பி. போன்ற இயக்கங்கள் வளர்வதற்கு களம் அமைத்தது. தோட்டப் பகுதிகளிலுள்ள தொழிலாள வர்க்கம் தொண்டமான் போன்றோரின் பின் அணிதிரள ஆரம்பித்தனர். 1964ல் லங்காசமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் விளைபயன்களே இத்தகைய இயக்கங்கள் செல்வாக்கு பெற வழி செய்தன.

அதன்பின் 1970ன் காலப்பகுதிகளிலே வடக்கு கிழக்கில் குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இதே காலக்கட்டத்தில் தான் சர்வதேசரீதியாக வர்க்கப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருந்தன. ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுக்கலில் கொடூரமான சர்வாதிகார அரசுகள் தூக்கி வீசப்பட்டன. பிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகளில் தொழிலாள வர்க்கம் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தது. 1975ல் வியட்நாம் போன்றவை காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி அடைந்து கொண்டிருந்தன. சிறிலங்காவில் வடக்கு கிழக்குப் பகுதியில் அமிர்தலிங்கம் போன்ற தமிழ் தேசிய முதலாளித்துவ தலைமையின் காட்டிக் கொடுப்பினால், குட்டி முதலாளித்துவ விடுதலை இயக்கங்கள் வளரத் தொடங்கின.

1970ல் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் ல... கட்சியும், இலங்கை ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கெடுத்தன. இதே ல... ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி ந... (NSSP) அனைத்தும் இலங்கைத் தீவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் எதிராக நடக்கும் போராட்டம் என்று திரித்துக் கூறுகின்றன. UNP அரசாங்கம் ஜனநாயக அரசாங்கமாம்! 1948லே இந்தோ-பாகிஸ்தானிய குடியுரிமை பறித்த, 1956ல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த, 1972 புத்தமத அரசாங்கம் என்று அறிவித்த, தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி நாடு கடத்திய 1977, 79, 80, 81, 83லே தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கலவரங்களை நடத்திய கொழும்பு நகர வீதியில் கேடிகளை திரட்டிக் கொண்டு தமிழ் மக்களை எரித்துக் கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கிய பிரேமதேசாவும், இன்றும் லட்சம் தோட்டத் தொழிலாளர்களை நாடு கடத்தத் திட்டமிட்டுள்ள ரஞ்சன் விஜேரத்தினாவும் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசாங்கம் 'ஜனநாயக' அரசாங்கமாம்! ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடினால் அது பாசிசமாம் ந...... ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றார்கள். பாசிசம என்பது முதலாளித்துவத்தின் கோர வடிவம். தொழிலாள வர்க்க ஸ்தாபனங்கள் அழிக்கப்படும். தொழிலாளர்கள் மிக குரூரமாக ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுவார்கள் குட்டி முதலாளித்துவ விடுதலை இயக்கங்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்வதையும், அழித்துக் கொள்வதையும் வைத்து பாசிசம் என்பது தவறான வரையரையாகும் மார்க்சிசத்திற்கு விரோதமானதாகும்.

சிறிது காலத்திற்கு முன்னர் தென்னிலங்கையிலே 'குட்டி முதலாளித்துவ ஜே.வி.பி. பாசிச இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கையில் ஒருபுறம் துப்பாக்கி முனையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைப் பறிக்கையில், பல தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் கொன்று குவிக்கையில் ஜே.வி.பிக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு சுண்டு விரலைக் கூட உயர்த்தவில்லை. இவர்கள் அதேவேளை யு.என்.பி. அரசாங்கம் துப்பாக்கி முனையில் தொழிலாள வர்க்கத்தை வேலைக்குச் செல்ல நிர்பந்தித்தபொழுது தொழிலாளர்களைப் பாதுகாக்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்கக் கட்சிகளின் ஐக்கிய முன்னணி ஒன்று அமைக்க அழைப்புவிடுத்தது. ஆனால் ந...... ஸ்டாலினிச கம்யூ கட்சிகள் தங்களது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் கூட ஜே.வி.பி.யினால் சுட்டு கொல்லப்பட்ட போதும்—தொழிலாளர்களை ஜே.வி.பி.யின் கருணைக்கு விட்டிருந்தனர்.

ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் போராட்டம் என்ற வகையில் அது நியாயமான போராட்டம். ஆனால் இந்தப் போராட்டத்தில் குட்டி முதலாளித்துவ வர்க்க விடுதலை இயக்கங்கள் என்ன தான் தீவிரமாகப் போராடினாலும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடியாது.

1987 காலப்பகுதியில் ஒருபுறம் வடக்கு கிழக்குப் பகுதியிலே வளர்ச்சி அடைந்து வந்து கொண்டிருந்த வர்க்கப் போராட்டத்தாலும் UNP முதலாளித்துவ அரசாங்கம் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. அப்போது தாதிகள் வேலை நிறுத்தம், தோட்டத் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருந்தன. வளர்ந்து கொண்டிருக்கும் இப்போராட்டத்தைத் தொழிலாள வர்க்கம் கையில் எடுத்துவிடும் என்று கருதி அஞ்சித் தான் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஏகாதிபத்தியத்திடம் உதவி கோரினார். ஆனால் தாங்கள் நேரடியாகத் தலையிட்டால், இந்திய துணைக் கண்டத்திலே பெரும் வெடிப்பை ஏற்படுத்தி விடும் என்று எண்ணி, தெற்காசிய பிராந்தியத்தில் தனது நலன் காக்கும் போலீஸ்காரனாக செயல்படும் இந்திய முதலாளித்துவத்தை தலையிட வைத்தது. அந்த வகையிலே அமெரிக்க ஏகாதிபத்தியம் போட்டுக் கொடுத்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் — இந்திய அமைதி கொல்லும்படை அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள ஸ்டாலினிஸ்டுகள் பெரிதும் வரவேற்றனர். அமெரிக்க செனட் சபையில் பசிபிக் ஆசிய பிராந்தியத்தின் வெளிவிவகாரக் கமிட்டியின் துணைக் தலைவராக இருக்கும் ஸ்டீபன் சோலார்ஸ் இவ்ஒப்பந்தம் பற்றி தனது செனட் கமிட்டி அறிக்கையில் கூறுகிறார், இஸ்ரேலின் மெனாச்சிம் பெகினும், எகிப்தின் அன்வர் சதாத்தும் போட்ட கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தைப் போன்றது என்றும், இதற்காக ராஜீவ்-ஜெயவர்த்தனேவுக்கு இந்த ஆண்டின் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறார்.

ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.எம். சி.பி.. ஸ்டாலினிஸ்டுகள் இவ்வொப்பந்தம் திரிகோண மலைத்துறை முகத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் தளம் அமைப்பதைத் தடுக்கவே போடப்பட்டதாகவும் அதன்படி தான் இந்திய அமைதி கொல்லும் படையை அனுப்பியிருப்பதாகவும் கூறினர்; இன்றும் கூறி வருகின்றனர்.

அத்தோடு மட்டுமல்லாமல் தாம் நடத்திய சி..டி.யு. 5வது மாநில மாநாட்டில் இந்திய அமைதி கொல்லும் படைக்கு நன்றி அறிவிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றினர். இந்த ஸ்டாலினிஸ்டுகள் காஷ்மீர் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை நசுக்க இந்தியத் தொழிலாள வர்க்கத்தை வி.பி. சிங்குடன் சேர்ந்து யுத்தம் நடத்த அனுப்பி வைப்பார். பாகிஸ்தானில் உள்ள ஸ்டாலினிஸ்டுகள் பெனாசிர் பின்னால் பாகிஸ்தான் தொழிலாள வர்க்கத்தை முடித்துப் போடுவர் இது தான் இவர்களது (சர்வ) தேசியம்!

ஆனால் மார்க்ஸ் அயர்லாந்து தேசிய இனப் பிரச்சினை பற்றிக் குறிப்பிடுகையில் அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக ஆங்கில முதலாளித்துவத்தை எதிர்த்து ஆங்கில தொழிலாள வர்க்கம் போராடாத வரையில் அதற்கும் விடுதலை கிடைக்காது என்றார். ரஷ்யாவில் போல்சேவிக்குகள் ரஷ்ய பேரினத்தால் ஒடுக்கப்படும் சிறிய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக ரஷ்ய பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியது அதன் புரட்சிகர கடமை என்பதை வலியுறுத்தி வந்தனர். இப்படியான பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கொள்கையின் அடிப்படையில் வெற்றிகரமான அக்டோபர் புரட்சிக்கு தயார் செய்தனர். இந்த பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் தான் சோசலிசத் தொழிலாளர் கழகம் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் காஷ்மீரி மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வருகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் எல்.டி.டி.., புளொட், ஈரோஸ். டெலோ, ஈபிஆர்எல்எப் போன்று எத்தனையோ குட்டி முதலாளித்துவ விடுதலை இயக்கங்கள் தோன்றின. குட்டி முதலாளித்துவ தலைமைகளின் வர்க்கத் தன்மை காரணமாகவும், அரசியல் திவால் தன்மையினாலும் தேசிய சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடியாது உள்ளது. அந்த வகையில் பி.எல்.. நிகரகுவா சானடினிஸ்டாகளும் முதலாளித்துவ குட்டி முதலாளித்துவ வர்க்க தலைமைகளின் வேலைத்திட்டங்களின் வரம்புகளையும், அவர்களின் பிற்போக்கு அரசியலையும் அம்பலப்படுத்தியுள்ளன. இனவெறி சியோனிச (இஸ்ரேல்) அரசை அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 242 தீர்மானத்தை பாலஸ்தீன விடுதலை இயக்கம் அங்கீகரித்துள்ளது. நிகரகுவாவின் சாண்டினிஸ்டாக்கள் போராட்டக்களத்தில் வென்றெடுத்த ஆட்சி அதிகாரத்தை டேனியல் ஓர்டேகா தலைமை இப்போது வாக்குபெட்டியிலே ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி சமரோவிடம் பறி கொடுத்துள்ளார்.

ஏனைய அனைத்து குட்டி முதலாளித்துவ தமிழ் தேசிய இயக்கங்களைப் போலவே எல்.டி.டி.. தலைமையும் பிற்போக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்தது. ஆனால் இந்திய அமைதி கொல்லும் படை தமிழீழ போராளிகளிடமிருந்து முழமையாய் ஆயுதங்களை பிடுங்க நடவடிக்கை மேற்கொண்ட போதே அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தியது. அந்த சமயம் எல்.டிடி.. இலங்கை அரசின் பக்கம் சாய்ந்தது. ஏனைய குட்டி முதலாளித்துவ குழுக்கள் இந்திய முதலாளித்துவத்திடம் சரணடைந்தன.

முன்பு தமிழ் மக்களின் பாதுகாவலனாக இந்திய அரசாங்கத்திற்கு மூலாம் பூசிய எல்.டி.டி.. தலைமை இப்போது தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் பிரேமதாசா உடனடியாக அக்கறை கொண்டுள்ளார் என பிரகடனம் செய்தது. பல இனக் கலவரங்களில் குண்டர்களை திரட்டி தமிழ் மக்களை வெட்டி படுகொலை செய்த யு.என்.பி. அரசாங்கத்தின் ஜனாதிபதி பிரேமதாசா திடீரென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை கொண்டவர் ஆகிவிட்டார்.

இந்திய ராணுவம், உலகின் 4வது பெரிய ராணுவம் தமிழ் ஈழத்திலிருந்து அவமானத்துடன் திரும்பும்படி தமிழீழ மக்களின் உறுதியான போராட்டத்தின் காரணமாக நிர்பந்திக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் சிறிலங்கா போலிசும் ராணுவமும் தமது படைபலங்களை மீண்டும் குவிக்கத் தொடங்கின.

இலங்கை அரசின் இப்படியான நடவடிக்கைகளுக்கு தமிழீழ மக்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். பருத்தித் துறையில் மீண்டும் போலீஸ் நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். உடனே இலங்கை அரசு அதன் தூதுவராக அமைச்சர் ஹமீதை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியது. அவர் அங்கே எல்.டி.டி.. தலைவர் பிரபாகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர், பருத்தித்துறை போலீஸ் நிலையம் 48 மணி நேரத்தில் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலைமை பற்றி லண்டனில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் யோகி குறிப்பிடுகையில், “தமிழீழ பிராந்தியத்திற்குள் இலங்கை ராணுவ முகாம்கள் இருக்கலாம். ஆனால் அவை சட்டம் ஒழுங்கை கவனிக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது. அது போலிசின் கடமை. ராணுவம் அவசர நிலையின் போது மட்டுமே முகாமை விட்டு வெளியே வரலாம் என்று அறிவித்தார். கிழக்குப் பகுதியில் இலங்கை போலீசாரின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இலங்கை அரசு முழுஅளவிலான இனவாத யுத்தத்தை தொடங்கியது.

எல்.டி.டி.. தலைமையின் இந்த ஊசலாட்ட அரசியல் நிலைப்பாடு அதன் வர்க்கத்தன்மையிலிருந்து ஊற்றெடுக்கிறது. தமது 'சொந்த' தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் வேலைத்திட்டத்தை கொண்டுள்ள இந்த தலைமைகள், தமிழீழ தொழிலாளர்கள் தென் இலங்கையிலும் இந்திய உபகண்டத்திலும் சர்வதேசரீதியாகவும் உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுடன் புரட்சிகரமான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைவதை எதிர்க்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான இயக்க வளர்ச்சி பற்றி பீதி அடைகின்றனர். இதனால் ஏதாவது ஒரு முதலாளித்துவ அரசின் பக்கம் சாய்கின்றனர். பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பற்றி பிரமைகளை உண்டு பண்ணுகின்றனர்.

இந்தியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப், தலைமையின் முக்கிய உறுப்பினர்களை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்காவிட்டாலும் இது போன்ற சம்பவங்களை காரணம் காட்டி இன்று தமிழீழ மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இனவாத யுத்தத்திற்கு இந்திய முதலாளித்துவம் ஆதரவு அளிக்கிறது. பாக்ஜல சந்தியில் இந்திய கப்பற்படைகளை நிறுத்தி காயம்பட்ட போராளிகளையும், அகதிகளையும் நடுக்கடலிலே மூழ்கடிக்க இலங்கை கடற்படைக்கு துணையாக கண்காணிப்பு வேலை செய்கின்றது.

இனவாதப் படைகளுக்கு எதிராக வீரதீரமாய் எல்.டி.டி.. அமைப்பு போராட்டம் நடத்தினாலும் அதனுடைய அரசியல் வேலைத்திட்டம் காரணமாக தமிழீழ மக்களின் ஜனநாயக உரிமையான சுயநிர்ணய உரிமையை முழுமையாக வென்றெடுப்பது முடியாத காரியமாகிவிட்டது. மேலும் எல்.டி.டி..இன் அரசியல் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது.

இன்றைய உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அனைத்து தேசியவாத வேலைத்திட்டங்களும் திவாலடைந்துள்ளது. இன்று உற்பத்தி முறையானது முன்னொருபோதும் இல்லாத அளவு பூகோளமயப்படுத்தப்பட்டு இருக்கிறது. கம்யூட்டர், செய்தி தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட தொழிற் நுட்பப் புரட்சியானது உலகப் பொருளாதாரத்தை மிக இறுக்கமாக ஒன்றிணைத்துள்ளது ஒரு பொருளின் உற்பத்தியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு அடங்கி இருக்கிறது. ஒரு பொருளின் பகுதிப் பொருட்கள் பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அவை சந்தைக்கு வரும் பொழுது சுங்கவரி, தீர்வை போன்ற தேசிய எல்லைகளுக்குள் தடைகளை எதிர் நோக்குகின்றன. பூகோள மயப்படுத்தப்பட்ட பொருள் உற்பத்தி முறைக்கும் தேசிய எல்லைகளைக் கொண்ட அமைப்புக்கும் இடையிலான முரண்பாட்டை எந்த ஒரு தேசியவாத வேலைதிட்டத்தின் மூலமும் தீர்க்க முடியாது. எனவே சர்வதேச ரீதியான மூலதனத்தின் ஆதிக்கத்தை உடைக்க சர்வதேச மூலஉபாயம் தேவைப்படுப்படுகிறது. அதற்கு சர்வதேசிய புரட்சிக் கட்சி தேவைப்படுகிறது. அந்த வகையில் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்று மார்க்ஸ், ஏங்கெல்ஸ் 1848ல் விடுத்த அறைகூவல் அன்றைய காலப்பகுதியை விட இன்று மிக அத்தியாவசியமானதாகவும்' வெளிப்படையாகவும் இருக்கின்றது. அந்த வகையில் இன்று ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச புரட்சிக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே இயங்குகிறது.

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த-இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்ததில் பிறப்பித்த-வகுப்புவாத மதவாத அரசு அமைப்புகளுக்கு எதிராக அன்றைக்கு போராடி கொண்டிருந்த டிராட்ஸ்கிச கட்சியான போல்ஷேவிக் லெனினிஸ்ட் கட்சியின் பாரம்பரியத்தில் இன்று டிராட்ஸ்கிச இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அவை இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், இந்தியாவில் சோசலிசத் தொழிலாளர் கழகமும் ஆகும்.

இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழீழ-சிறிலங்கா ஐக்கிய சோசலிச குடியரசுகளை அமைக்க போராடுகிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்காக போராடிய எமது தோழர்களான பீட்டவல, குணபால, கீரேசன் ஜே.வி.பி. பாசிஸ்டுகளின் தாக்குதலில் உயிர் இழந்த போதும் சிறிலங்கா அரசபடையின் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளான போதும் முன்னணி தலைமை தோழர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்திய போதும் உறுதியாக போராடி வருவது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே. தமிழீழ பிராந்தியத்தில் இருந்து இந்திய ஆக்கிரமிப்புப் படைகளும், சிறிலங்கா இனவாத அரச படைகளும் நிபந்தனை இன்றி வெளியேற வேண்டும் என்றும் போராடி வந்தது. இன்று இனவாத யுத்ததை நடத்தும் யு.என்.பி. முதலாளித்துவ அரசுக்கு ஒரு ஆளையோ, ஒரு சதத்தையோ வழங்க வேண்டாமென்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கு ஏழை விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. குட்டி முதலாளித்துவ தலைமைகளில் இருந்து சுதந்திரமாக தமிழ் தொழிலாளர்களையும், இளைஞர்களையும் ஏழை விவசாயிகளையும் அணிதிரட்டும் புரட்சிகரமான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் விவசாயிகள் சபைகள் (சோவியத்துக்கள்) அமைக்கவும், சுதந்திர பாதுகாப்பு படைகளை அமைக்கவும் அழைப்புவிட்டுள்ளது. இலங்கை முதலாளித்துவ அரசை தூக்கி வீசி சோசலிசம், ஜனநாயக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராட முன்வரும்படி அழைப்பு விட்டு உள்ளது.

பாக்ஜலசந்தியில் நிறுத்தியிருக்கும் இந்திய கப்பற்படையை நிபந்தனை இன்றி உடனே வாபஸ் வாங்கும்படி போராடுமாறும் சிறிலங்கா இனவாத அரசின் இனவாத யுத்தத்திற்கு எதிராக தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் வெற்றிக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்யுமாறும் சோசலிசத் தொழிலாளர் கழகம் இந்திய தொழிலாள வர்க்கத்தை கோருகிறது. அத்துடன் காஷ்மீரி தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையையும் ஏனைய ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமையை பேணவும், விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும், தொழிலாளர்களை எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தீர்க்கவும் இந்திய உபகண்டத்தில் உலக சோசலிச குடியரசின் பகுதியாக ஐக்கிய உபகண்ட சோசலிசக் குடியரசுகளை அமைக்க போராட்டத்தை முன்னெடுக்க வருமாறு வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அழைக்கிறது. இதற்காக போராடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் இணையுமாறு அழைக்கிறோம்.

No comments:

Post a Comment