"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Sunday, June 5, 2016

ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில்!

Thozhilalar Paathi, Volume 039
June, 1991

காங்கிரஸ் () யின் தலைவரும், முன்னால் இந்திய பிரதமருமான ராஜீவ் காந்தியின் குரூரமான மரணம் நேரு குடும்ப வழி ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இது உலக அரசியலின் வெடிக்கும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இறுதி ஆய்வில் பார்க்கையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதானது, உலக முதலாளித்துவத்தின் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய ஒழுங்கு, முழுமையாக உடைந்து போனதை எடுத்துக் காட்டுகிறது.  

ராஜீவ்காந்தியும் இதர பதினான்கு பேரும் மே 21 இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டினால் கொல்லப்பட்டனர். சென்னையில் இருந்து சுமார் 54 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்பதூர் பகுதியில் தேர்தல் கூட்டம் ஒன்றில் ராஜீவ் காந்தி பேச சென்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. குண்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் ராஜீவ் காந்தியை அவருடைய உடைகளை வைத்தே அடையாக காண முடிந்தது.

இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் 43 வருட கால வரலாற்றில் மிகவும் பலாத்காரம் நிறைந்த தேர்தலின் இறுதி நாட்களின் போது, ஜாதி, மத, தேசிய பகைமைகளின் வெடிப்புகளின் மத்தியிலுமே இந்த கொலை நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியின் தலைமையில் அதிகமான தொகுதிகளை வெல்லுவதற்கு சாதகமான நிலைமை இருந்த பொழுதிலும் அது அறுதி பெரும்பான்மையை பெற முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அது ஒரு ஊசலாடும் பாராளுமன்றத்தை உருவாக்கும் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியையே தோற்றுவிக்கும். கடந்த 18 மாதங்களில் 3 அரசாங்கங்களின் வீழ்ச்சியில் இந்நெருக்கடி பிரதிபலித்தது.

ராஜீவ் காந்தியின் மரணம் காங்கிரஸ் கட்சி உடைவதையும், மேலும் இந்தியா உடைவதையும் முடுக்கி விடும். ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு இந்தியாவில் தேசிய, மத, ஜாதி கோடுகளை கடந்து ஒரு தேசிய தொகுதியில் நிற்கக் கூடிய எந்தவொரு முதலாளித்துவ அரசியல்வாதியும் கிடையாது.

சுதந்திரம் என்றழைக்கப்பட்டு 43 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இந்திய மக்களின் நலன்களை முன்னெடுக்க எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியானது நேரு—காந்தி குடும்பத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளது.

பழைய ஒழுங்கை ஒன்றாக கூட்டி வைத்திருக்கும் ஆற்றொணா முயற்சியை புதுடில்லியில் கூடிய ஊழல் நிறைந்த முதலாளித்துவ காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியாவின் விருப்பத்தை அறிந்து கொள்ளாமலே அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நியமித்தனர். ஆனால் அவர் தனது தலையை அந்த பலி பீடத்தில் வைக்க மறுத்தார்.

நாட்டை குடைந்து கொண்டிருக்கும் ஆழமான பொருளாதார சமூக நெருக்கடியின் நேரடி விளைவாகவும், 1947ல் "சுதந்திரம்" என்ற போர்வையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய முதலாளித்துவத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ஆட்சி செயல் நுட்பங்கள் உடைந்து போனதன் விளைவாகவும் இந்த கொலை நடைபெற்றுள்ளது. இரண்டாம் உலக போருக்கு பிந்தைய உடன்பாடுகளின் மூலம் இந்திய துணை கண்டத்தில் உருவாக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை முதலிய அனைத்து நாடுகளுமே ஆழமான சமூக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கின் உடைவு

கொலை சம்பந்தமாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் முதன்முறையாக கருத்து தெரிவிக்கையில், “உலகம் எங்கே செல்கின்றது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை" என்றார். புஷ், சி..ஏ இன் முன்னைய தலைவராக இருந்தவர் ராஜீவ்காந்தியின் பயங்கரமான தலைவிதி பற்றி அதிர்ச்சி அடைந்தார் என்பதை ஏற்றுக் கொள்வது கடினமே.

உண்மையில் நன்கறிந்த வட்டாரங்கள் இந்தக் கொலையில் அமெரிக்கத் தலையீடு பற்றி சந்தேகிக்கின்றன. ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் வழக்கம் போல், அரசியல் ஸ்திரமற்ற தன்மையை பயன்படுத்தி இப்பிராந்தியத்தில் தனது நலன்களை முன்னெடுக்க முயலும். கடந்த மாதம் தான், அண்மை நாடான பங்களாதேஷில் வெள்ள அழிவு நிலைமைகளை புஷ் நிர்வாகம் சாதகமாக பயன்படுத்தியது. வங்காள விரிகுடாவில் "மனிதாபிமான அக்கறைகள்" என்ற போர்வையில் அமெரிக்க இராணுவ படைகளை அங்கே நிறுத்தியது.

எவ்வாறாயினும் புஷ்ஷின் உடனடியான எதிர்த்தாக்கம் நேர்மை இல்லாமல் இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பிலுள்ள புஷ் உணர்வு பூர்வமாக ஒன்றை அறிந்து கொண்டார். அதாவது ராஜீவ்காந்தியின் மரணம் இரண்டாம் உலக போருக்கு பிந்தைய ஏகாதிபத்திய ஒழுங்கின் மற்றொரு அஸ்திவாரத்தையும் அழித்து விட்டது என்பதாகும் (முக்கியமான முதலாவது அஸ்திவாரமான ஸ்டாலினிசமும் அழிந்து போயிற்று).

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஒழுங்கின் மையத்தில், மத அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் கொடூரமான பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய அரசும், இந்து மேலாதிக்கம் நிறைந்த இந்திய அரசும் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவினையானது உண்மையான சதந்திரத்தை அடையவும் மக்களின் அடிப்படையான எந்தவொரு ஜனநாயக கோரிக்கைகளை நிறைவேற்றவும் தேசிய முதலாளித்துவம் முழுமையாக திறனற்றது என்பதையே எடுத்துக் காட்டுகிறது, ஏனென்றால் இப்படியான கடமைகளை நிற்வேற்றுவதற்கு அவர்கள் தங்கியிருக்கும் முதலாளித்துவ சொத்து உறவுகளை தூக்கி வீச வேண்டும்.

அதனால் தான், நேரு காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சியில் அணி திரட்டப்பட்ட இந்திய தேசிய முதலாளித்துவம், நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கையாண்ட பிரித்தாளும் தந்திரோபாயங்களை பயன்படுத்தியது. அவர்களுக்கு இடையில் என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் முதலாளித்துவ காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் ஒரு அடிப்படையான ஐக்கியம் உண்டு. அது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் ஒரு வெற்றிகரமான சோசலிசப் புரட்சியில் முடிவடைந்துவிடும் என்ற அவர்களது பீதியாகும். காந்தியின் தலைமையில் ஒரு பரந்த மக்கள் இயக்கத்தையும், நேருவின் தேசியவாத வேலைத் திட்டத்தையும் ஒன்று சேர்த்து சோசலிச வெற்று முழக்கங்களுடன் சுதந்திரமான வளர்ச்சிப் பாதையை மேற்கொள்வதாக கூறினார்கள். இவ்வாறாக… கோரமான வறுமையும், ஒடுக்குமுறையும் இருந்த போதிலும் பலகோடி இந்திய மக்களின் போராட்டமானது முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்புக்குள்ளேயே இருக்கும்படியாக ஒரு அரசியல் நுட்பத்தை காங்கிரஸ் கட்சி வகுத்தது.

இந்த நுட்பமான உடன்பாட்டை திணிப்பதில் அவை பிளவுபடாதிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிசத் தலைமைகள் முக்கிய பங்கு வகித்தனர். 1942ல் ஹிட்லருக்கு எதிரான "ஜனநாயக" பிரிட்டனின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்ற அடிப்படையில் 'இந்தியாவை விட்டு வெளியேறு' என்றழைக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை இந்த ஸ்டாலினிசத் தலைமைகள் எதிர்த்தனர், ஆனால் அதன் பின்னர் (பாகிஸ்தானுடன் ஏற்பட்ட) யுத்தத்தின் போது நேரு தலைமையிலான "முற்போக்கு" தேசிய முதலாளித்துவத்தைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும் அது சோவியத் அதிகாரத்துவத்துடன் வைத்திருந்த கூட்டுக்கும் அவர்களது ஆதரவை தெரிவித்தனர்.

1971ல் பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் (இப்போது பங்களாதேஷ்) பிரிந்ததிலிருந்து உலகப் போருக்கு பிந்திய உடன்பாடுகள் உடையத் தொடங்கின. பிளவுபடுத்தப்பட்ட வங்காளி தேசிய இனத்தின் ஒரு பகுதியினரின் புரட்சிகரமான எழுச்சி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், காங்கிரசும் இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கிய பிரிவினையின் அடிப்படையையே அச்சுறுத்துகின்றது என்பதனால் இந்திராகாந்தி பங்களாதேஷ் "விடுதலைக்காக" போராடுவதாக கூறி இந்திய இராணுவத்தை அங்கே அனுப்பினார்.

இந்த தலையீட்டு நான்கு வருடங்களுக்குப் பின்னர் 1975ல் ஆழமான சமூக நெருக்கடி வளர்ச்சியடைந்து இந்திராகாந்தி அவசர நிலை ஆட்சியை பிரகடனம் செய்தார். இரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களை சிறையில் அடைத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகள் வளர்ச்சியடைந்து இந்திராகாந்தி அவரது சொந்த (இந்திரா) காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவசர நிலை ஆட்சி நீக்கப்பட்ட பின்னர் 1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சி முழுமையாக துடைத்து கட்டப்பட்டது. காங்கிரஸின் அதிருப்தியாளர்களையும் இதர முதலாளித்துவ தலைவர்களையும் மொரார்ஜி தேசாயின் தலைமையின் கீழ் ஜனதா கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்தது.

ஆனால் ஜனதா பல்வேறு மோதல் குழுக்களாக பிளவுண்டு வீழ்ச்சியடைந்தது. 1980ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. எவ்வளவு அதிகமாக உள்நாட்டு நெருக்கடி ஆழமடைந்ததோ அந்த அளவிற்கு இந்திராகாந்தி மதசார்பின்மை முகமூடியை தூக்கி வீசி விட்டு வகுப்புவாதத்தை விளையாட்டு சீட்டுக்களாகக் கருதினார். சீக்கிய பிரிவினைவாதத்துக்கு எதிராக இந்து பேரினவாதத்தை வளர்த்தார். ஆனால் இந்திராகாந்தியே பேரினவாதத்தின் சூறாவளியை அறுவடை செய்தார். ஜூன் 1984ல் அமிர்தசரஸில் உள்ள சீக்கிய பொற்கோயில் மீது தாக்குதல் தொடுக்க படைகளை அனுப்பிய பின்னர் அவரது சொந்த சீக்கிய மெய்பாதுகாவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முதலாளித்துவம் அதன் ஆட்சியின் பிரதான கருவி உடைவதைக் கண்டு அஞ்சி இந்திராகாந்தியின் மகனான ராஜீவை கட்சியின் தலைவர் பதவிக்கு நியமித்தது. 1954ல் இந்திராகாந்தியின் கொலைக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்ததும் ராஜீவ் பிரதமராக பொறுப்பு ஏற்றார்.

காந்தியின் IMF வேலைத்திட்டம்

ஆனால் நேருவினாலும் காந்தியினாலும் ஒன்றாகக் கொண்டு வரப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டம் ஆழமாக செல்லும் வர்க்க வகுப்புவாத மோதல்களினால் உடைந்து நொறுங்கியது. 1980களில் ஸ்டாலினிச ஆட்சி நடந்த நாடுகளில் "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற தேசியவாத வேலைத்திட்டம் வீழ்ச்சியடைந்ததை போலவே காங்கிரஸின் தேசிய சுய பூர்த்தி பொருளாதார வேலைத்திட்டமும் உடைந்தது.

இந்திராகாந்தி அரசுடைமை (தேசியமயமாக்கப்பட்ட) தொழில்துறைகளை தகர்க்க தொடங்கினார். பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு இருக்கும் அனைத்து தடைகளையும் அகற்றுவதற்கு நாசுக்காக கூறப்படும் வார்த்தை தான் "ஏற்றுமதி மூலோபாயம்". இது ஐ.எம்.எப். யினால் நிரூபிக்கப்பட்ட கொள்கையாகும். காந்தி சிறு முதலாளித்துவ பிரிவினரும் குட்டி முதலாளித்துவ பிரிவினரும் முன்னே அவர் ஊக்குவித்தார். அதே சமயம் வறிய மக்களின் நிலைமைகள் அதிகரித்து செல்லும் விலைஉயர்வுகளினாலும் ஆலைமூடல்களினாலும் வேலை அழிப்புகளினாலும் சம்பள வெட்டுக்களினாலும் தொழிற்சங்கங்களின் மீதான தாக்குதல்களினாலும் மோசமடைந்தது.

1989 தேர்தல்கள் இந்திய முதலாளித்துவத்தின் பழைய வேலைத்திட்டத்தின் வீழ்ச்சியினால் தூண்டிவிடப்பட்ட சமூக மற்றும் வர்க்க எழுச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க காங்கிரஸ்—ஸ்டாலினிச கூட்டினால் முடிதாயதிருந்தது என்பதையும் உலக முதலாளித்துவத்தின் வரம்பற்ற சுரண்டலுக்கு இந்தியா திறந்துவிடப் படுகின்றது என்பதையும் வெளிப்படுத்தியது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் அதன் 415 தொகுதிகளின் பாதியை இழந்தது. ஸ்டாலினிஸ்டுகள் ராஜீங்காந்திக்கு ஆதரவு அளிக்க மறுத்ததினால் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முயலவில்லை.

பதிலாக வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஸ்டாலினிஸ்டுகள் பிரதான தூணாக இருந்தவர்கள் "இடது" பக்கம் இந்திய கட்சியினாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யினாலும் தூக்கி நிறுத்தப்பட்ட வி.பி. சிங் அரசாங்கம் வலது பக்கத்தில் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச நோக்குடைய இந்து பேரினவாத பாரதிய ஜனதா கட்சியினால் முட்டுக் கொடுக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இரண்டில் இருந்து 89 ஆக அதிகரித்தது எடுத்துக்காட்டுவதாவது, இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி உடைந்து விழும் போது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக பாசிச பாணியிலான தாக்குதலையும் வகுப்பு வாதத்தையும் கட்டவிழ்த்துவிட இந்திய ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவினர் சிந்திக்கின்றனர்.

524 தொகுதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தில் 144 தொகுதிகளுடன் ஆட்சி நடத்தும் வி.பி. சிங் அரசாங்கம் இந்திரா காந்தி, ராஜீங்காந்தி அரசாங்கங்களினால் தொடங்கப்பட்ட உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கிய வேலைத்திட்டத்தை தொடர்ந்து பின்பற்றிய வண்ணம் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களை உயர்த்த போவதாக வெற்றுக் கூவல் அனுப்பியது. அதன் மூலம் ஜாதி கலவரங்களுக்கே தூபம் இட்டது. வி. பி. சிங் குக்கும் ராஜீங் காந்திக்கும் இடையில் உண்மையான வேறுபாடுகள் ஏதுமில்லை அவர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் 1984ல் இருந்து 86 வரை நிதி அமைச்சராக பணியாற்றியவர் பெரும் முதலாளிகளுக்கு மறு உத்தரவாதம் அளிப்பதற்காக ஒரு செல்வாக்கு நிறைந்த, பணக்கார ஜாட் நிலப்பிரபு ஜாதியைச் சேர்ந்தவரும் தொழில் அதிபர்களின் கூட்டாளியுமான தேவிலாலை அவர் துணைப் பிரதமராக்கினார்.

ஒரு "இந்து ராஜ்யத்தை" உருவாக்கப் போவதாக கூறியபடி இந்து வகுப்புவாதத்தை பாரதீய ஜனதா கட்சி தூண்டிவிட்டு வகுப்புவாத கலவரங்களை உண்டு பண்ணியது. அயோத்தி நகரிலுள்ள 16ம் நூற்றாண்டு பள்ளிவாசலை உடைத்து அந்த இடத்தில் ஒரு ராமர் கோயிலை கட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இப்பிரச்சார இயக்கத்தின் போது பா.. கட்சித் தலைவர் எல். கே. அத்வானி கைது செய்யப்பட்ட போது பா.. கட்சி வி.பி.சிங் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கியது. பாராளுமன்ற நெருக்கடியை உருவாக்கியது.

இறுதி வரையில் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகள் வி. பி. சிங் அரசாங்கத்தை தக்க வைக்க முயற்சித்தனர். அத்தருணத்தில் சி.பி.எம். இன் மூத்ததலைவர் ஜோதிபாசு பா. . கட்சியை "மக்களின், சமுதாயத்தின் எதிரி" என்று கண்டனம் செய்தார். ஆனால் ஏன் இந்த ஸ்டாலினிசத் தலைமைகள் இந்து பாசிஸ்டுகளுடன் கோட்பாடற்ற முறையில் கூட்டு சேர்ந்து வி. பி. சிங் அரசாங்கத்தை தக்க வைத்தனர் என்பதையோ, அல்லது வி. பி. சிங் ஆட்சிக் காலத்தின் போது பா. . கட்சித் தலைவர்களும், சி. பி. . (எம்) சி. பி. . தலைவர்களும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை இரவு போசன விருந்தின் போது நடத்திய பேச்சு வார்த்தைகளின் அடிப்படை என்ன என்பதையோ விளக்கவில்லை.

நவம்பர் 1990ல், இந்தியாவில் போலி பாராளுமன்ற ஜனநாயகம் வி. பி. சிங் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும் பெரும் செப்படி வித்தையாக மாறியது. வி. பி. சிங்கின் ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சென்ற 61 உறுப்பினர்களைக் கொண்ட சந்திரசேகரின் சிறிய குழுவினர் காங்கிரசுடன் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க மறுத்தது. இதனால் பாராளுமன்றத்தில் 8ல் 1 பங்கு உறுப்பினர்களை கொண்ட சந்திரசேகரின் குழுவை ஆட்சி அமைக்கும்படி ஜனாதிபதி கேட்டார்.

ஒரு புதிய தேர்தல் பலாத்காரமான எழுச்சிகளை தோற்றுவிக்கும் என்று அஞ்சிய இந்திய முதலாளித்துவம் சாத்தியமான அளவிற்கு சந்திரசேகர் அரசாங்கத்தை வைத்திருக்க தீர்மானித்தது. இப்போது ராஜீவ்காந்தியின் கொலை பாராளுமன்ற அமைப்பின் முதலாளித்துவ ஆட்சி நுட்பங்களின் முழுமையான நெருக்கடியையும் கோடிட்டுக் காட்டுகிறது. இது இந்தியாவை உள்நாட்டு போர் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

அரசியல் வெடிப்பின் பின்னணியில் இருப்பது இந்திய முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியாகும். ராஜீவ் காந்தியினாலும் வி. பி. சிங்கினாலும் "ஏற்றுமதி மூலோபாயம்?” என்றழைக்கப்பட்ட கொள்கை தொடரப்பட்ட போதிலும் உலக சந்தையில் இந்தியாவின் பங்கு 1 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதமாக கடந்த சில வருடங்களில் குறைந்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னபு தேசிய வருமானத்தில் 10 சதவீதமாக இருந்து வெளிநாட்டு கடனுக்கான வட்டி இப்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு செலாவணி இருப்பில் மிக மோசமான நிலைமையை எட்டியுள்ள நிலையில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்கே வெளிநாட்டு செலாவணி இருப்பு போதாத நிலையில் ஜப்பானிடம் கடன் வாங்கி இறக்குமதி செய்யும் நிலையிலுள்ளது. வெளிநாட்டு கடன் 1 ¼ லட்சம் கோடி ரூபாயை எட்டிவிட்டது. விலைவாசி 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

வளைகுடா யுத்தம் குறிப்பாக இந்தியாவை பெருமளவில் பாதித்துள்ளது. அதன் இறக்குமதி செலவு 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அரசாங்கம் எண்ணெய் விலைகளை 25 சதவீதம் உயர்த்தியது.

வேலையின்மை நகர்ப்புறங்களில் 3 கோடிக்கு அதிகமாவும், நாட்டுப் புறங்களில் 10 கோடிக்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. 250,000 ஆலைகள் நலிவுற்று மூடப்பட்டுள்ளன. உத்தியோக பூர்வ வறுமைக் கோட்டின் கீழ் நாட்டு மக்கள் தொகையில் (80 கோடி) பாதிப்பேர் இருக்கின்றனர்.

நேரு, இந்திராகாந்தி காலத்தில் பின்பற்றிய சுய பூர்த்திக் கொள்கையை இப்போது காங்கிரஸ் கட்சி கைவிட்டு விட்டது. அது ஒரு முதலீட்டு சந்தைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது அமெரிக்காவிலுள்ள ஹவார்ட் வியாபார கல்லூரியில் "வளைந்து கொடுக்கும், மிகவும் சக்தி வாய்ந்த லாப நோக்குக் கொண்ட பொதுத்துறை" என்றழைக்கப்படும் வெற்று முழக்கத்தை செய்கிறது.

சுதந்திரம் என்றழைக்கப்பட்டு பல பத்தாண்டுகளுக்கு பின்னர் மத சார்பற்ற, ஜனநாயக இந்திய அரசு என்ற முகமூடி நொறுக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் "சுதந்திரமான" பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி மத, ஜாதி, தேசிய பிளவுகளை வெடித்தெழச் செய்துள்ளது. இது காலாவதியாய் போன தேசிய அரசு அமைப்புமுறையின் மீது உலக பொருளாதாரத்தின் அழுத்தத்தை பிரதிபலிக்கிறது. அதேபோல் பூகோளத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தேசியவாத பொருளாதார வேலைத்திட்டங்களின் வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

திவாலான முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்ட குருட்டுப் பாதையிலிருந்து முன்னேறிச் செல்வதற்கான பாதையை ஒரே ஒரு சக்தியே வழங்க முடியும். அது இந்திய தொழிலாளி வர்க்கமாகும். இந்திய தொழிலாள வர்க்கம், இந்திய துணைக் கண்டத்திலுள்ள அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் தன் பின்னே அணிதிரட்டி சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் சேர்ந்தே காட்டுமிராண்டி நிலைமைக்கு நாட்டை மூழ்கடிப்பதிலிருந்து உண்மையான சுதந்திரத்தைப் பெற முடியும். சோலிசப் புரட்சியை முன்னெடுத்து உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும், துணைக் கண்டத்தில் ஐக்கிய சோசலிச குடியரசுகளை உருவாக்க முடியும். இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் டிராட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகம் செயற்படுகின்றது. அது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கை பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் சேர்ந்து துணைக் கண்டத்தில் இந்த வேலைத்திட்டங்களுக்காக போராடுகிறது.

No comments:

Post a Comment