"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Monday, June 13, 2016

சென்னை துப்புரவு தொழிலர்களின் அடிப்படை உரிமைகளை வெல்ல ஏஐடியுசி, சிஐடியுவின் முழு பலத்தையும் அணி திரட்டப் போராடு!


இதழ் எண் 25 செப்டம்பர் 1989

சென்னை மாநாகராட்சி அதன் 300 ஆண்டு நிறைவை கோலாகலமாக கொண்டாடும் அதே சமயம் அதில் பணியும் 6,000 துப்புரவு தொழிலாளர்கள் வாரம் ஒருநாள் கூட விடுமுறை இல்லாதவர்களாக வருடம் 365 நாட்களும் வேலை செய்ய வேண்டிய கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இப்படியாக தொடர்ந்து கோரமாக சுரண்டும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் அதன் ஏஜண்டுகளான கார்ப்பரேசன் நிர்வாக அதிகாரிகளுக்கும், அதேபோல் இதற்கு கடந்தையாக 40 வருடங்களுக்கும் மேலாக செயற்படும் கார்ப்பரேசன் லேபர் யூனியனின் துரோக ஸ்டாலினிசத் தலைமைகளுக்கும் எதிராக துப்புரவு தொழிலாளர்கள் கிளர்ந்தெழ தொடங்கி இருக்கின்றார்கள்.

துப்புரவு தொழிலாளர்களின் பொரும்பான்மையினர் மத்தியில் இருக்கும் கல்வி அறிவின்மையை மேலும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு அதிகாரிகளும் அதற்கு ஒத்துழைக்கும் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும், வேலை நிலைமைகளையும் பன்மடங்கு மோசமாக்கி சாதனங்களும் தொழில்நுட்பங்களும் மிகவும் வளர்ச்சியடைந்த இன்றைய காலக்கட்டத்திலே முறையாக தீனிகூட போடாத எலும்பும் தோலுமான கால்நடைகளை பயன்படுத்துவதாலும், மேலும் வண்டி ஓட்டும் வேலையையும் குப்பை அகற்றும் வேலையையும் ஒரே தொழிலாளியே செய்ய வேண்டி இருப்பதாலும் அது அத்தொழிலாளிக்கு பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல் அதன் விளைவாக பொது மக்களிடமிருந்து அனாவசியமான அவச் சொற்களையும் கேட்க வேண்டிய நிலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடி, உலகளவில் தொழிலாளர்களின் வேலைகளில் அழிப்பையும், வேலைப்பளு அதிகரிப்பையும், வாழ்க்கைத் தர சீரழிவையும் உண்டு பண்ணி வருகிறது. முதலாளித்துவ வர்க்கமும் சுரண்டப்படும் தொழிலாள வர்க்கமும் தீராபகை கொண்ட வர்க்கங்களாக போராட்டத்தை நடத்துகின்றன. நீண்ட காலத்திற்கு முன்பே ஸ்தாபனமயப்படுத்தப்பட்டு போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியினர் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் யாவும் துரோக ஸ்டாலினிச மற்றும் இடைநிலைவாத தொழிற்சங்கத் தலைமைகளின் காட்டிக்கொடுப்புகளின் காரணமாக படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துத் தொழிலாளர்களின் வேலைகளை பாதுகாப்பதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் நடைமுறை சாத்தியமில்லை என்றவாறு தொழிலாளர்கள் மத்தியில் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாக செயற்படும் ஸ்டாலினிச சி.பி.(எம்) சி.பி.. யுசிபி தலைமைகளும் மாவோவாத இந்திய மக்கள் முன்னணி போன்ற தலைமைகளும் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிக்கு திவால்நிலைக்கு தொழிலாளர்களை 'பலி' கொடுக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளிலேயே போராட்டக்களத்தில் குதித்து புதிய உரிமைகளை வென்றெடுக்க சென்னைத் துப்புரவு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டமும், போராடிப் பெற்ற உரிமைகளை தொடர்ந்து பேணுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் நடத்தும் போராட்டமும் ஒன்றிணைகின்றன.

..டி.யு.சி, சி..டி.யு. தொழிற்சங்கத் தலைமையின் அரசியல் குருக்களான ஸ்டாலினிச சிபிஐ சிபிஐ (எம்) தலைமைகள் என்ன விலை கொடுத்தும் இன்று மரண வேதனையில் மூச்சு திணறும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உயிர் கொடுக்க அயராது உழைக்கின்றனர். தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களினால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படும் டாட்டா பிர்லாக்களின் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக, வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஆட்சியில் அமர்த்தி முதலாளித்துவ ஆட்சியைத் தொடர்ந்து பேணும், அவர்களுடைய அரசியல் வேலைத்திட்டங்களின் காரணமாக சோசலிச வேலைத்திட்டத்திற்கு மற்றும் தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக போராடுவது 'ஆகாசக்கோட்டை' என்று கூறுகின்றனர்.

இன்று தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவினரின் முக்கியமான கோரிக்கைகளையும் பூரணமாக வென்றெடுக்க நடத்தும் போராட்டம், முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை தூக்கி வீசி தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் தேவையின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்திற்காக போராட வேண்டியதன் அவசியத்தையும் முன் வைத்துள்ளது. இதற்காக தொழிலாள வர்க்கத்தின் முழு வர்க்க பலத்தையும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அணிதிரட்டி போராட, உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்டு இந்தியாவில் சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடுகின்றது. அதன் தொழிற்சங்கப் பிரிவான சோசலிசத் தொழிலாளர் அணி பின்வரும் வேலைத்திட்டங்களை வைத்து துப்புரவு தொழிலாளர்களை அணிதிரட்ட போராடுகின்றது.

  1. வாரத்தில் இரு நாள் விடுமுறைக்கு போராடு!
  2. முன் அறிவிப்பின்றி தற்காலிக வேலை நிறுத்தம் செய்வதை உடனே நிறுத்து!
  3. ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ளது போன்று பண்டிகை மற்றும் தேசிய விடுமுறைகளுக்கு போராடு!
  4. கால்நடைகள் மூலம் குப்பை அகற்றுவதை நிராகரி! மினிலாரிகளை பயன்படுத்து!
  5. தற்காலிக தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்!
  6. வேலையின் போது உடல்நலக்கேடு ஏற்படாமல் தடுக்க மருத்துவ வசதிகளை உறுதி செய்! அதற்கு அவசியமான அணிகளை (கையுறை, பூட்ஸ், மழைக்கோட்டு போன்றவை) வழங்கு!
  7. அனைத்து தொழிலாளர்களுக்கும் வீட்டுவசதியை உறுதி செய்!
  8. விலைவாசி ஏற்றத்திற்கு தகுந்தவாறு சம்பள உயர்வு வழங்கு!
  9. அனைத்து ஆலைகளையும் டெப்போகளையும், டிவிசன்களையும், வங்கிகளையும் தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்போடு!
  10. வேலைப்பளு அதிகரிபை தோற்கடி! வேலை அதிகரிப்புக்கு ஏற்ப புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்து!
  11. அனைத்து விதமான லஞ்சத்தையும் ஒழி!
  12. மேற்கூறிய கோரிக்கைகளுக்காக போராட சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களை காலவரையற்ற பொதுவேலை நிறுத்தத்தில் இறக்கு!
  13. அதற்கு ஆதரவாக ஏஐடியுசி, சிஐடியுவை மாநில அளவிலும், நாடு பரந்த அளவிலும் பொது வேலை நிறுத்தத்தில் இறக்கு!
  14. சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவை துண்டித்து சோசலிச மற்றும் தீர்க்கப்படாத ஜனநாயக வேலைத்திட்டங்களை நிறைவேற்றப் போராடும் ஒரு தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்க போராட நிர்பந்தி!
  15. 40 வருடங்களுக்கு மேலாக தொழிற்சங்க ஜனநாயக நெறிமுறைகளை கொன்று தொழிலாளர்களை கோரமாக சுரண்டுவதற்கு உடந்தையாக செயல்பட்டு வருபவர்களை சங்கத்திலிருந்து வெளியேற்று!
  16. உடனடியாக சங்க பொதுச் சபையை கூட்டி தேர்தலை நடத்து!
  17. கழகத்தின் ஒவ்வொரு டிவிஷன் மற்றும் டெப்போ கிளைக் கூட்டங்களை உடனடியாக கூட்டு!
  18. பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் ஓங்குக!

No comments:

Post a Comment