"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Saturday, June 18, 2016

கிழக்கு ஐரோப்பாவும், சி.பி.எம். அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கையும்!


இதழ் 029 பிப்ரவரி 1990

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் பூத்துக் குலுங்குவதாக 40 வருடங்களாக அங்குள்ள ஸ்டாலினிச அதிகாரத்துவ ஆட்சியாளர்களைப் போலவே, இந்தியாவிலும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளின் (சி.பி.எம், சி.பி.) தலைமைகள் கூறி வந்த பொய்கள் அனைத்தையும், தவிடுபொடியாக்கும்படி அங்குள்ள தொழிலாள வர்க்கம் பிரமாண்டமாக திரண்டெழுந்தனர். ஸ்டாலினிச ஆட்சியாளர்களை மாறி மாறி ஆட்சியிலிருந்து விரட்டும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டம் அங்கே 40 வருடங்களாக சோசலிச போர்வையில் ஆட்சி புரிந்து வந்த சலுகைகள் நிறைந்த, ஊழல் மலிந்த ஸ்டாலினிச அதிகாலத்துவத்தின் சோசலிச விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் ஆகும்.

கிழக்கு ஐரோப்பிய நிகழ்ச்சிகள் ஏகாதிபத்திய வாதிகள் கொக்கரிப்பதைப் போல் சோசலிசத்தின், கம்யூனிசத்தின் வீழ்ச்சியைக் குறிக்கவில்லை. மாறாக சோசலிசம், கம்யூனிசத்தின் விரோதியான ஸ்டாலினிசத்தின் வீழ்ச்சியையே குறிக்கிறது. ஸ்டாலினிசத்திற்கு எதிராக 66 வருடங்களாக ட்ராட்ஸ்கிச இயக்கம் மார்க்சிசத்தை முன்னெடுக்க நடத்தி வந்த அரசியல் தத்துவார்த்த போராட்டங்களை மேலும் நுசுப்படுத்தி உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசப் புரட்சி ஏற்பட்டது. சோசலிசம் வளர்ச்சி அடைகிறது என்ற பொய்யை டிராட்ஸ்கிச இயக்கம் தொடக்கத்திலிருந்தே அம்பலப்படுத்தி வந்துள்ளது. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஏகாதிப்பத்தியங்களுடன் யால்டா, பொட்ஸ்டாம் ஆகிய இடங்களில் ஸ்டாலின் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மேற்கு ஐரோப்பாவிலும், சர்வதேச ரீதியாகவும் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை ஸ்டாலின் ஒப்புக் கொண்டதற்கு இணங்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை மாஸ்கோவின் 'ஆதிக்க பிரதேசங்களாக' ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டது. பின்னர் ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையில் ஏற்பட்ட கெடுபிடி யுத்தநிலைமைகளின் (Cold war) காலத்திலேயே கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தனிச்சொத்துடைமை ஒழிக்கப்பட்டு அரசு உடமையாக்கப்பட்ட சொத்து உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. இப்படியாக சொத்து உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் அங்கே தொழிலாள வர்க்கம் புரட்சிகரமான முறையில் எழுச்சியுற்று சொய்யப்பட்ட ஒன்றல்ல மாறாக ரஷ்ய செம்படையின் டாங்கிகளின் உதவியுடன் அதிகாரத்துவத்தினால் 'மேலே இருந்து' புகுத்தப்பட்ட ஒன்று ஆகும்.

மேற்கு ஜெர்மனியிலும் இதர மேற்கு ஐரோப்பாவிலும் முதலாளித்துவம் பாதுகாக்கப்படும் என்று மாஸ்கோ அதிகாரத்துவம் வழங்கிய உத்தரவாதத்தின் ஒரு பிரிக்க முடியாத பாகமாகவே ஜெர்மன் ஜனநாயக குடியரசு (DDR) அமைக்கப்பட்டது. இதனால் கிழக்கு ஜெர்மனியிலும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டதானது, சோசலிசத்தை நோக்கிய உண்மையான நடவடிக்கை என்று கூற முடியாது. ரஷ்ய செம்படையின் உதவியுடன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட மாஸ்கோவின் பொம்மை ஆட்சிகளின் பிரதான வேலை, அங்கே சுதந்திரமான தொழிலாள வர்க்க புரட்சி எழுச்சி ஏற்படவிடாது நசுக்குவதாகும். ஏனெனில் சலுகைகள் நிறைந்த ஸ்டாலினிச அதிகாரத்துவங்களுக்கு ஏகாதிபத்தியத்தின் மீதுள்ள பீதியைக் காட்டிலும் தொழிலாள வர்க்கத்தன் சுதந்திரமான புரட்சி நடவடிக்கை எங்கே தமது அதிகாரத்துவ ஜாதியின் நலன்களுக்கு சாவு மணி அடித்துவிடப் போகிறது என்று அஞ்சினார்.

1953ல் கிழக்கு ஜெர்மனியிலும் 1956ல் ஹங்கேரியிலும், 1968ல் செக்கோ சிலாவாக்கியாவிலும், 1970, 1980-1981களில் போலாந்திலும் தொழிலாளர்களின் எழுச்சியை ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் குரூரமாக ஒடுக்கியது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்புரட்சித்தன்மையை மேலும் அம்பலப்படுத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சொத்து உறவு மாற்றத்தின் பின்னர் அந்த அரசுகளை ஊனமுற்று தோன்றிய தொழிலாளர் அரசு (deformed workers state) என்று டிராட்ஸ்கிச இயக்கம் அந்த அரசுகளின் வர்க்கத் தன்மையை விபரித்தது; 'ஊனமுற்று தோன்றிய' என்பதில் வலியுறுத்தல் செய்தது. ஏனெனில் இந்நாடுகளில் முதலாளித்துவ சொத்துறவுகள் அழிக்கப்பட்டு உற்பத்தி சாதனங்கள் அரசு உடமையாக்கப்பட்டதானது அக்டோபர் புரட்சியைப் போல் 1917ல் சோவியத் யூனியனில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச உணர்வுகளுடன் சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையினால் மார்க்சிச கட்சியின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டதல்ல. முதலாளித்துவ சொத்துறவுகளை அழித்து உற்பத்தி சாதனங்களை அரசு உடமையாக்கி அதனை பாதுகாக்கின்ற அளவுக்கு அதனை தொழிலாளர் அரசு என்று டிராட்ஸ்கிச இயக்கம் வரையறை செய்தது.

சி.பி.எம் அரிசயல் தலைமைக்குழுவின் அறிக்கை கூறுவது: 'கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அடிப்படையான சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தன. அந்த சமுதாய மாற்றங்கள் பழைய சுரண்டல் வர்க்கங்களின் ஆட்சிக்கு முடிவுக்கட்டி சோசலிச முன்னேற்றத்திற்கான அடிப்படையை உருவாக்கின. இருப்பினும் ருமேனியாவில் நடந்த குழப்பமான நிகழ்ச்சிகள் உட்பட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அண்மையில் நடந்து உள்ள நிகழ்ச்சிகள் சோசலிசத்தைக் கட்டுவதிலும், இந்த சோசலிஸ்ட் அரசுகள் செயல்படுவதிலும் பல்வேறு தவறுகள் நடந்திருப்பதையே காட்டுகின்றன. முதலாளித்துவ ஜனநாயகத்துடன் ஒப்பிடும் போது சோசிலிஸ்ட் ஜனநாயகம் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவமாகும். இது மேலும் மேலும் பெரும் திரளான மக்கள் பகுதியினரை ஆகர்ஷித்து அவர்களை சமூகம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் அனைத்துத் துறைகளிலும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். இதனைச் செய்ய தவறியதும், சோசலிஸ்ட் நெறிமுறைகளை பல ஆண்டுகளாக மீறி வந்ததும் மக்கள் அரசிடமிருந்து அன்னியப் பட்டு செல்வதற்கு இட்டுச் சென்றது. உள்கட்சி ஜனநாயகத்தில் லெனினிச முறைகள் மீறப்பட்டன. இதன் விளைவாக அதிகார வர்க்கப் போக்கு வளர்ந்ததுடன் கூடவே தத்துவார்த்த ரீதியில் சிதைவும் ஏற்பட்டது. கட்சி அணிகளுக்குள் ஊழல் மலிந்த சர்தர்ப்பவாதிகள் செல்வாக்குச் செலுத்தி வந்தது. சில நாடுகளில் மக்கள் கட்சியிடமிருந்து அன்னியப்படுவதற்கு வழிவகுத்தது" (தீக்கதிர், 16-1-90).

சொத்து உறவுகளில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவை மட்டுமே சோசலிசத்திற்கான முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பா, சீனாவின் அனுபவங்கள் அப்பட்டமாக நிரூபிக்கின்றன. சீரழிந்த தொழிலாள வர்க்க அரசான சோவியத் யூனியனிலும், ஊனமுற்று தோன்றிய தொழிலாளர் அரசுகளைக் கொண்ட கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் உள்ள பெரும் பொருளாதார நெருக்கடியும் அதிகரித்து வரும் வேலையின்மையும், சமூக முரண்பாடுகளும் ஸ்டாலினிஸ்டுகளின் 'சோசலிச' நாடுகளின் நெருக்கடிகளை அம்பலப்படுத்துபவையாக தோற்றம் அளிக்கின்றன. சி.பி.எம். தலைவர்கள் பல பத்தாண்டுகள் போற்றிப் புகழ்ந்த "சோசலிச நாடுகளில்" சோசலிசத்தைக் கட்டுவதிலும், 'சோசலிஸ்ட் அரசுகள் செயல்படுவதிலும் தவறுகள் நடந்திருப்பதாகவும், அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகம் இருக்கவில்லை உள்கட்சி ஜனநாயகத்தில் லெனினிச நெறிமுறைகள் மீறப்பட்டன என்றும் … 'கட்சி அணிகளுக்குள் ஊழல் மலிந்த சந்தர்ப்பவாதிகள் செல்வாக்கு செலுத்தினர்' என்றும் பலவற்றை பல பத்தாண்டுகள் மூடி மறைத்து வைத்து இருந்து இப்போது சொல்லும்படி நிர்பந்திக்கப்பட்டிருப்பினும் ஒரு அடிப்படை உண்மையை தொடர்ந்தும் மூடி மறைத்து வருவதற்கு காரணம் தமது சொந்த தேசியவாத கண்ணோட்டத்திற்கும், நலன்களுக்கும் அவை ஆபத்தை ஏற்படுத்தும் என்பதினாலாகும். அது தான் விஞ்ஞான சோசலிசத்திற்கு எதிரான பிற்போக்கு கற்பனாவாத கொள்கையான 'தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டுவது' என்பதாகும். இது சோவியத் யூனியனில் 1924ல் அங்கு வளர்ச்சி அடைந்து வந்த சலுகைகள் நிறைந்த அதிகாரத்துவ தட்டின் பேச்சாளர்களான ஸ்டாலின் புக்காரினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் முன்நோக்கு ஆகும். முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து 1917ல் அக்டோபரில் உருவாக்கப்பட்ட முதலாவது தொழிலாள வர்க்க அரசும், சோவியத் மக்களும் மூன்று வருட உள்நாட்டு யுத்தத்தை (1918-1921) எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சோவியத் யூனியனின் பின்னடைந்த பொருளாதாரமும், ஏகாதிபத்தியத்தால் ராணுவ, பொருளாதார ரீதியாக கொண்டு வரப்பட்ட பிரமாண்டமான அழுத்ததங்களின் மத்தியிலும் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பற்றாக்குறையான சூழ்நிலைமை அரசு அதிகாரத்துவம் வளர்ச்சி அடைவதற்கான புறநிலையான நிலைமைகளை தோற்றுவித்தது. சிறப்பு சலுகைகளைக் கொண்ட அரசு அதிகாரத்துவத்தின் அழுத்தமும் 1921ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கையினால் பயனடைந்த குலாக்குகள் (செல்வந்த விவசாயிகள்) நெப்மன்கள் (இடைத்தரகர்கள் குட்டி முதலாளிகள்) ஆகியோரின் அழுத்தமும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு பிரிவினரின் மூலமாக தொடர்ந்து பிரதிபலித்தது. இப்பிரிவினருக்கு சோசலிசத்தில் (உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சிக்கு ஊடாக வர்க்கம் அற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதில்) அக்கறை இருக்கவில்லை. தமது சலுகைகளை மேலும் எவ்வாறு வளர்ப்பது, காப்பது பற்றியே இப்பிரிவினர் அக்கறை கொண்டிருந்தனர். இவர்களுக்கு புக்காரின் முன் வைத்த 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' மிக விருப்பமுடையதாக இருந்தது. இந்த அரசியல் கொடியை பிடித்த வண்ணம் அக்டோபர் புரட்சியின் சர்வதேச முன்னோக்குகளை காட்டிக்கொடுத்ததை மூடி மறைக்க 'மார்க்சிச-லெனினிச லேபிள்களை பயன்படுத்தியது. சோவியத் யூனியனின் எல்லைகளுக்குள் உள்ள வளத்தை பயன்படுத்திக் கொண்டு, பின்தங்கிய ரஷ்ய தொழில் நுட்பத்தின் உதவியோடு 'ஆமை வேகத்தில்' சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்ட, முடியுமென்று புக்காரின் வைத்த வாதத்தை, அதிகாரத்துவத்தின் தலைவனான ஸ்டாலின் அழுங்குப்பிடியாக பிடித்துக் கொண்டார். இந்த "ஆமை வேக சோசலிசக் கட்டுமானமே' இன்றைய சோவியத் யூனியனின், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின், சீனாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணங்களாகும்.

தனி ஒரு நாட்டில் சோசலிசம் கட்டுவது, அதுவும் பின்தங்கிய தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்ட ஒரு நாட்டில் கட்டுவது என்ற பிற்போக்கு கற்பனாவாத கொள்கைக்கு ஸ்டாலின் மேலும் மெருகூட்டினார், அதாவது ஏகாதிபத்திய (ராணுவ) தலையீடு இல்லாதிருப்பின் சோவியத் யூனியனுக்குள் அங்குள்ள பெரும் இயற்கை வளத்தை மட்டும் பயன்படுத்தி சோசலிசத்தை கட்ட முடியும் என்றார். இப்படியான மார்க்சிச திருத்தல்வாதத்திற்கு எதிராகவே டிராட்ஸ்கியும், இடது எதிர்ப்பு அணியினரும் போராடினார்கள். தனி ஒரு நாட்டில் சோசலிசம் கட்டுவது என்ற கொள்கையின் தர்க்க ரீதியான சர்வதேச விளைவுகள் சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு பாதகமாக, அதனை காட்டிக் கொடுப்பதாக இருக்கும் என்று டிராட்ஸ்கி எச்சரிக்கை செய்தார். அவ்வாறே நடந்தது. ஜெர்மனியிலும் (1923), பிரிட்டனிலும் (1926), சீனாவிலும் (1927), ஒன்றன்பின் ஒன்றாக வளர்ச்சி கண்ட புரட்சிகரப் போராட்டங்கள் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் தலைமையின் கீழ் செயல்பட்ட மூன்றாம் அகிலத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்டன. இவ்வாறாக சர்வதேச ரீதியாக சந்தர்ப்பவாத தொழிற்சங்கவாதிகளுடனும் (பிரிட்டன்) முதலாளித்துவ தேசியவாதிகளுடனும் (சீனா-சியாங்கே ஷேக்) ஸ்டாலினிச அதிகாரத்துவம் கூட்டுக்களை ஏற்படுத்தியதை எதிர்த்து 1923லிருந்து டிராட்ஸ்கியும் அவரது தலைமையில் இயங்கிய இடது எதிர்ப்பணியினரும் போராடினர். அதேபோல் உள்நாட்டில் சலுகை மிக்க அதிகாரத்துவ தட்டுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், உற்பத்தியை பெருக்கவும், தொழிற்துறை மயமாக்கல், படிப்படியாக கூட்டுப் பண்ணை விவசாயத்தை உருவாக்கல் போன்ற கொள்கைகளை வைத்து போராடினார்கள். செல்வந்த விவசாயிகளுக்கும், குட்டி முதலாளித்துவ பகுதியினருக்கும் அதிக சலுகைகளை வழங்கிய ஸ்டாலினிச அதிகாரத்துவம் 1923லிருந்து 1928 வரை டிராட்ஸ்கியின் மார்க்சிச அடிப்படையிலான உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை மூர்க்கமாக எதிர்த்து 1927ல் டிராட்ஸ்கியையும், இடது எதிர்ப்பணியினரையும் கட்சியிலிருந்து வெளியேற்றியது. மார்க்சிசத்தையும், போல்ஷிவிக் புரட்சிகர பாரம்பரியம்களையும் காட்டிக்கொடுக்க ஸ்டாலினிச துரோகிகள் உட்கட்சி ஜனநாயகத்தை கொன்றனர். சோவியத்துகளில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நசுக்கினர். அரசு இயந்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவம் ஜி.பி.யு.வின் (ரகசிய போலீஸ்) உதவியுடன் சோவியத் யூனியனிலும் சர்வதேசரீதியாகவும் (ஸ்பெயின்) புரட்சியாளர்களை கொன்று குவித்து, ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி தமது அதிகாரத்துவ பிரிவை பலப்படுத்திக் கொண்டது.

இப்படியே இரண்டாம் உலகப்போரின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும், வியட்நாமிலும், ஆட்சி செய்த ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற மாஸ்கோவின் கொடியின் பின்னால் "சர்வ தேசவாதிகளாக" செயற்பட்டனர். ஸ்டாலினிச ஆட்சியுள்ள அனைத்து நாடுகளிலும் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் நசுக்கப்பட்டது. ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் உலக பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கத்தினதும் மார்க்சிசத்தினதும் விரோதிகளாக இருந்ததால் 'உள்கட்சி ஜனநாயகத்தில்' லெனினிச முறைகள் மீறப்பட்டன.

கட்சி அணிகளுக்குள் ஊழல் மலிந்த சந்தர்ப்பவாதிகள் செல்வாக்குச் செலுத்தி வந்தது, சில நாடுகளில் மக்கள் கட்சியிடமிருந்து அன்னியப் படுவதற்கு வழி வகுத்தது" என்று கூறும் சி.பி.எம். இன் அரசியல் தலைமைக்குழுவினது அறிக்கை இந்த ஊழல் மலிந்த சந்தர்ப்பவாதிகளைத் தான் இது வரை காலமும் மார்க்சிஸ்ட்—லெனினிஸ்டுகள் தான் எனப் போற்றிப் புகழ்ந்தனர். இவர்கள் தான் கிழக்கு ஜெர்மனி, ருமேனியா, பல்கேரியா, செக்கோஸ்லாவாக்கியா பல்கேரியா ஆகிய நாடுகளில் ஆட்சி செய்த உலகப் பொருளாதாரத்தில் இருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு 'ஆமை வேகத்தில்' தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டுகிறோம் என்று ஸ்டாலினிச ஆட்சியாளர்கள் பொய்யான புள்ளி விபரங்களைக் காட்டி அந்த நாடுகளில் சோசலிசத்தை முழுமையாக வெற்றி கொண்டு விட்டோம் என்று கூட புளுகத் துணிந்தார்கள்! உலகத் தொழிற் பங்கீடு உலகப் பொருளாதாரத்தின் வளங்களில் இருந்து தனிமைப்பட்ட நிலைமையுடன் கூடவே குறிப்பாக கடந்த 15 வருடங்களாக ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப, மின்னணுவியல் புரட்சிகளின் தாக்கங்களுக்கு ஸ்டாலினிச ஆட்சியுள்ள நாடுகளின் 'ஆமைவேக' பொருளாதாரங்களினால் ஈடுகொடுக்க முடியவில்லை. சோவியத் யூனியன் சீனா, கிழக்கு ஐரோப்பா போன்ற அனைத்து நாடுகளிலும் மிக பிரமாண்டமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு கோஷத்தை தொடக்கத்தில் எழுப்பியவர்கள் இன்று அதன் தர்க்கரீதியிலான முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அந்த நோக்கத்துடனேயே சோவியத் யூனியன் சீனா, கிழக்கு ஐரோப்பா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள ஸ்டாலினிச ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியங்களுடன் பொருளாதார கூட்டுக்களை ஏற்படுத்துகின்றனர். அங்குள்ள அரசுடைமையின் பலன்களில் ஒட்டுண்ணிகளாக இருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் இப்போது தம்மையே முதலாளிகளாக மாற்றிக் கொள்ளும் பாதையில் வேக நடை போடுகின்றனர்.

சோசலிசத்தின் சாதனை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்: “அறிவியல் தொழில்நுட்பம் அனுபவம் ஆகியவற்றின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிபுணர்களது வழிகாட்டலின்றி சோஷலிசத்திற்கு மாறிச் செல்லுதல் சாத்தியமன்று. ஏனென்றால் உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துவதில் (முதலாளித்துவத்தால் சாதிக்கப் பெற்று உள்ளதுடன் அடிப்படையில்) முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில் இன்னும் மேலான நிலைக்கு உணர்வு பூர்வமாய் வெகுஜன அளவில் முன்னேற்றம் வேண்டுமென சோசலிசம் கோருகிறது"....

(லெனின் நூல் திரட்டு தொகுதி 3. பக்கம் 128.)

சோவியத் ஆட்சியதிகாரத்தையும் சோவியத் நிர்வாக ஒழுங்கமைப்பையும் முதலாளித்துவத்தின் மிக நவீன சாதனைகளுடன் சேர்த்து இணைத்துக் கொள்வதில் நாம் காணும் வெற்றியையே பொறுத்திருக்கிறது' சோஷலிசத்தைக் கட்டியமைப்பதற்கான்ன சாத்தியப்பாடு"

(அதே நூல் திரட்டு, பக்கம் 147)

சோவியத் யூனியனில் சோஷலிசத்தைக் கட்டமைப்பதற்காக சாத்தியப்பாட்டை ஏற்படுத்த வளர்ச்சி அடைந்த நாடுகளில் சோசலிசப் புரட்சி ஏற்படுவது அவசியமென்று லெனினும், டிராட்ஸ்கியும் வலியுறுத்தினர். லெனின் ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் விசேஷ ஏழாவது மாநாட்டில் கூறியதாவது:

உலக வரலாற்றின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நமது புரட்சி தன்னந்தனியாக இருக்குமானால், வேறு நாடுகளில் புரட்சி இயக்கங்கள் இல்லாவிடில் அதன் இறுதி வெற்றியில் எவ்வித நம்பிக்கையும் நிச்சயமாக இராது போல்ஷேவிக் கட்சி இந்தப் பணியினை தனியாக மேற்கொண்ட போது புரட்சி எல்லா நாடுகளிலும் முதிர்ச்சி அடைந்து வருகிறது. நாம் எத்தகைய இடர்ப்பாடுகளை அனுபவிக்க நேரினும் சரி எதிர்காலத்தில் என்ன தோல்விகள் வந்தபோதிலும் சரி இறுதியில் துவக்கத்தில் அல்ல, உலக சோசலிஸ்டு புரட்சி வரும் ஏனெனில் அது அணுகிக் கொண்டிருக்கிறது. அது முதிர்ச்சியடையும், ஏனெனில் அது முதிர்ச்சியுற்று வருகிறது, முழுமையாக முதிர்ச்சியுறும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தான் இப்பணியினை மேற்கொண்டோம். இந்த இடர்கள் எல்லாவற்றிலிருந்தும் நமக்கு விமோசனம் தருவது ஐரோப்பா புரட்சியே என்று திரும்பவும் கூறுகிறேன். இந்த உண்மையினை முற்றிலும் கருத்தியலான இந்த உண்மையினை அடிப்படையாயும் வழிகாட்டியாயும் கொண்டு நாளடைவில் வெற்றுச் சொல்லாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்".

(லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 7, பக்கம் 224.)

லெனின் கூறிய இந்த "உண்மையினை அடிப்படையாயும் வழிகாட்டியாயும் கொண்டு செயல்பட மூன்றாம் அகிலம் அமைக்கப்பட்டது. ஆனால் லெனினுக்கு பின்னர் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் வழிகாட்டலின் கீழ்' மூன்றாம் அகிலம் சீரழிக்கப்பட்டு உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் காட்டிக்கொடுக்கப்பட்டன. 1942ல் மூன்றாம் அகிலம் உத்தியோக பூர்வமாக ஸ்டாலினால் கலைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், தான் அக்டோபர் புரட்சியின் முன்நோக்கை (உலக சோசலிஸ்ட் புரட்சியை) முன்னெடுப்பவன் அல்ல என்பதை மேலும் ஏகாதிபத்தியத்திடம் நிரூபிப்பதற்காக ஸ்டாலினால் செய்யப்பட்டது ஸ்டாலினுடைய இந்நிலைப்பாட்டை அவரின் அடுத்த வாரிசுகளான குருஷ்சேவ் பிஷ்னேவ் … கோர்பச்சேவ் ஏகாதிபத்தியத்துடன் 'சமாதான சக வாழ்வு' என்று முன் எடுத்தனர். இப்படியாக ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் உலக சோசலிச புரட்சி மூல உபாயத்தை நிராகரித்து ஏகாதிபத்தியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட 'சமாதான சகவாழ்வு' என்பது லெனினுடைய உபாயம் என்று அபாண்டமான பொய்யையும் கூறினர்.

உலகப் புரட்சி பற்றி லெனின்

இந்தப் பொய்யை நிர்மூலமாக்கும் லெனினுடைய கூற்று பின்வருமாறு: “தனது மூலதனத்தின் முழுவலிமையும், மிக உயர்ந்த முறையில் ஒழுங்கமைக்கப் பெற்றுள்ள தனது ராணுவத் தந்திரமும்—இதில் சர்வதேச முதலாளித்துவத்தின் அசல் பலமும் அசல் உறுதியும் அடங்கியிருக்கின்றன—இவற்றுடன் கூடிய சர்வதேச ஏகாதிபத்தியம் எந்த சந்தர்ப்பங்களிலும் எந்த நிலையிலும் சோவியத் குடியரசுடன் அக்கம் பக்கமாக வாழ முடிந்திராது. அதன் யதார்த்த நிலையும் அதனுடன் பிணைந்துள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன்களும் அதற்குக் காரணமாகும் வர்த்தகத் தொடர்புகள் சர்வதேச நிதி உறவுகளின் விளைவாக அது சோவியத் குடியரசுடன் அக்கம் பக்கமாக வாழ முடிந்திராது. இந்தத் துறையில் மோதல் தவிர்க்க முடியாதது. இது தான் ருஷ்யப் புரட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் இடர்பாடு, அதன் முன் எழுந்த மிகப்பெரிய வரலாற்றுப் பிரச்சினை. சர்வதேசப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண வேண்டிய அவசியம், ஒரு சர்வதேசப் புரட்சியை எழுப்பவும் நமது குறுகிய தேசியப் புரட்சியிலிருந்து உலகப் புரட்சிக்கான மாற்றத்தைக் கொண்டு வரவும் வேண்டிய அவசியம்". (லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 7, பக்கம் 219-220)

இந்த சர்வதேசிய முன்னோக்கையும் கண்ணோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டே டிராட்ஸ்கியும் இடது எதிர்ப்பு இயக்கமும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக போராடினர். இந்தப் போராட்டத்தின் முக்கிய அம்சமாக நான்காம் அகிலம் 1938ல் டிராட்ஸ்கியின் அரசியல் தலைமையில் அமைக்கப்பட்டது.

டிராட்ஸ்கியும், 1923ல் உருவாக்கப்பட்ட இடது எதிர்ப்பு அணியும் சோவியத் யூனியனுள் கனரக தொழிற்துறை (heavy industry) வளர்ச்சி அடைவதற்கான ஒரு பரந்த வேலைத்திட்டத்தை முன்வைத்தனர். அதில் ஏனைய விஷயங்களுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் சோவியத் யூனியனின் நிலையை பலப்படுத்துவதற்கான திட்டமும் உள்ளடங்கி இருந்தது. உலகப் பொருளாதாரம் பற்றிய எவ்வித அறிவு அவசியமில்லை அல்லது சர்வதேச சந்தையில் சோவியத் தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களின் தரத்தையும், விலையையும் புறக்கணிக்கலாம் என்பது போன்ற கருத்துக்களை டிராட்ஸ்கி நிராகரித்தார்.

டிராட்ஸ்கியின் விஞ்ஞான சோசலிச வேலைத்திட்டம்

வெளிநாட்டு வர்த்தகத்தில் பாட்டாளி வர்க்க அரசின் ஏகபோகம் என்ற கட்டுக்கோப்புக்குள் சோவியத் பொருளாதாரத்திற்கும், உலக முதலாளித்துவ சந்தைக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்தும்படி டிராட்ஸ்கி ஊக்குவித்தார். எவ்வாறாயினும் உலகப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளின் தொழில்நுட்பத்தையும்ம சடரீதியிலான மூலவள வளங்களையும் பெற்றுக் கொள்வதன் அவசியம் ஆகியவை பற்றி டிராட்ஸ்கியிற்கு இருந்த கண்ணோட்டம் அவருடைய பூரணமான சர்வதேசிய முன்னோக்கின் ஒரு அம்சமாகும். ஏகாதிபத்தியத்துடனான சோவியத் வர்க்கத்தின் நீடிப்பை அவர் புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கிற்கு பதிலாக முன் வைக்கவில்லை. அதற்கு நேர்மாறாக 1927ல் இடது எதிர்ப்பு அணியின் வேலைத்திட்டம் பின்வருமாறு அறிவித்தது. 'பொருளாதார அரசியல் மற்றும் ராணுவ அபாயத்தைக் கொண்ட முதலாளித்துவ சுற்றி வளைப்பில் இருந்து ஏந்த ஒரு உள்நாட்டுக் கொள் கையும் மீட்சியை தராது உள்நாட்டுப் பணி என்பது எம்மை நாமே ஒரு பொருத்தமான வர்க்கக் கொள்கையினாலும் தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பொருத்தமான உறவுகளினாலும் பலப்படுத்துவதுடன் சோசலிச கட்டுமானத்திற்கான பாதையில் எவ்வளவு வேகமாக சாத்தியமோ அந்த அளவிற்கு முன்னேற வேண்டும். சோவியத் யூனியனின் பிரமாண்டமான உள்நாட்டு வளங்கள் முழுமையாக இதை சாத்தியமாக்குகின்றன. அதே நேரத்தில் உலக முதலாளித்துவ சந்தையை இதே தேவைக்காக உபயோகிக்கும் போது நாம் எமது அடிப்படை வரலாற்று கணிப்பீடுஉகளை உலக சோசலிசப் புரட்சியின் மேற்கொண்ட வளர்ச்சியுடன் சேர்த்து இணைக்கிறோம். குறிப்பிட்ட முன்னேறிய நாடுகளில் இதன் வெற்றி முதலாளித்துவ சுற்றி வளைப்பு வளையத்தை உடைக்கச் செய்வதுடன் கனமான ராணுவ சுமையிலிருந்தும் எம்மை விடுவிக்கும். இது தொழில் நுட்பத்துறையில் எம்மை பிரமாண்டமான அளவு பலப்படுத்துவதுடன் நகரிலும் நாட்டிலும் மற்றும் ஆலையிலும் பாடசாலையிலும் நமது முழுமையான வளர்ச்சியை முடுக்கிவிடும்.”

டிராட்ஸ்கியும், இடதுசாரி எதிர்ப்பு அணியினரும் மேற்கூறிய திட்டங்களின்படி சோவியத் யூனியன் பொருளாதார பின்னடைவிலிருந்து மீள்வதற்கான சரியான பாதையை காட்டினர். ஆனால் இவை அனைத்தும் ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவத்தினால் நிராகரிக்கப்பட்டது. அன்று டிராட்ஸ்கிச இயக்கம் முன் வைத்த புரட்சிகர வேலைத்திட்டங்கள் சோவியத் யூனியனுக்கு மட்டும் அல்ல இரண்டாம் உலகப் போரின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவிலும் ஊனமுற்று தோன்றிய தொழிலாளர் அரசுக்கும் பொருத்தமானவையே.

விஞ்ஞான தொழில்நுட்பப்புரட்சி

சிபிஎம் தலைமை கூறுவதாவது: “விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியின் பயன்களை பொருளாதார உற்பத்தியுடன் ஒருங்கிணைக்க விடாதவாறு அரசு அதிகார வர்க்கப் போக்கு தடுப்பது பொருளாதார வளர்ச்சி மட்டத்தில் உள்ள பின் தங்கிய நிலைமையை அதிகரித்தது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு அரசு அன்னியப்படும் போக்கை பலப்படுத்தியது.”


விஞ்ஞான, தொழில் நுட்பப் புரட்சியின் பயன்களை பெற்றுக் கொள்ளாமல் தடுத்தது. அந்த நாடுகளில் உள்ள ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் பல பத்தாண்டுகளாக கடைப் பிடித்து வந்த மார்க்சிச விரோத 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' கட்டும் கொள்கையே என்பதை தொழிலாளர்களுக்கு சொல்லாது மூடி மறைப்பதன் மூலம் இந்திய ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகள் தமது மார்க்சிச விரோத தன்மையை மேலும் வெளிக்காட்டி உள்ளனர்"

கிழக்கு ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கம்யூனிச விரோத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி லட்சக்கணக்கில் தெருக்களில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதாக, சிபிஎம் தலைமை குழு அறிக்கை பின்வருமாறு கூறுகிறது …. “மக்கள் மத்தியில் தத்துவார்த்த போதனை அளிப்பது புறக்கணிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் சோசலிஸ்ட் உணர்வை வளர்க்கும் கடமையும் மனித சமுதாயத்தின் உயர்ந்த வடிவத்தை உருவாக்குவதில் பெரும் எண்ணிக்கையில் மக்களை பங்கெடுத்துக் கொள்ள அவர்களை தட்டியெழுப்பும் கடமையும் புறக்கணிக்கப்பட்டது. இது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகள் வளர்வதற்கு வாய்ப்பு அளித்தது" அதே அறிக்கையின் பின்பகுதியில் "… கடந்த நாற்பது ஆண்டு காலமாக சோசலிசத்தின் கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பிய மக்கள் … என்று சொல்லப்படுகிறது.

கடந்த நாற்பதாண்டு காலம் அங்கே சோசலிசம் இருந்து இருந்தால் மக்கள் மத்தியில் சோசலிஸ்ட் உணர்வு வளர்க்க படாமல் அந்த 'சோசலிசம்' எவ்வாறு 40 ஆண்டுகள் நீடித்தது என்பதையோ 40 ஆண்டுகால 'சோசலிசத்தின்' பின் ஏன் லட்சக்கணக்கில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதிகளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதை விளக்க சிபிஎம் தலைமை முயற்சிக்கவில்லை. சிடுமூஞ்சித்தனத்துடன் முன்னுக்குப் பின் முரணாக ஸ்டாலினிஸ்டுகளின் வழக்கமான பாணியில் பூசி மெழுக முயற்சிக்கிறது.

விஞ்ஞான சோசலிசத்தை பற்றி வாய் சவடால் அடிக்கும் சிபிஎம் தலைமை உண்மையில் அதற்கு மாசு கற்பிக்கும் வேலையிலேயே ஈடுபட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது அதன் உள்நாட்டுக் கொள்கை பிற்போக்கானது ஆனால் வெளிநாட்டுக் கொள்கை முற்போக்கானது என்று பித்தலாட்டம் செய்தனர். இப்போது டாட்டா பிர்லாக்களின் மற்றொரு பிரதிநிதிகளான தேசிய முன்னணி ஆட்சி இள்நாட்டு, வெளிநாட்டு அனைத்துக் கொள்கைகளிலும் முற்போக்கு என்றும் அது 51 வருடம் தொடர்ந்து ஆட்சி செய்ய நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பபதாக சிபிஎம் தலைமை கூறியுள்ளது. தாம் மார்க்சிசம் லெனினிசத்தையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும் உறுதியாக உயர்த்திப் பிடிக்கிறதாகவும்" உலக முழுவதுமுள்ள பிற்போக்கு சக்திகளுக்கு (இந்தியாவைத் தவிர?) எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் சோசலிசத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்துவது என்ற தனது லட்சியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அறிக்கையில் கூறி உள்ளது. இது தான் 'ஸ்டாலின் சோசலிசத்தின்' வழி வந்த நம்பூதிரிபாட், ரணதிவேக்களின் சோசலிசம்!

டிராட்ஸ்கிசம் தான் மார்க்சிசம்

மார்க்சிசத்திதன் விஞ்ஞான சோசலிசத்தின் அரிச்சுவடிகளை திரித்து புரட்டும் இவர்கள் உண்மையில் மார்க்சிசத்திற்காக போராடுபவர்கள் மீது அபாண்டமான கரிபூசல்கள் செய்து வருகின்றனர் இப்படியான ஸ்டாலினிச 'சோசலிச' தலைமைகளுக்கு எதிராக சிபிஎம் கட்சி ஊழியர்கள் கிளர்ச்சி செய்து விஞ்ஞான சோசலிசத்திற்காக போராட வேண்டும். இப்போராட்டத்தை முன்னெடுக்க கட்சியினுள் முழுமையான உட்கட்சி ஜனநாயகத்திற்காக போராட வேண்டும். இதற்கு தடையாக இருக்கும் தலைமைகளை தூக்கி வீச வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக 1923ல் இருந்து சோவியத் யூனியனுக்குள் அதிகாரத்துவத்தின் வளர்ச்சி பற்றி எச்சரிக்கை செய்தும் பின்னர் ஸ்டாலின் தலைமையிலான அந்த அதிகாரத்துவத்தின் மார்ச்கிச விரோத போக்குகளை எதிர்த்து சமரசமின்றி டிராட்ஸ்கி நடத்திய அரசியல், தத்துவார்த்த போராட்டங்களை அறிய டிராட்ஸ்யினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினதும் நூல் வெளியீடுகளை படிக்குமாறும், அது பற்றி விவாதிக்க முன் வருமாறும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் அழைக்கிறது.

No comments:

Post a Comment