"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Sunday, June 19, 2016

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மே தினக் கூட்டம்



[‎Socialist Labour League India‬ May Day meeting]

Thozhilalar Paathai, Volume 023
June, 1989

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மே தினக் கூட்டம் சென்னையிலுள்ள கலைவாணி நர்சரிப் பள்ளியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கு கொண்டனர். தோழர் மோசஸ் ராஜ்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தோழர் மோசஸ் தொடக்க உரையில் முதலாளித்துவக் கட்சிகளும் ஸ்டாலினிசக் கட்சிகளும் போலித்தனமாக மேதினக் கூட்டங்கள் நடத்துகின்றனர் என்றும் டிராட்ஸ்கிச இயக்கம் மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக போராடுகிறதென்றும் குறிப்பிட்டார்.

ஸ்டாலினிஸ்டுகளின் பயங்கரவாதங்களுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வியோன் டிராட்ஸ்கியின் தலைமையில் உருவாக்கப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலமே சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் நலன்களுக்காக போராடுகிறது என மோசஸ் குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக முதலாளித்துவ வர்க்கம் தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிர்புரட்சிகர ஸ்டாலினிசத் தலைமைகள் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.

முதலாவது பேச்சாளராக தோழர் ராம், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் பல உயிர்த்தியாகங்கள் செய்தனர் அதிலிருந்து அந்தப் போராட்டம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமாக மாறியது என்று குறிப்பிட்டார்: சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் அதன் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்காக நிறைய தியாயங்களைச் செய்தனர். ஆனால் நாம் இன்று பார்ப்பது சீர்திருத்தவாத, ஸ்டாலினிச இடைநிலைவாத தலைமைகளின் ஒத்துழைப்புடன் முதலாளித்துவ வர்க்கம் வரிசைக்கிரமமாக தொழிலாள வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை அழித்து வருகின்றனர் என ராம் கூறினார்.

இந்தியாவில் துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டம் நடக்கும் அதே சமயத்தில் ஜப்பானிலும், பிரிட்டனிலும் உள்ள துறைமுகத் தொழிலாளர்களும் அவர்களுடைய வேலைகளைப் பேணவும், சம்பள உயர்வுக்குமாக போராட்டங்களை நடத்தினர். ஆனால் சமூக ஜனநாயக மற்றும் ஸ்டாலினிச துரோகத் தலைமைகள் சர்வதேச ரீதியாக இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென ராம் சாடினார். டிராட்ஸ்கி அன்று குறிப்பிட்டது போல் மனித இனத்தின் நெருக்கடி, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதன் மூலமாகவே தீர்க்கப்படும் என்று ராம் கூறினார்.

உலக முதலாளித்துவத்தை இயக்குகின்ற வரையில் எந்த ஒரு தனி நாட்டிலும் சோசலிசம் பூரண வெற்றி அடைய முடியாது என்றும் ஸ்டாலினிச பிற்போக்கு 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற கொள்கைக்கு எதிராக டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித்தத்துவம் சரியானதென்று வரலாற்றுரீதியாக ருசுப்படுத்தப்பட்டுள்ளது என ராம் கூறினார்.

சர்வதேச ரீதியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் செயல்படுகின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பகுதிகள் ஒரே அரசியல் கண்ணோட்டத்துடன் சர்வதேசிய முன்னோக்குகளின் அடிப்படையில் தேசியவாதத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை உலக சோசலிசப் புரட்சிக்காக அணித்திரட்டப் போராடி வருகின்றன என ராம் கூறினார்.

அடுத்து பேசிய தோழர் பிரகாஷ் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார். லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்திய நாடுகள் மூன்று பிரதான வர்த்தக முகாம்களாக — அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்—பிளவுண்டு நடத்தும் வர்த்தகப் போர் எவ்வாறு இன்று மூன்றாவது உலகப் போருக்கு வழி வகுக்கும் நிலைமைகளை உண்டு பண்ணுகின்றதென்பதை பிரகாஷ் விளக்கினார். இந்த சகாப்தத்தின் அடிப்படை முரண்பாடாக இருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாய் போன தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடு ஒரு உயர் மட்டத்திற்கு கூர்மையடைந்து வருகிறது என பிரகாஷ் கூறினார்.

நமது சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு மிக வளர்ச்சியடைந்த தொழில் நுட்பமும் நாடு கடந்த பன்னாட்டு கம்பனிகளின் வளர்ச்சியும் அதன் விளைவாக தோன்றிய சர்வதேசிய தொழிற்பங்கீடும், சர்வதேச தொழிலாள வர்க்கமும் ஒரு உறுதியான சடரீதியான அடித்தளத்தை வழங்கியிருப்பதாக பிரகாஷ் கூறினார். மேலும் "சர்வதேசிய வேலைத்திட்டம் உலகப் பொருளாதாரத்தையும், உலக அரசியல் அமைப்பையும் முழுமையாக எடுத்து அதன் அனைத்து தொடர்புகளிலும் முரண்பாடுகளிலும் அதாவது அதன் தனிப்பகுதிகள் பரஸ்பர ரீதியாக பகைமையுள்ளதாக ஒன்றுடன் ஒன்று தங்கியுள்ளது என்ற நிலைமைகளையும் எடுத்து ஆய்வு செய்வதிலிருந்து நேரடியாக ஊற்றெடுக்க வேண்டும்" என டிராட்ஸ்கி கூறியதை பிரகாஷ் மேற்கோளிட்டு காட்டினார்.

ஸ்டாலினிச வாதிகள் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு வர்க்க சமரசத்தை கடைப்பிடித்து தொழிலாள வர்க்கப் போராட்டங்களை காட்டிக் கொடுத்து வருவதையும், ஏகாதிபத்தியத்துடன் இணைந்து இந்திய உபகண்டத் தொழிலாளர்களை வகுப்புவாத ரீதியில் கூறு போட ஸ்டாலினிசத் தலைமைகள் ஒத்துழைத்ததையும் பிரகாஷ் சுட்டிக் காட்டினார்.

இறுதியாக பேசிய தோழர் அருண்குமார் மார்க்ஸ், எங்கெல்ஸ்' லெனின் புரட்சிகர மரபில் டிராட்ஸ்கிச வாதிகள் சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்துக்காக போராடுகளையில் ஸ்டாலினிசத் தலைமைகள் அவர்களது மே தின அறிக்கையில் 'இந்திய தேசிய ஐக்கியத்துக்காக' போராடும்படி அறைகூவல் விடுத்துள்ளனர் எனவும் இந்த தேசிய வாதம், முதலாளித்துவ பிற்போக்குவாதம் என்பதையும் வர்க்க ரீதியாக பிளவுண்டுள்ள தேசத்தில் இதன் அர்த்தம் சுரண்டுவோருக்கும் சுரண்டப் படுவோருக்கும் ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் ஐக்கியத்தை கோருவதையே அர்த்தப்படுத்தும் என அருண்குமார் ஸ்டாலினிச தலைமைகளின் முதலாளித்துவ ஏஜண்டு பாத்திரத்தை அம்பலப்படுத்தினார்.

எட்டு மணி நேர வேலைக்கான போராட்டத்தில் உலக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மே முதலாம் தேதி சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை ஒரு ஐக்கியப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்த முடிந்திருக்குமாயின் இன்றுள்ள நிலைமையில் துறைமுக தொழிலாளர்களின், மோட்டார் தொழிலாளர்களின் உருக்கு மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின், ஜவுளி ஆலை தொழிலாளர்களின் மற்றும் பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைகளைப் பேணவும், வாழ்க்கைத் தரத்தையும் சிறந்த வேலை நிலைமைகளைப் பேணவும் நடத்தும் போராட்டங்களை சர்வதேச ரீதியாக ஒருங்கிணைத்து போராடுவது … சாத்தியமான ஒன்றாகும் என அருண்குமார் குறிப்பிட்டார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் தேசிய மண்ணில் வேரூன்றி இருக்கும் எந்த ஒரு தொழிற்சங்கத்தாலோ அல்லது தொழிலாள வர்க்கக் கட்சியாலோ இதைச் சாதிக்க முடியாது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு முக்கியமான கோரிக்கையையும் அவர்களால் வென்றெடுக்க முடியாது. அக்கோரிக்கைகள் சர்வதேச ரீதியாக நாற்றமெடுக்கும் லாப உற்பத்தி முறையை தூக்கி வீசி ஒரு திட்டமிடப்பட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தின் மூலமே சாத்தியமாக்கப்பட முடியும். அந்த அடிப்படையில் போராடும் ஒரே ஒரு சர்வதேசிய கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், இந்தியாவில் அதனுடன் ஐக்கியம் கொண்டு செயற்படும் சோசலிசத் தொழிலாளர் கழகமுமே என அருண்குமார் குறிப்பிட்டார்.

இன்று சோவியத் யூனியன், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு அந்த நாட்டு தலைமைகள் நீண்ட காலமாக பின்பற்றி வந்த 'தனி ஒரு நாட்டில் சோசலிச', 'ஏகாதிபத்தியத்துடன் சமாதான சக வாழ்வு' என்ற பிற்போக்கு கொள்கைகளின் மூலமாக உலக பாட்டாளி வர்க்க புரட்சிகரப் போராட்டங்களை காட்டிக் கொடுத்ததன் தவிர்க்க முடியாத விளைபயன்களாகும். தேசிய மயமாக்கப்பட்ட சொத்துடமைகளில் ஒட்டுண்ணியாக இருந்து சலுகைகளை அனுபவித்து வந்த ஸ்டாலினிச அதிகாரத்துவம் உலக முதலாளித்துவ சந்தையின் ஆதிக்கத்தின் கீழ் மூச்சுத் திணறும் சோவியத் சீன பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் தனது அதிகாரத்துவ தட்டின் சடரீதியிலான (Material) நலன்களைப் பேண தனிச்சொத்துடமையை மீண்டும் கொண்டு வர செயற்பட்டு வருகின்றது. இதன் மூலமாக படிப்படியாக புரட்சியின் வெற்றிகள்-வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகம் தேசியமயமாக்கப்பட்ட சொத்துடமை—போன்றன அழிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் இந்த முதலாளித்துவ சார்பு கொள்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின், இளைஞர்களின் சக்தி வாய்ந்த இயக்கங்கள் ஏற்கனவே சீனா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் தோன்றியுள்ளன இப்படியான இயக்கம் மிக விரைவில் சோவியத் யூனியனிலும் தொடங்கும் என அருண்குமார் குறிப்பிட்டார்.

ஆனால் அக்டோபர் புரட்சியின் மற்றும் சீனப் புரட்சியின் வெற்றிகளைப் பேணுவது அங்குள்ள ஸ்டாலினிச அதிகாரத்துவங்களை ஒரு அரசியல் புரட்சியின் மூலமாக தூக்கி வீசி சர்வதேசிய அளவில் அக்டோபர் புரட்சியை நீடிப்பதிலேயே தங்கியிருக்கிறது. உலக டிராட்ஸகிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தையும் ஸ்டாலினிச ஆட்சியின் கீழ் உள்ள நாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் புரட்சிக்கான வேலைத்திட்டத்தையும் வழங்குகிறது என அருண்குமார் கூறினார் ஏனெனில் நான்காம் அகிலம் மட்டுமே சர்வதேச ரீதியாக மார்க்சியத்தை பேணி வளர்ப்பதற்கான போராட்டத்தை செய்கிறது, வரலாற்று ரீதியான மார்க்சிய புரட்சிகர பாரம்பரியங்கள் இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினால் மட்டுமே கட்டிக் காக்கப்படுகிறது.

No comments:

Post a Comment