"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Saturday, June 11, 2016

பி & சி. மில்லில் தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்தின்-குசேலர் தலைமையின் கூட்டுச்சதியை தோற்கடி!

இதழ் 20, டிசம்பர் 1988
 
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட, இந்திய டிராட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தொழிற் சங்கப்பிரிவான சோசலிசத் தொழிலாளர் அணியின் பி&சி மில் கிளையின் வாயிற் கூட்டங்கள் நவம்பர் 16,17 தேதிகளில் பி அண்டு சி மில்லின் இரு வாயில்களிலும் நடைபெற்றது. வாயிற்கூட்டங்களுக்கு சோசலிசத் தொழிலாளர் அணியின் செயலாளர் தோழர் மோசஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். மேலும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை உறுப்பினர்களான தோழர் பிரகாஷ், தோழர் ராம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

'உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியும் பி அண்டு சி ஆலை நிலைமையும் என்ற தலைப்பின் கீழ் வாயிற் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பி அண்டு சி தொழிலாளர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்ற தலைப்பில் சிறு துண்டு பிரசுரம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் வெளியிடப்பட்டு, ஆயிரக் கணக்கில் தொழிலாளர்கள் மத்தியில் விற்பனையாகியது. அந்நூலில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட புரட்சிகர வேலைத்திட்டங்களையும் முன்நோக்குகளையும் விளக்கும் அடிப்படையிலும், துரோக குசேலர் தலைமைக்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஸ்டாலினிச 'ஐக்கிய குழு' மாவோவாத 'தொழிலாளர் முன்னணியின் காட்டிக் கொடுப்புகளை அம்பலப்படுத்தி, புரட்சிகர டிராட்ஸ்கிசத் தலைமையை கட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் கூட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் மோசசும் மற்றைய தோழர்களும் பேசினார்கள்.

தோழர் மோசஸ் உரையின் ஒரு பகுதி "1981 இல் இதே குசேலர் MLU வின் தலைவராக இருந்த போது வேலைப் பளுவை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் மில்லை மூடிவிடப் போவதாக அச்சுறுத்தியதை நினைவுபடுத்திப் பாருங்கள். குசேலர் அப்பொழுது ஆட்டோக்கள், டாக்சிகள், பஸ்கள் எல்லாம் ஓடாது முழு அரச நிர்வாகமும் ஸ்தம்பிக்க நேரிடும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தார். இவ்வகையான ஆவேசப் பேச்சுக்கள் இருந்த போதினும் நாம் 6 மாதப் பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டது மட்டுமல்லாமல் குசேலரால் கையெழுத்திடப்பட்ட அடிமை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்குத் திரும்புமாறு நிர்பந்திக்கப்பட்டோம். இந்த ஒப்பந்தம் பல தசாப்தங்களான போராட்டத்தில் நாம் வென்றெடுத்திருந்த உரிமைகளைப் பறித்தது. இந்த ஒப்பந்த அடிப்படையில், 'கமலரத்தினம் அவார்டை' மில்லில் அமுல் செய்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அன்வருக்கு சிபிஐ யில் இருந்த கல்யாண சுந்தரம் சிபிஎம் ஐச் சேர்ந்த ராமமூர்த்தி போன்ற ஸ்டாலினிசத் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டது.” (*அடுத்த இதழில் தொடரும்)

No comments:

Post a Comment