"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Tuesday, August 9, 2016

இந்தியா: பஞ்சாப், அசாம் தேர்தல்களுக்கு ஸ்டாலினிஸ்டுகள் எதிர்ப்பு


[SLL-India announces that "ICFI's fraternal organization Socialist Labour League was the only one which was struggling against the treacherous politics of the Stalinist's Popular Front to build alternative revolutionary leadership among Indian working and oppressed people. For the establishment of working class state with a revolutionary program, SLL-India had listed its candidates in North Chennai and Villivakkam constituencies."]

Thozhilalar Paathai, Volume 405 (File 039)
April, 1991

 
இந்தியாவின் பிரசித்தி பெற்ற துணிநெசவு ஆலையான பீ.அன்.சீ. மில் மூடப்படுவதற்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் 'பந்த்' போராட்டத்தினால் சென்னையும் அண்ணா மாவட்டமும் ஸ்தம்பித்தது. பாடசாலை மாணவர்களின் பரீட்சை காரணமாக பல்லவன் போக்குவரத்துச் சேவையும், ஆஸ்பத்திரி சேவையும் இந்த 'பந்தில்' சம்பந்தப் படுத்தப்படவில்லை. அரசாங்க, தனியார் துறையைச் சேர்ந்த சகல பக்டரிகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. சென்னையின் முக்கிய கைத்தொழில் பிரதேசங்களான மாதவரம், அயனாவரம், பேரம்பூரில் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பித்துக் கிடந்தது. தொழிலாளர்கள் வீதித் தடைகளை ஏற்படுத்தி வீரியத்துடன் தலையிட்ட இடங்களில் பொலிசார் 600 தொழிலாளர்களை கைது செய்தனர்.

ஸ்டாண்டர்ட் மோட்டார்சுடன் சேர்ந்து இன்று பீ அண்ட் சீ. மில்லின் மூடுவிழாவானது உலக நெருக்கடியையும் ஏகாதிபத்திய முதலீடுகளுக்குச் செய்யப்படும் தயாரிப்பையும், இந்தியாவின் பாரம்பரிய தேசியக் கைத்தொழில்கள் துடைத்துக் கட்டப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டுகின்றது.

இந்தியாவின் 'தேசிய' கைத்தொழிலும் பொருளாதாரத் துறையும் முற்று முழுதாய் நெருக்கடிக்குள்ளாகி வரும் நிலையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகள் வீ.பி. சிங்கின் ஜனதா டால் கட்சியுடன் முதலாளித்துவ கூட்டரசாங்கம் அமைப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். மே 20, 23, 26ம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில் ஜனதா தளம் உள்ளடங்கலான முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, போட்டி தவிர்ப்புகளில் ஈடுபடத் தயாராகி வருகின்றார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தேசிய சபையின் பிரேரணை இக்கூட்டினைப் பற்றி கூறியதாவது: “எமது அரசியல் இலக்கு பாரதீய ஜனதா கட்சியையும் காங்கிரஸ் () கட்சியையும் தோற்கடிப்பதும் லோக்சபையில் (இந்திய பாராளுமன்றம்) இடதுசாரிச் சக்திகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தினை கொண்ட இடதுசாரி-தேசிய முன்னணிக் கூட்டின் மத்திய அரசாங்கம் ஒன்றினை கட்டி எழுப்புவதே.”

இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் மற்றோர் பிரிவினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - சிபிஎம்) தேசிய முன்னணியுடன் கூட்டரசாங்கத்தில் நுழைவது சம்பந்தமான தமது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. 'தீர்மானம் செய்வது தொடர்பான நெருக்குவாதம் ஏற்படுத்த முடியாதெனில் அரசாங்கத்தில் சேர தாம் விரும்பவில்லை' என அவ்வறிக்கை கூறிக் கொண்டுள்ளது.

இதற்கிடையே வீ.பி. சிங்கின் ஜனதா தளத்துக்கும் காபந்து பிரதமர் சந்திரசேகரின் ஜனதா தளத்துக்கும் (எஸ்) இடையே கூட்டுக்கான இரகசியப் பேச்சு வார்த்தைகள் தற்சமயம் இடம் பெற்று வருகின்றது.

ஜனதா தளத்தின் தேசிய இணைப்புக் கமிட்டிக்கும் ஸ்டாலினிசக் கட்சிகள் உள்ளடங்கலான 'இடதுசாரிக் கூட்டுகளுக்கும் இடையே ஏப்ரல் 5ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சீ.பி.. தலைவர் எம். பாரதியும் சீ.பீ.(எம்) அரசியல் குழு உறுப்பினர் ஹர்கிஜன் சிங் சந்தித்து ஒரு நிலைப்பாட்டினை வகித்தனர்: ஜனதா தளத்துடனான (எஸ்) கருத்துப் பரிமாறலை உடனடியாக முறித்துக் கொள்ளக் கூடாது. மார்ச் 29, 30, 31ம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த சீ.பி.. பிரதிநிதி தாம் இந்தியாவினுள் ஒரு கூட்டரசாங்கத்தை அமைக்க ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் முதலாளித்துவக் கூட்டரசாங்கங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு அவற்றுக்கு முண்டு கொடுத்து வந்த இந்திய ஸ்டாலினிஸ்டுகள் இம்முறை அவற்றில் நேரடியாக இணைந்து கொள்ள முடிவு செய்தமை, அவர்களின் எஜமானனாக ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சேவை செய்யும் தமது எதிர்ப்புரட்சி தொழிற்பாட்டினை புதிய மட்டத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.

இந்திய ஸ்டாலினிச சகாக்கள் முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தில் அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்ள எடுத்த முடிவினை இலங்கை ஸ்டாலினிஸ்டுகள் 'அந்த' பத்திரிகையில் பெருமகிழ்ச்சி ததும்ப, உஜாருடன் வெளியிட்டனர். வெளியில் இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கையில் 'மக்கள் நம்பிக்கை' குறைந்து போவதால், அரசாங்கத்தில் நேரடியாக நுழைவது அவசியம் என இலங்கையின் ஸ்டாலினிஸ்டுகள் வாதிட்டு வந்தனர்.

அசாம், பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் நடாத்தாமல் தொடர்ந்தும் அவற்றை புது டில்லியின் நேரடி ஒடுக்குமுறையின் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற பிரச்சாரத்துக்கும் இந்திய ஸ்டாலினிஸ்டுகள் ஆதரவு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக ஒரு நினைவூட்டல் கடிதத்தினைக் கூட சீ.பீ.., சீ.பீ.எம் தலைமைகள் காங்கிரஸ் () படுபிற்போக்கு இந்துவெறி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விமர்சனம்

எதிர்வரும் தேர்தலில் அரசியல் இலாபத்தின் பேரில் சந்திரசேகரின் காபந்து அரசாங்கம், பஞ்சாபிலும், அசாமிலும் தேர்தல் நடாத்தும்படி ஏப்ரல் 11ம் திகதி ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது. இந்தச் சிபாரிசினை கடுமையாக விமர்சனம் செய்த சீ.பி.(எம்) தலைவர்கள், அதனை அமுல் செய்ய வேண்டாம் என ஜனாதிபதியைக் கோரி இருந்தனர். தமது அதிகாரத்தினைப் பாவித்து இம்முடிவினை அமுல் செய்வதை தவிர்க்குமாறு சீ.பீ.(எம்), தேர்தல் ஆணைக் குழுவைக் கேட்டுள்ளதாக அதன் அரசியல் குழு உறுப்பினரான ஹர்கிஷன் சிங் சுர்ஜிட் பீ.டீ.. செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார்.

இன்றைய அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட முயற்சிக்கிறது. லோக் சபை தேர்தலை நடாத்துவதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதி செய்ததன் பின்னர் தேர்தல் நடாத்துவது பற்றிய விளக்கத்துக்கு வர சகல அரசியல் கட்சிகளும் தயாராக உள்ள நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கை கலைக்கப்பட்ட லோக்சபாவின் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்த பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிப்பிராயம் பற்றி இன்றைய அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை" என்பதைக் குறிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரதீய ஜனதா கட்சியின் இனவாதம், மதவாதம் சம்பந்தமான அவர்களின் 'விமர்சனம்' ஒருபுறமிருக்க, இந்திய ஸ்டாலினிஸ்டுகள் பஞ்சாபையும், அசாமையும் ஹிந்து மதவெறி மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு கீழ்ப்படுத்தி வைக்க பாரதீய ஜனதா கட்சியுடனும் வெளிவெளியாகக் கோர்த்துக் கொண்டுள்ளனர். சமீப காலம் வரை பஞ்சாபிலும், அசாமிலும் தேர்தல் நடாத்த வேண்டும் எனக் கேட்டு வந்த சீ.பி.. தலைவர்கள் கூட 180 பாகையில் குத்துக்கரணமடித்து அம்மாநிலங்களில் தேர்தல் இரத்தாக வேண்டும் என்ற பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். இந்தக் குத்துக்கரணத்தின் மூலம் நம்மிடையே இருந்து வந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து, நெருங்கித் தொழிற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சீ.பீ.எம். தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளாவண்ணம் எதிர்ப்புரட்சி அரசியலின் உச்சக் கம்பத்துக்கு ஏறிக் கொண்டுள்ள இந்தி சீ.பீ.., சீ.பீ.எம். தலைவர்களையே 'இந்தியாவின் இடது சக்திகள்' என சந்தர்ப்பவாத தலைவர்கள் அரவணைத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவினுள் சிறுபான்மை தேசிய இனங்களையும் மதக் குழுக்களையும் நசுக்கவும், தொழிலாள வர்க்கத்தினை ஏகாதிபத்தியச் சார்பு முதலாளிகளுக்குப் பலியிடவும் இந்திய ஸ்டாலினிஸ்டுகள் தொழிற்படுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற நவசமசமாஜக் கட்சியின் 13வது ஆண்டு நிறைவு விழாவுக்கு சீ.பீ.எம். மின் தமிழ்நாடு நிறைவேற்றுக் குழு 'நல்வாழ்த்து' அனுப்பியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த துரோக நடவடிக்கையை தமக்கு முற்றிலும் சாதகமாக்கிக் கொண்டுள்ள படுபிற்போக்கு இந்திய வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி, இன-மதவெறிப் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளது. ஏப்ரல் 4ம் திகதி புது டில்லியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய பா.. கட்சி தலைவர் எல். ஜே. அத்வானி பாகிஸ்தானத்தின் நிர்வாகத்துக்குள் வரும் 'காஷ்மீரினை இந்தியாவுக்குப் பெறும் பொருட்டு தமது கட்சி செயற்பட்டு வருவதாகக் கூறினார். விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆர். எஸ். எஸ். போன்ற வலதுசாரி இனவெறியர்களுடன் சேர்ந்து இத்தகைய இன-மத ஆத்திரமூட்டல்களில் பாரதீய ஜனதா கட்சி ஈடுபடக் காரணம், இந்தியத் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக பாசிச இயக்கம் ஒன்றைக் கட்டி எழுப்புவதே.

தொழிலாள வர்க்கத்தின் மீது அத்தகைய மிலேச்ச பாசிச சர்வாதிகாரத்தினைத் திணிக்க அவசியமான நிலைமைகளை சிருஷ்டிப்பதற்கு இந்திய தொழிலாள வர்க்கத்தினை முதலாளித்துவ மக்கள் முன்னணி பொறிகளில் மாட்டுவதற்கு ஸ்டாலினிச ஏஜன்டுகளின் சேவை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அவசியம். சீ.பீ.., சீ.பி.எம். தலைவர்கள் தமது எஜமான்களுக்கு இச்சேவையை வழங்கத் தயாராகி வருகின்றனர்.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த மக்கள் முன்னணி துரோக அரசியலுக்கு எதிராக மாற்றுப் புரட்சித் தலைமையைக் கட்டி எழுப்புவதற்கு இந்தியத் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களிடையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழமை இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டுமே போராடி வருகின்றது. முதலாளித்துவ ஜனநாயக நப்பாசைகளுக்கு எதிராக இந்திய முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கி வீசி, தொழிலாள வர்க்க அரசினை ஸ்தாபிதம் செய்வதற்கான புரட்சிகர வேலைத்திட்டத்துடன் சோ.தொ.. வட சென்னை, வில்லிவாக்கம் தேர்தல் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment