"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Wednesday, August 31, 2016

இந்தியாவுக்கு உதவி வழங்கும் குழு' துரித தாக்குதலுக்கு உத்தரவு


Thozhilalar Paathai collected volume 09
July 1993

இந்தியாவின் குரல்வளையை நெரிக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கை இறுக்கமடைந்து வரும் நிலையில் நரசிம்மராவ் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடி மேன்மேலும் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது.

 
இந்தியாவுக்கு உதவி வழங்கும் குழு எனப்பட்டதன் கூட்டம் ஜூலை 2ம் திகதி பாரிசில் கூடியது. இந்தியாவினுள் தமது சுரண்டலை நிலைநாட்ட ஏகாதிபத்தியம் அமைத்த இக்குழு, இம்முறை வழமைக்கு மாறாக எதிர்பார்த்ததை விட 20 கோடி டாலர் கூடுதலாக – 740 கோடி டாலர்களை உதவியாக வழங்கி தீர்மானித்துள்ளதென ராவ் அரசாங்கமும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் ஆர்ப்பரிக்கின்றன.

இந்த உதவி எனப்படுவது 1992 இறுதியில் இருந்த 7000 கோடி டாலர் கடன் மலையை மேலும் 740 கோடி டாலர்களால் அதிகரிக்கச் செய்துள்ளது. அக்கடன் பளு முழுவதும் பொதுமக்களின் முதுகெலும்பை உடைக்கும் ஒன்றாகும். அத்தோடு இதுவரை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தேசியப் பொருளாதாரம் என்பதை துடைத்துக் கட்டி, ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகளின் சுரண்டலை நிலைநாட்டும் வேலைத் திட்டத்தை துரிதப்படுத்த பொது மக்களின் தொழில், வாழ்க்கைத் தரம், நலன்புரி சேவை அனைத்தையும் ஒழித்துக் கட்டும் புதிய கட்டளைகள் 740 கோடி டாலர்களுடன் ராவ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ராவ் அரசாங்கம் அமுல் செய்த சீர்திருத்தத் திட்டத்தை புகழ்ந்து "மகிழ்ச்சி" தெரிவித்த ஏகாதிபத்திய வங்கியாளர், இந்த உதவியுடன் "இந்திய அரசாங்கம் கையாண்டு வரும் சவால் நிறைந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வெற்றியின் முழு முன்நோக்கினையும் உத்தரவாதம் செய்ய உதவும் வகையில் துரிதமானதும் தீர்க்கமானதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய துறைகள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளதாக" ஹிந்து பத்திரிகை குறிப்பிட்டது.

1996-97ல் நடைமுறைப்படுத்தி முடிக்கவுள்ள ஏகாதிபத்திய வேலைத் திட்டம் ஒன்றை 'செல்லையா குழு தீர்மானம்' என்ற பெயரில் அரசாங்கம் ஜூலை 9ல் வெளியிட்டது, அதில் ஓரம்சம், சுங்கவரி தீர்வையை நூற்றுக்கு 25%க்கு மேற்படாமல் வெட்டுவதாகும். இதனை "மேற்கத்திய நாடுகளின் சுங்கவரி தீர்வைக்கு ஒப்பானது" என விரிந்துரைத்தாலும், உண்மை நோக்கம் அதுவல்ல. ஏகாதிபத்தியம் உற்பத்திகளால் இந்தியச் சந்தையை நிருப்புவதற்கான நிலைமையைச் சிருஷ்டிப்பதே உண்மை நோக்கம்.

நடைமுறைக்கிடும் மற்றைய தீர்மானம் என்னவென்றால் 1993/94ல் மொத்தத் தேசிய வருமானத்தில் நூற்றுக்கு 7 வீதத்துக்குக் குறைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை மேலும் வெட்டுவதாகும். அதாவது 1996-97ல் மாநில அரசுகளின் பற்றாக்குறையை நூற்றுக்கு 5% ஆகவும், மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறையை நூற்றுக்கு 3% ஆகவும் வெட்டுவதாகும். நலன்புரி சேவை வெட்டு, விலைக் கட்டுப்பாட்டு முறையை அகற்றுதல், அரச துறைக்கான உதவித் தொகையை அகற்றுதல், அரச துறைக்கு மூடுவிழா என்பவற்றை அமுல்படுத்த வேண்டுமென்றே செல்லையா குழு இங்கு குறிப்பிடுகின்றது. தொழிலாள, ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் பாரிய அழிவினைச் சமுத்தும் இந்த தாக்குதலை "திடசங்கற்பத்துடன் நடைமுறைக்கிட வேண்டும்" என முதலாளிகள் கூறுகின்றனர். ஹிந்து பத்திரிகை அதன் ஜூலை 6ம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

எவ்வாறிருப்பினும் 1996-97 ஆண்டளவில் மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவு திட்டப்பற்றாக்குறையை 3% அளவில் விளங்குமாறு குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதைச் செயற்படுத்துவது பெரும் சிரமமாகும். நலன்புரி சேவை, விலைக் கட்டுப்பாட்டு என்பன தொடர்பாக வெறுப்புக்கிடமான முடிவெடுக்க நேரும். அத்தோடு மத்திய அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தம் பூகோளமயமாக்கம் பற்றிய தமது கருத்துக்கு மாநில அரசுகளை இணைத்துக் கொள்ளவும், அதற்கு இணங்கச் செயற்பட அவற்றைத் தூண்டவும் நேரிடும்.”

செல்லையா குழு சிபாரிசு செய்யும் மற்றுமொரு தீர்மானம் ஏகாதிபத்தியம் ஏற்கனவே நிர்பந்தித்துள்ள "கைத்தொழில் பிரச்சினை மசோதாவைத்" திருத்துவதாகும். நோய் பிடித்த கம்பனிகளை மூடி, தொழிலாளரை வெளியேற்ற அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை என்ற சட்ட விதியை அகற்றிவிடுமாறு ஏகாதிபத்தியம் கோருகிறது, “வேலைநீக்க விதிமுறை" என்ற பெயரில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மசோதாவை அப்படியே நிறைவேற்றி அமுல் செய்ய உள்ளது.

உதவி வழங்கும் குழுக் கூட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் கல்கத்தாவில் ஸ்டாலினிஸ்டுகள் கூட்டிய மகாநாட்டில் கலந்து கொண்ட ராவ், ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளையை ஒன்றும் தவறாமல் செயற்படுத்த உள்ளதாக அறிவித்தார். “தனியார் துறையை ஊக்குவிக்க நாம் புதிய கைத்தொழில், வர்த்தக, நாணய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என ராவ் தெரிவித்துள்ளார்.

நரசிம்மராவ் அரசாங்கத்தினை பேருக்கு விமர்சனம் செய்து கொண்ட போதிலும், ராவ் அரசாங்கத்தினை ஆட்சியில் வைத்திருக்க தமது வாக்குகளையும், தொழிற்சங்கங்களைஉம் பாவித்து வரும் ஸ்டாலினிச இந்திய (மார்க்சிச) கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல் அமைச்சருமான ஜோதிபாசுவும் இம்மகாநாட்டில் பங்கு கொண்டார். பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் முதலீடு செய்ய தனியார் துறை 'உற்சாகமின்றி' உள்ளது என்பதே ஸ்டாலினிச தலைவரின் முக்கிய வாதமாக விளங்கியது.

உலகச் சந்தைப் பங்கு போடலில் வெட்டுக் குத்து நடாத்தும் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம்,இந்தியாவில் பாய்ச்சல் நடாத்த எடுத்துள்ள முயற்சி இந்திய முதலாளித்துவ வர்க்க நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. ராவ் அரசாங்கம், ஏகாதிபத்திய ஆணையை செயல்படுத்துவதாக உறுதிக்கு மேல் உறுதி வழங்கி வரும் சமயத்தில் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களை அடக்க காங்கிரஸ் அரசாங்கத்தைக் காட்டிலும் தாம் சிறந்த விதத்தில் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யத் தகுதியுடையோர் என நிரூபிக்கும் முகமாக பாரதீய ஜனதா கட்சி இனவாதத்தை தூண்டி, பாசிச சக்திகளை அணிதிரட்ட முன் பாய்ந்துள்ளது.

பம்பாய் பங்கு முதல் சந்தை ஊழலின் பெரும் புள்ளியான ஹர்ஷத் மேத்தா, அரசாங்க பாதுகாப்பு பெற நரசிம்மராவுக்கு ஒரு கோடி ரூபா லஞ்சம் வழங்கியதாக அறிவித்தமை, ஆளும் வர்க்க அரசியல் இழுபறிகளின் ஆயுதம் ஆகியுள்ளது. காங்கிரஸ் கட்சி, ராவ் பரிசுத்தமானவர் எனத் தெரிவித்த அதே சமயம் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தை ராஜினாமா செய்ய வைக்க இந்த ஊழல் குற்றச்சாட்டை பயன்படுத்துகின்றது.

ஏகாதிபத்தியத்தின் கொடிய கட்டளைகளுடன் அதை செயற்படுத்த ஆளும் வர்க்கம் நடாத்தும் எதிர்ப்புரட்சி தயாரிப்புக்களும் இந்திய ஏகாதிபத்திய பாணி முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி சோசலிச அடிப்படையில் இந்தியத் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை பேணும் வேலைத் திட்டத்துக்கு போராட வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்துகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியத் தொழிலாள வர்க்கம் உலகத் தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசும் உலக சோசலிச வேலைத் திட்டத்துக்கு போராட வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்தின் சோசலிசக் குடியரசுக்கான போராட்டம், இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவின் சோசலிசத் தொழிலாளர் கழகமும் இவ்வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே போராடுகின்றன.

Tuesday, August 30, 2016

ஒரே முன்வழி தொழிலாள வர்க்க அனைத்துலக ஐக்கியமே


Thozhilalar Paathai collected volume 09
July 1993

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் பூண்டதும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தோழமை அமைப்புமான இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் தோழர். அருண் குமார் ஆண்டு நிறைவு விழாவில் வாழ்த்துச் செய்தி வழங்கி நிகழ்த்திய உரை

 
அன்பில் தோழர்களே,

நானும் தோழர் ராமும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் இந்த 25வது ஆண்டு நிறைவு விழாவுக்கு இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சகல அங்கத்தவர்களதும் புரட்சிகர நல்வாழ்த்துக்களுடன் வருகை தந்துள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் பு... வின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த தோழர் கீர்த்தி பாலசூரியவை மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்வதோடு எமது மரியாதையையும் செலுத்துகின்றோம். அவ்வாறே பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்தினைக் காக்கும் தமது போராட்டத்தினுள் தமது உயிர்களைத் தியாகம் செய்த பு... அங்கத்தவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகின்றோம். சோதனைக்குள்ளான காலத்தில் இருந்து தோன்றிய இன்றைய பு... தலைமை தோழர் கீர்த்தி பாலசூரியவும் ஏனைய தோழர்களும் உயிர்த்தியாகம் செய்த போராட்டத்தினை இறுதிவரை முன்னெடுப்பர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

1985-86 பிளவின் போது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பப்லோவாத கலைப்பாளர்களுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்ட அடிப்படையைக் காக்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நடாத்திய திடசங்கற்பம் மிகுந்த போராட்டம் இல்லாது போயிருக்குமானால் இந்தக் கூட்டத்தில் நாம் கலந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியிராது. தோழர். கீர்த்தி பாலசூரிய, தோழர். டேவிட் நோர்த்துக்கு 1987 ஜூன் 17ம் திகதி எழுதிய கடிதத்தில் தொழிலாளி வர்க்கத்துக்கு இந்தப் பிளவின் அர்த்தத்தினை மிகவும் ஆழமாக வடித்திருந்தார். அவர் எழுதியது இதுதான்: “சரியாகச் சொன்னால், அனைத்துலகக் குழுவின் உள்ளிருந்து ஹீலி-பாண்டா-சுலோற்றரை ஒட்டிக் கலைத்தும் அவர்களை மார்க்சிசத்தின் எதிரிகளாக அம்பலப்படுத்தும் முழுப் போராட்டமும் இல்லாது போயிருந்தால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவில் சோசலிசத் தொழிலாளர் கழகமும் இன்றைய நிலைமையில் முதலாவது கட்டத்திலேயே அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கும். அவர்களின் ட்ரொட்ஸ்கிச பூச்சாண்டிகளை சவால் செய்யாது விட்டிருந்தால், சிறப்பாக இந்தியாவினுள் கையாலாகாத்தனமாக ஆளும் வர்க்கமும் இரு நாட்டினதும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களும் புரட்சிகர மார்க்சிஸ்டுகளை முழுமனே தனிமைப்படுத்த உதவும் வகையில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய அனைத்துலகக் குழுவின் கிளைகள் வலதுசாரிப் போக்குகளால் கீழ்ப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகியிருக்கும். நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு பற்றிய ஹீலி-பண்டா-சுலோற்றரின் நிலைப்பாட்டினை அனைத்துலகக் குழுவின் உள்ளே அம்பலப்படுத்துவது, துணைக் கண்டத்தினுள் வர்க்கப் போராட்டத்தின் இன்றைய கொடிய வெடிப்பின் தீர்க்க தரிசனம் மட்டுமன்று அது தேசிய முதலாளித்துவ வர்க்கமும் அதன் குட்டி முதலாளித்துவ ஏஜண்டுகளும் தொழிலாளி வர்க்கத்தினைத் தம்முடன் 'தேசிய' கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்ல எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிராகப் போராடும் பொருட்டு இருநாட்டினதும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினரைக் கோட்பாட்டு, அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்குவதும் ஆகும்.”

வரலாறு, வேலைத்திட்டம், அடிப்படைக் கொள்கை தொடர்பான பிரச்சினை பற்றி தோழர். கீர்த்தி கொண்டிருந்த சமரசமற்ற மனப்பாங்கு, எம் அனைவருக்கும் பிரமாண்டமான உத்வேகத்தினை வழங்கியது. மத்தியவாதம், சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்க்கமான வரலாற்று அர்த்தத்தினை-அதாவது உலக சோசலிசப் புரட்சியின் வெற்றியும், ஆதலால் மனித இனத்தின் உயிர்வாழ்வும் எல்லாவற்றிற்கும் மேலாக இப்போராட்டத்தினுள் ட்ரொட்ஸ்கிச இயக்கம் காட்டும் ஈவிரக்கமற்ற தன்மையில் தங்கியுள்ளது என்பதை அவர் வேறு எவரைக் காட்டிலும் நன்கு ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இந்தியாவினுள் ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கட்டி எழுப்ப புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது. தோழர்களே, நீங்கள் 1917ல் பங்களாதேஷ் யுத்தம் பற்றிய பத்திரங்களை வாசித்திருப்பீர்கள். தொ.பு.. தலைவர்கள் கிழக்குப் பாகிஸ்தானுக்கு அல்லது பங்களாதேஷ் எனப்படுவதற்கு நடாத்திய இந்திய இராணுவத் தலையீட்டினை ஒரு முற்போக்கு நடவடிக்கையாகத் தூக்கிப் பிடிக்கையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அது மேற்கு, கிழக்கு வங்காளத் தொழிலாளர்களிடையேயான ஐக்கியத்தினை தவிர்ப்பதையும், அத்தருணத்தில் வீழ்ச்சி காண தொடங்கி இருந்த துணைக் கண்டத்தின் யுத்தத்தின் பின்னைய சமநிலையைப் பேணுவதையும் இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட பிற்போக்கு நடவடிக்கை என அம்பலப்படுத்தியது.

தோழர். கீர்த்தி 1960 பதுகளின் கடைப்பகுதியில் தோன்றிய நக்சலைட் இயக்கத்தினை மார்க்சிச விமர்சனத்துக்கு உள்ளாக்கியதில் இந்திய தொழிலாள வர்க்கத்துக்குச் சுயாதீனமான வர்க்க நிலைப்பாட்டினை கடைப்பிடிக்க பு... நடாத்திய போராட்டத்தினை கண்டு கொள்ள முடியும். இக்காலப் பகுதியிலேயே தோழர். கீர்த்தி ஜேவீபி பற்றிய சக்திவாய்ந்த மார்க்சிச ஆய்வினை எழுதினார்.

1985-86 பிளவு, பு...வுக்கும் சோசலிசத் தொழிலாளர் கழகத்துக்கும் இடையேயும், அவ்வாறே அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளுடனும் நெருக்கமான அரசியல் உறவுகளுக்கான கதவினைத் திறந்து விட்டது.

இந்திய-இலங்கை உடன்படிக்கையை எதிர்த்தும், வடக்கு-கிழக்கில் இருந்து இந்திய ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்றவும் பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் சிங்கள-தமிழ் இந்திய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்குப் போராடிய இந்தியாவின் ஒரே கட்சி சோசலிசத் தொழிலாளர் கழகமே.

தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எதிராக மாற்று ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்துக்கு உறுதியாகப் போராடும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர்கள் தமது தொழிற்சங்கங்களின் தலைமைக் கமிட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் சோ.தொ.. தொழிலாளர்களிடையே தமது செல்வாக்கினைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டுள்ளதைக் காண முடியும். இந்தியாவின் பழையதும் பெரியதுமான ஆடைத் தொழிற்சாலையான பக்கிங்காம் கர்நாடக மில்லில் (பி&சி) ஸ்டாலினிச தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்புடன் நிர்வாகத்தின் வேட்டைக்கு உள்ளாகியுள்ள சோசலிச தொழிலாளர் கழகத்தின் தோழர். மோசஸ் கடந்த ஜூன் 19ம் திகதி தொழிற்சங்கக் கமிட்டி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் என்ற மற்றுமோர் பிரமாண்டமான மோட்டார் பக்டரியினுள் எமது தோழர். கைலாசம் கடந்த ஆண்டில் இருந்து இரண்டாவது தடவையாகவும் கமிட்டி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் இப்பொழுது இரண்டு மொழிகளில்—தமிழ், வங்காளி—பத்திரிகைகளை வெளியிடுகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்று வேலைத்திட்டம், அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றமான பகுதியினர் அரசியல் விளக்கம் பெறவும், பயிற்சி பெறவும் எமது வரையறுக்கப்பட்ட வளங்களுடன் நாம் போராடி வருகின்றோம்.

கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் ஸ்டாலினிச அதிகாரத்துவங்களின் வீழ்ச்சியும் இந்நாடுகளின் அரச அமைப்புகள் சிதறண்டு போனமையும் அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளே பிரமாண்டமான குழப்பத்தினை உண்டு பண்ணியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புகளான தொழிற் சங்கங்களும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் ஸ்டாலினிசக் கட்சிகளும் அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிகளுக்குத் தொடுக்கப்படும் தாக்குதல்களின் எதிரில் தமது பூரண வங்குரோத்தினையும் பிற்போக்கினையும் அம்பலமாக்கியுள்ளன. இலட்சோப லட்சம் அங்கத்தவர்களைக் கொண்டுள்ளதாகக் கூறிக் கொண்ட கட்சிகள் இரவோடிரவாக சிதறிச் சின்னாபின்னமாகிப் போயின.

ஐக்கிய செயலக பப்லோவாதிகளின் நிலைப்பாடும் அடியோடு எதிர்ப்புரட்சி என்பது முழுமனே அம்பலமாகியது. தொ.பு.. ஓடுகாலிகளுடன் 1985-86ல் ஏற்பட்ட பிளவு அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றமான பிரிவினிரடையே பிளவின் அடிப்படை அரசியல், கோட்பாட்டுப் பிரச்சினைகளை அரசியல் ரீதியில் தெளிவுபடுத்துவதற்கான வல்லமையை அனைத்துலகக் குழுவுக்கு வழங்கியது.

தொ.பு.. தலைமை எதிரி வர்க்க சக்திகளுக்கு அடிபணிந்து போயிருந்தது. இன்று இந்தச் சக்திகள் சுரண்டும் விதத்தினை அதிகரித்து, தொழிலாள வர்க்கத்தினை நசுக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் கைத்தேங்காயாக மாறியுள்ளன. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தினதும் தொழிற்சங்க, சமூக ஜனநாயக அதிகாரத்துவத்தினதும் முதலாளித்துவ தேசியவாதிகளதும் பண்பு ரீதியிலான பரிணாமத்தினை ஆழமாக ஆய்வு செய்த ஒரே அரசியல் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவே. அவர்களின் பண்பு ரீதியிலான பரிணாமத்துக்கு பின்னணியில் வெறும் கெட்ட பழக்க வழக்கங்கள் அன்றி நல்ல ஆழமாக நோக்கின், தேசிய அரச அமைப்பினை அடிப்படையாகக் கொண்ட தேசியவாத, சீர்திருத்தவாத வேலைத்திட்டம் உள்ளது.

கணினிமயமாக்கம், தொலைத் தொடர்பு, போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சிகளுடன் இணைந்து உற்பத்தி பூகோளமயமானதும், முதலாளித்துவ உற்பத்தியின் பொருளாதார அலகாக விளங்கிய தேசிய அரச அமைப்புக்கு வரலாற்று ரீதியான நெருக்கடியை உருவாக்கி உள்ளது. உலக முதலாளித்துவத்துக்கான புதிய வாழ்க்கைக்கான மூச்சினை சிருஷ்டித்துக் கொடுத்த யுத்தத்தின் பின்னைய சமநிலையும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நடைமுறையை நாம் அனைத்துலக ரீதியில் கண்டு கொள்ள முடியும்.

இந்திய முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி இந்தச் செயல்பாட்டின் ஒரு பாகமாகும். தமது வெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சுக்களினாலும் சுயபூர்த்தி வேலைத்திட்டத்தின் மூலமும் நான்கு தசாப்தங்கள் ஊடாக இந்தியாவை ஆட்சி செய்த இந்திய காங்கிரஸ் கட்சி, இன்று ராவ் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய நிதி அமைப்புகள், ட்ரஸ்டுகளின் கைக்கூலியாக முழுமனே பரிணாமம் அடைந்துள்ளது.

பிராந்தியவாத போக்குகள் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து செல்லும் எல்லை வரை வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு பிராந்திய மாநில அரசுகளும் பன்னாட்டுக் கம்பனிகளின் முதலீடுகளை ஈர்க்கும் முகமாக ஆளுக்காள் போட்டியிட்டுக் கொண்டுள்ளன. தொழிலாளர்களை நெறிப்படுத்துவதில் தாம் எவ்வளவு நன்றாகத் தொழிற்படுகின்றோம் என்பதை ஏகாதிபத்தியவாதிகளுக்கு நிரூபிக்கும் முகமாக மாநில அரசாங்கங்கள் தொழிலாளர் போராட்டங்களுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசாங்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடை நெசவு தொழிலாளர்களுக்கும், கரூரில் சீனித் தொழிலாளர்களுக்கும் தூத்துக்குடியில் துறைமுகத் தொழிலாளர்களுக்கும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

1960பதுகளில் ஒரிஸ்சா துறைமுக நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான ட்ரக் வண்டிகளின் சில்லுகளால் 200 சிறுவர்களை நெரித்துக் கொன்றதை ஸ்டாலினிஸ்டுகளின் ஜனநாயக சகபாடி எனப்படும் ஒரிஸ்சா மாநில முதலமைச்சர் பிஜூ பட்நாயக் சமீபத்தில் அம்பலப்படுத்தினார்.

தமது மாநிலத்தில் சேவை கலாச்சாரத்தையும் தொழிற்சங்க இயக்கத்தினையும் விமர்சனம் செய்து இந்தியாவில் வதிவில்லாதவர்களும் (NRI) இந்திய கைத்தொழிலாளர்களும் தம்மிடம் அநேக முறைப்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதாக மேற்கு வங்காள ஸ்டாலினிச முதலமைச்சர் ஜோதி பாசு ஜூன் 22ம் திகதி கல்கத்தாவில் ...

அடிப்படை கொள்கைகளுக்கும், மூலோபாயத்துக்குமான 25 ஆண்டுகால உறுதியான போராட்டம்


[Indian Socialist Labour League leaders participate in the 25th anniversary of Revolutionary Communist League.]

Thozhilalar Paathai (File 439)
August 1993

பு... பொதுச் செயலாளர் விஜே டயஸ், 25 ஆண்டு நிறைவு விழாக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை

தோழர்களே, தோழியர்களே, நண்பர்களே

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் இந்த 25வது ஆண்டு நிறைவுக் கூட்டம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினை கட்டி எழுப்பும் போராட்டத்தில் பல்வேறு விதத்திலும் பங்கு கொண்ட அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு தருணமாகும் என முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

பு... வை கட்டியெழுப்பும் போராட்டம், 25 ஆண்டுகள் பூராவும் மார்க்சிசப் புரட்சிகர அடிப்படைக் கொள்கைகளையும் உலக சோசலிசத்தின் மூலோபாயத்தினையும் தொழிலாள – ஒடுக்கப்படும் மக்களிடையே நிலை நாட்டத் தொடுத்த போராட்டமாகும். ஆரம்பத்தில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அந்தத் தொழிலாள வர்க்க அனைத்துலகவாத அடிப்படையில் காலூன்றாமல் தொழிலாள வர்க்கத் தலைமை நெருக்கடியை தீர்த்து வைக்கும் ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறது.

சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தினைப் பிரதிநிதித்துவம் செய்து, அதன் ஜேர்மன் கிளையின் செயலாளர் தோழர் உலி றிப்பேர்டும், எமது தோழமை இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தோழர்களான அருண்குமார், ராம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் அப்போராட்டத்தின் அடிப்படைத் தன்மை ருசுவாகியுள்ளது. ...

Monday, August 29, 2016

இந்திய ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கழகம் ஆதரவு


Thozhilalar Paathai Volume 439
September 1993

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட 
சோசலிசத் தொழிலாளர் கழகம்

37, 2வது மாடி,
நாராயண் மஸ்திரி வீதி,
ஒட்டேரி சென்னை.
1993 ஜூலை 24

விலானி பீரிஸ்,
தலைவி,
சுயாதீனத் தொழிலாளர் விசாரணைக் குழு,
90, 1வது மாளிகாகந்த ஒழுங்கை,
கொழும்பு - 10, இலங்கை.

அன்பின் தோழி,

பிரமேலால் ஜயக்கொடியின் மரணம் பற்றியும் சுதந்திர வர்த்தக வலயத்தின் சேவை நிலைமைகள் பற்றியும் ஆராயும் தொழிலாளர் விசாரணைக் குழு 1993 ஜூலை 25ம் திகதி கூடுவதாக பு... பொதுச் செயலாளர் தோழர். விஜே டயசிடம் அறிந்தோம்.

 
துக்கத்தில் ஆழ்ந்த ஜயக்கொடியின் குடும்பத்தினருக்கும், தாம் சேவை செய்து வந்த 5 தொன் எடை கொண்ட நெரிக்கும் இயந்திரத்தினுள் நசுங்குண்டு ஜயக்கொடி இறந்து போகும் வரை அவருடன் ஒன்றாக சேவை செய்த கொரியா-சிலோன் பாதணி கம்பனியின் தொழிலாளர்களுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட இந்திய ட்ரொட்ஸ்கிச சோசலிசத் தொழிலாளர் கழகம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றது. உங்களின் விசாரணைக் கமிட்டிக்கு ஆதரவு தர சோசலிசத் தொழிலாளர் கழகம், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் உள்ளே பிரச்சார இயக்கத்தினைத் தொடுக்க உறுதி பூண்கிறது.

தோழமையுடன்
அருண் குமார்
பொதுச் செயலாளர்,
சோசலிசத் தொழிலாளர் கழகம்

Sunday, August 28, 2016

மேற்கு வங்க போலீஸ் துப்பாக்கிச் சூடு! ஜோதிபாசு அரசாங்கத்தின் கொலை வெறித் தாக்குதல்! 12 க்கு மேற்பட்டோர் பலி


Thozhilalar Paathai Volume 61 (File no 437)
August 1993

ஜூலை 21ல் கல்கத்தாவில் ஸ்டாலினிச ஜோதிபாசு அரசாங்கத்தின் போலீசாரால் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்டாலினிச அரசாங்கத்தின் இந்த படுகொலை நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் 'ஜனநாயக! விரோத செயல்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக ஜோதிபாசு நியாயப்படுத்தினார். “ஜனநாயகம்", “சட்டம்" “ஒழுங்கு" ஆகியவற்றை பாதுகாப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஜோதிபாசு கூறினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைப்பது பற்றிய கோரிக்கையை அவர் அடியோடு நிராகரித்தார். அது போலீசாரின் உணர்வுகளை பாதிக்கும் என்றார் ஜோதிபாசு!!

 
காங்கிரஸ் இளைஞர் அணியை தாக்கிய ஜோதிபாசுவின் அதே போலீசார் தான் ஜோதிபாசு அரசாங்கம் பஸ் கட்டணம், ஆஸ்பத்திரி கட்டணங்களை உயர்த்திய போது எழுந்த பரந்த மக்கள் எதிர்ப்பையும், ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. அதே போல் கடந்த நவம்பர் 2ல் ஹரிகர்பாராவில் ஸ்டாலினிச நிர்வாகத்தின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து திரண்டெழுந்த மூவாயிரம் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ஆக ஜூலை 21ல் படுகொலை நடவடிக்கைகள் உண்மையிலேயே ஸ்டாலினிச அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடையும் பரந்த தொழிலாளர்களின், மாணவர்களின், வேலையற்றோரின், மத்தியதர வர்க்கப் பிரிவினரின் இயக்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகவே செய்யப்பட்டது, புரட்சிகர தலைமை வெற்றிடம் உள்ள நிலையில் ஸ்டாலினிச அரசாங்கத்துக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை முதலாளித்துவ கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி மற்றும் மாவோயிச அமைப்புகள் சுரண்ட முயற்சிக்கின்றன; ஜோதிபாசு அரசாங்கத்தின் உண்மையான இலக்கு மேற்கு வங்க தொழிலாள வர்க்கமே.

தொழிலாளர் விரோதம்

மேற்கு வங்கத்திற்கு பன்னாட்டு கம்பனிகளின் முதலீட்டை வரவழைப்பதற்கு ஜோதிபாசுவின் ஸ்டாலினிச அரசாங்கம் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறது. ஜோதிபாசுவும் அவரது மகனும் முதலாளியுமான சத்தன்பாசு கடந்த வருடங்களில் பல ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு விஜயம் செய்து காங்கிரஸ் அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கி பெரும் முதலாளிகள் பங்கு கொண்ட கூட்டங்களில் உரையாற்றினார்கள். இந்த வருடம் ஜூன் மாதம் ஜோதிபாசு மேற்கு வங்க தொழிலாளர்கள் தமது தொழில் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்று பொதுக் கூட்டத்திலே பேசும் போது கூறினார். தமக்கு தொழில் அதிபர்களிடமிருந்தும் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் (முதலாளிகளிடமிருந்தும்) மேற்கு வங்க தொழிலாளர்களின் தொழில் கலாச்சாரம் சம்பந்தமாக முறைப்பாடுகள் வருவதாகவும் இதனால் அவர் மனம் நொந்து போய் இருப்பதாகவும் கூறினார். அதாவது மேற்கு வங்க தொழிலாளர்கள் முதலாளிகளின் இலாபத்தை பெருக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஜோதிபாசு கூறுகிறார். தொழிற்துறை பாலைவனமாக மேற்கு வங்கம் மாறுவதை தான் பார்க்க விரும்பவில்லை என்றும் அதனால் மேற்கு வங்க தொழிற்துறை பொருளாதாரம் புணருதாரணம் அடைய ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டும் என்றும் பாசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் இதர மாநில காங்கிரஸ், ஜனதாதளம், .தி.மு.., பாரதீய ஜனதாக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் தத்தமது மாநில வளர்ச்சிக்காக பிராந்தியவாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் வேண்டுகோள் விடுவதிலிருந்து மாறுபட்டதல்ல. ஒரு வேறுபாடு என்னவென்றால் ஜோதிபாசு "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி" யிலிருந்து சமயத்திற்கு சமயம் சோசலிசம், கம்யூனிசம் போன்ற வார்த்தைகளை கூறிய வண்ணம் இவற்றை செய்கிறார்.

ஸ்டாலினிசத்தின் பரிணாமம்

அக்டோபர் புரட்சியின் லெனினின் சர்வதேசிய சோசலிச புரட்சி முன்னோக்குகளை கைவிட்டு தமது சலுகைகளை பாதுகாப்பதற்காக சோவியத் அரசுடைமையில் ஒட்டுண்ணியாக இருந்து வளர்ச்சி கண்டது தான் ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவம், அது "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிய விரோத கொள்கையை பின்பற்றி அதன் அதிகாரத்துவ சலுகைகளை பாதுகாத்தது, இதனை எதிர்த்து 1923ல் டிராட்ஸ்கி தலைமையில் உருவாக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்பியக்கத்தை நசுக்கியது, அக்டோபர் புரட்சிக்கு லெனினுடன் தலைமை வழங்கிய போல்ஷேவிக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோரை படுகொலை செய்தது. டிராட்ஸ்கியையும், அவரது லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும், கலைஞர்களையும் கொன்று குவித்தது. இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோவியத் ஜனநாயகத்தை நசுக்கி அரசியல் அதிகாரத்துவத்தையும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிடுங்கிக் கொண்டது. 1933ல் ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த தொழிலாள வர்க்கமாக திகழ்ந்த ஜெர்மனிய தொழிலாள வர்க்கம் ஹிட்லரினால் கோரமாக ஒடுக்கப்படுவதற்கு ஸ்டாலினின் கொள்கைகள் காரணமாக அமைந்தன. இதற்கு வக்காளத்து வாங்கிய மூன்றாம் அகிலத்தின் இதர பகுதிகளும் சோவியத் ஸ்டாலினிசத்துடன் கூடவே முழுமையாக எதிர்புரட்சிகர முகாமுக்கு சென்று விட்டதாக டிராட்ஸ்கி கூறினார். ஸ்டாலினிசம், தொழிலாள வர்க்க மத்தியில் ஏகாதிபத்தியத்தின் எதிர் புரட்சிகர ஏஜன்டாக செயல்படுவதாக டிராட்ஸ்கி கூறினார். அதனை அரசியல் ரீதியாக அழிக்கவும், தொழிலாள வர்க்கத்திற்கு புதிய புரட்சிகர முன்னோக்கை வழங்கவும் 1938 ல் நான்காம் அகிலத்தை டிராட்ஸ்கி ஸ்தாபித்தார்.

ஊர்ஜிதம்

ஸ்டாலினிசம் சம்பந்தமான டிராட்ஸ்கியின் சக்தி வாய்ந்த மார்க்சிய ஆய்வு இன்று பல பத்தாண்டுகளுக்கு பின்னர் தீர்க்கமாக ஊர்ஜிதமாகியுள்ளது, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டம் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் நீண்டகால முதலாளித்துவ சுற்றி வளைப்பின் கீழ் சோவியத் யூனியன் உலக முதலாளித்துவத்தின் அழுத்தங்களுக்கு பலியாக நேரிடும், அப்போது ஸ்டாலினிச அதிகாரத்துவம் தனது சலுகைகளை தொடர்ந்து பாதுகாப்பதற்காக அதனை ஒரு முதலாளித்துவ வர்க்கமாக மாற்றிக் கொள்ளும் என்று டிராட்ஸ்கி முன் ஆய்ந்து கூறினார். இந்த வளர்ச்சிப் போக்கிலேயே இன்று சோவியத் ஸ்டாலினிசம் சோவியத் யூனியனை அழித்ததுடன், உடைந்த துண்டுகளில் முதலாளித்துவ மீட்சிக்காக தீவிரமாக வேலை செய்கிறது. ஏகாதிபத்தியங்களின் தரகு முதலாளித்துவ பிரிவுகளாக பழைய ஸ்டாலினிஸ்டுகள் இன்று செயற்பட்டு வருகின்றனர். இதுவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும், வியட்நாமிலும் நடந்து வருகிறது. இந்திய ஸ்டாலினிஸ்டுகளும் அவர்களது "சர்வதேச தோழர்களின்" பாதையிலிருந்து விதிவிலக்காக இருக்க மாட்டார்கள் என்பதை தான் மேற்கு வங்க ஸ்டாலினிஸ்டுகளின் அரசாங்கம் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய புரட்சியின் மரண எதிரிகளாக இந்திய ஸ்டாலினிஸ்டுகள் செயற்பட்டு வந்தார்கள். 1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் கூட்டாக சதி செய்து தொழிலாள வர்க்கத்தை மதவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு அன்று ஒன்றுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைப்பு வழங்கியது. முஸ்லீம்கள் ஒரு தனி தேசிய இனம் அவர்கள் தனியாக ஒரு அரசை "பாகிஸ்தானை" உருவாக்க அவர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை இருப்பதாக "கம்யூனிஸ்ட் கட்சி" கூறியது.

பாகிஸ்தானின் உடைவும் (1971ல்) அவ்விரு நாடுகளிலும் தொழிலாளர்களும் விவசாயிகளும் சிறுபான்மை மக்களும் மோசமாக ஒடுக்கப்பட்டு வருவதும் ஸ்டாலினிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் எதிர்புரட்சித் தன்மையை மேலும் வெளிச்சமாக காட்டுகிறது. 1947இன் மதவாத பிரிவினையும் போதாதென்று மேலும் மொழி, ஜாதி அடிப்படையில் துணை கண்ட தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி தொழிலாள வர்க்க ஐக்கியத்தையும் எதிர்ப்பையும் பலவீனப்படுத்துவதற்கு சி.பி.., சி.பி.எம்., சி.பி.. (எம்.எல்) ஆகிய அனைத்து ஸ்டாலினிச அமைப்புகளும் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்று அணி இல்லை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கை முற்போக்கானது என்று கூறி சிபிஐ, சிபிஎம், இரண்டு ஸ்டாலினிச கட்சிகளும் முதலாளித்துவ காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்து வந்தன. 1987இலிருந்து விபி சிங் தலைமையில் ஜனதா தளம் முற்போக்கானது என்று கூறி தொடர்ந்து முதலாளித்துவ ஆட்சி அமைப்பை காத்து வந்தது. 1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சிக்கு ஆதரவு வழங்கியது. ஜனதா அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்த ஜனசங்கம் பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியாக உருவெடுத்தது. ஸ்டாலினிஸ்டுகள் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாசிச வகுப்புவாத கட்சியென்று கூறும் அதே பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்ந்து விபி சிங் சிறுபான்மை ஆட்சியை 11 மாதங்கள் தக்க வைத்தனர், மேலும் பிராந்தியவாத இனவாத கட்சிகளான திமுக தெலுங்கு தேசம் ஆகியவற்றுக்கு முற்போக்கு முலாம்பூசி அவற்றின் வளர்ச்சிக்கு உதவியளித்து வருகின்றன. குறிப்பாக 1991லிருந்து மிக வெளிப்படையாகவே ஏகாதிபத்திய நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக இயங்கி வரும் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து வருவதில் ஸ்டாலினிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 1991ல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை ஆட்சியை அமைத்த போது அதை தக்க வைப்பதை நியாயப்படுத்தி ஜோதிபாசு கூறியதாவது: “விரைவில் மற்றொரு தேர்தலை மக்கள் விரும்ப மாட்டார்கள். மக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள் நாட்டில் குழப்பம் ஏற்படும்.”

இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இதர முதலாளித்துவ கட்சிகளைப் போலவே ஜோதிபாசுவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அதனால் தான் ஜூலை 21 படுகொலை நடவடிக்கை சம்பந்தமாக விசாரணை நடத்தப்படுமாயின் அது போலீசாரின் உணர்வுகளை பாதிக்கும் என்றார்.

போலீஸ்

ஜோதிபாசு அரசாங்கம் பயன்படுத்தும் போலீஸ் படை இதர மாநிலங்களில் அல்லது சர்வதேச ரீதியாக முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் போலீஸ் படையின் வர்க்க குணாம்சத்திலிருந்து வேறுபட்டதல்ல. போலீஸ் இராணுவம் இவை அனைத்துமே தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி முதலாளித்துவ (தனியுடமையின்) சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினால் பயன்படுத்தும் அரசு இயந்திரங்களாகும்; அரசு இயந்திரம் சம்பந்தமாக மார்க்ஸ், ஏங்கெல்ஸின் நிலைப்பாட்டை வலியுறுத்தி மகத்தான அக்டோபர் புரட்சியின் தலைவர் லெனின் அரசும் புரட்சியும் என்ற நூலில் நூற்றுக் கணக்கான பக்கங்களில் எழுதியுள்ளார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனினின் கருத்துப்படி தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக ஏற்கனவே தயாராகியிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாள வர்க்கம் அப்படியே எடுத்தாள முடியாது. அது அனைத்தையும் தொழிலாள வர்க்கம் நொறுக்க வேண்டும், உடைக்க வேண்டும். தகர்த்திட வேண்டும் (அரசும் புரட்சியும், லெனின், பக்கம் 151)

ஆனால் கம்யூனிச முகமூடி அணிந்துள்ள ஜோதிபாசுவையும், சிபிஎம், சிபிஐ ஸ்டாலினிச கட்சிகளையும் பொருத்த வரை தொழிலாள வர்க்கத்தினால் நொறுக்க, உடைக்க தகர்க்கப்பட வேண்டிய அரசு இயந்திரத்தின் உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்திய நாடு கடந்த கம்பனிகள் பூகோள ரீதியான உற்பத்தியில் கம்ப்யூட்டர், தொலைதொடர்பு, போக்குவரத்து சாதனங்களில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான தொழில் நுட்பங்களின் ... உதவியுடன் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறான நாடு கடந்த கம்பனிகள் மிக மலிந்த கூலியைத் தேடி பூகோள ரீதியான வேட்டையில் ஈடுபட்டுள்ளனர், பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது வர்க்க நலன்களை பாதுகாக்க பன்னாட்டு கம்பனிகளுடன் கூட்டிற்கு செல்கின்றன, அல்லது அவற்றினால் விழுங்கப்படுகின்றன. அது போலவே ஸ்டாலினிச அதிகாரத்துவங்களும் இன்று பண்பியல் ரீதியான மாற்றமடைந்து ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளித்துவ பிரிவுகளாக மாறியுள்ளன. ஜோதிபாசுவின் பாதையும் அதுவே. மேற்கு வங்கத்தில் ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளித்துவ கையாளாக இருப்பது ஜோதிபாசுவோ, மமதாபானர் ஜியா என்பதே அவர்களுக்கு இடையிலுள்ள மோதலின் சாரம்.

தொழிலாள வர்க்கம் இந்த இரண்டு ஏகாதிபத்திய கால் வருடிகளையும் நிராகரிக்க வேண்டும் பொது எதிரியான முதலாளித்துவத்துக்கு எதிராக சர்வதேச ரீதியான தொழிலாள வர்க்கத்துடன் சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஒன்று சேர வேண்டும். இந்த சோசலிச சர்வ தேசிய வேலைத்திட்டத்திற்கு போராடும் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவையும் அதனுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தையும் கட்டுவதே, இன்று வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள், புரட்சிப் பாதையை நாடும் அறிவு ஜீவிகள் இளைஞர்கள், மத்தியதர வர்க்கப் பகுதியினர் முன்னுள்ள புரட்சிகர கடமையாகும்.