"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Tuesday, August 9, 2016

இந்தியா: பஞ்சாப், அசாம் தேர்தல்களுக்கு ஸ்டாலினிஸ்டுகள் எதிர்ப்பு


[SLL-India announces that "ICFI's fraternal organization Socialist Labour League was the only one which was struggling against the treacherous politics of the Stalinist's Popular Front to build alternative revolutionary leadership among Indian working and oppressed people. For the establishment of working class state with a revolutionary program, SLL-India had listed its candidates in North Chennai and Villivakkam constituencies."]

Thozhilalar Paathai, Volume 405 (File 039)
April, 1991

 
இந்தியாவின் பிரசித்தி பெற்ற துணிநெசவு ஆலையான பீ.அன்.சீ. மில் மூடப்படுவதற்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் 'பந்த்' போராட்டத்தினால் சென்னையும் அண்ணா மாவட்டமும் ஸ்தம்பித்தது. பாடசாலை மாணவர்களின் பரீட்சை காரணமாக பல்லவன் போக்குவரத்துச் சேவையும், ஆஸ்பத்திரி சேவையும் இந்த 'பந்தில்' சம்பந்தப் படுத்தப்படவில்லை. அரசாங்க, தனியார் துறையைச் சேர்ந்த சகல பக்டரிகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. சென்னையின் முக்கிய கைத்தொழில் பிரதேசங்களான மாதவரம், அயனாவரம், பேரம்பூரில் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பித்துக் கிடந்தது. தொழிலாளர்கள் வீதித் தடைகளை ஏற்படுத்தி வீரியத்துடன் தலையிட்ட இடங்களில் பொலிசார் 600 தொழிலாளர்களை கைது செய்தனர்.

ஸ்டாண்டர்ட் மோட்டார்சுடன் சேர்ந்து இன்று பீ அண்ட் சீ. மில்லின் மூடுவிழாவானது உலக நெருக்கடியையும் ஏகாதிபத்திய முதலீடுகளுக்குச் செய்யப்படும் தயாரிப்பையும், இந்தியாவின் பாரம்பரிய தேசியக் கைத்தொழில்கள் துடைத்துக் கட்டப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டுகின்றது.

இந்தியாவின் 'தேசிய' கைத்தொழிலும் பொருளாதாரத் துறையும் முற்று முழுதாய் நெருக்கடிக்குள்ளாகி வரும் நிலையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகள் வீ.பி. சிங்கின் ஜனதா டால் கட்சியுடன் முதலாளித்துவ கூட்டரசாங்கம் அமைப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். மே 20, 23, 26ம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில் ஜனதா தளம் உள்ளடங்கலான முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, போட்டி தவிர்ப்புகளில் ஈடுபடத் தயாராகி வருகின்றார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தேசிய சபையின் பிரேரணை இக்கூட்டினைப் பற்றி கூறியதாவது: “எமது அரசியல் இலக்கு பாரதீய ஜனதா கட்சியையும் காங்கிரஸ் () கட்சியையும் தோற்கடிப்பதும் லோக்சபையில் (இந்திய பாராளுமன்றம்) இடதுசாரிச் சக்திகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தினை கொண்ட இடதுசாரி-தேசிய முன்னணிக் கூட்டின் மத்திய அரசாங்கம் ஒன்றினை கட்டி எழுப்புவதே.”

இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் மற்றோர் பிரிவினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - சிபிஎம்) தேசிய முன்னணியுடன் கூட்டரசாங்கத்தில் நுழைவது சம்பந்தமான தமது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. 'தீர்மானம் செய்வது தொடர்பான நெருக்குவாதம் ஏற்படுத்த முடியாதெனில் அரசாங்கத்தில் சேர தாம் விரும்பவில்லை' என அவ்வறிக்கை கூறிக் கொண்டுள்ளது.

இதற்கிடையே வீ.பி. சிங்கின் ஜனதா தளத்துக்கும் காபந்து பிரதமர் சந்திரசேகரின் ஜனதா தளத்துக்கும் (எஸ்) இடையே கூட்டுக்கான இரகசியப் பேச்சு வார்த்தைகள் தற்சமயம் இடம் பெற்று வருகின்றது.

ஜனதா தளத்தின் தேசிய இணைப்புக் கமிட்டிக்கும் ஸ்டாலினிசக் கட்சிகள் உள்ளடங்கலான 'இடதுசாரிக் கூட்டுகளுக்கும் இடையே ஏப்ரல் 5ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சீ.பி.. தலைவர் எம். பாரதியும் சீ.பீ.(எம்) அரசியல் குழு உறுப்பினர் ஹர்கிஜன் சிங் சந்தித்து ஒரு நிலைப்பாட்டினை வகித்தனர்: ஜனதா தளத்துடனான (எஸ்) கருத்துப் பரிமாறலை உடனடியாக முறித்துக் கொள்ளக் கூடாது. மார்ச் 29, 30, 31ம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த சீ.பி.. பிரதிநிதி தாம் இந்தியாவினுள் ஒரு கூட்டரசாங்கத்தை அமைக்க ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் முதலாளித்துவக் கூட்டரசாங்கங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு அவற்றுக்கு முண்டு கொடுத்து வந்த இந்திய ஸ்டாலினிஸ்டுகள் இம்முறை அவற்றில் நேரடியாக இணைந்து கொள்ள முடிவு செய்தமை, அவர்களின் எஜமானனாக ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சேவை செய்யும் தமது எதிர்ப்புரட்சி தொழிற்பாட்டினை புதிய மட்டத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.

இந்திய ஸ்டாலினிச சகாக்கள் முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தில் அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்ள எடுத்த முடிவினை இலங்கை ஸ்டாலினிஸ்டுகள் 'அந்த' பத்திரிகையில் பெருமகிழ்ச்சி ததும்ப, உஜாருடன் வெளியிட்டனர். வெளியில் இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கையில் 'மக்கள் நம்பிக்கை' குறைந்து போவதால், அரசாங்கத்தில் நேரடியாக நுழைவது அவசியம் என இலங்கையின் ஸ்டாலினிஸ்டுகள் வாதிட்டு வந்தனர்.

அசாம், பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் நடாத்தாமல் தொடர்ந்தும் அவற்றை புது டில்லியின் நேரடி ஒடுக்குமுறையின் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற பிரச்சாரத்துக்கும் இந்திய ஸ்டாலினிஸ்டுகள் ஆதரவு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக ஒரு நினைவூட்டல் கடிதத்தினைக் கூட சீ.பீ.., சீ.பீ.எம் தலைமைகள் காங்கிரஸ் () படுபிற்போக்கு இந்துவெறி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விமர்சனம்

எதிர்வரும் தேர்தலில் அரசியல் இலாபத்தின் பேரில் சந்திரசேகரின் காபந்து அரசாங்கம், பஞ்சாபிலும், அசாமிலும் தேர்தல் நடாத்தும்படி ஏப்ரல் 11ம் திகதி ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது. இந்தச் சிபாரிசினை கடுமையாக விமர்சனம் செய்த சீ.பி.(எம்) தலைவர்கள், அதனை அமுல் செய்ய வேண்டாம் என ஜனாதிபதியைக் கோரி இருந்தனர். தமது அதிகாரத்தினைப் பாவித்து இம்முடிவினை அமுல் செய்வதை தவிர்க்குமாறு சீ.பீ.(எம்), தேர்தல் ஆணைக் குழுவைக் கேட்டுள்ளதாக அதன் அரசியல் குழு உறுப்பினரான ஹர்கிஷன் சிங் சுர்ஜிட் பீ.டீ.. செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார்.

இன்றைய அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட முயற்சிக்கிறது. லோக் சபை தேர்தலை நடாத்துவதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதி செய்ததன் பின்னர் தேர்தல் நடாத்துவது பற்றிய விளக்கத்துக்கு வர சகல அரசியல் கட்சிகளும் தயாராக உள்ள நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கை கலைக்கப்பட்ட லோக்சபாவின் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்த பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிப்பிராயம் பற்றி இன்றைய அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை" என்பதைக் குறிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரதீய ஜனதா கட்சியின் இனவாதம், மதவாதம் சம்பந்தமான அவர்களின் 'விமர்சனம்' ஒருபுறமிருக்க, இந்திய ஸ்டாலினிஸ்டுகள் பஞ்சாபையும், அசாமையும் ஹிந்து மதவெறி மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு கீழ்ப்படுத்தி வைக்க பாரதீய ஜனதா கட்சியுடனும் வெளிவெளியாகக் கோர்த்துக் கொண்டுள்ளனர். சமீப காலம் வரை பஞ்சாபிலும், அசாமிலும் தேர்தல் நடாத்த வேண்டும் எனக் கேட்டு வந்த சீ.பி.. தலைவர்கள் கூட 180 பாகையில் குத்துக்கரணமடித்து அம்மாநிலங்களில் தேர்தல் இரத்தாக வேண்டும் என்ற பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். இந்தக் குத்துக்கரணத்தின் மூலம் நம்மிடையே இருந்து வந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து, நெருங்கித் தொழிற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சீ.பீ.எம். தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளாவண்ணம் எதிர்ப்புரட்சி அரசியலின் உச்சக் கம்பத்துக்கு ஏறிக் கொண்டுள்ள இந்தி சீ.பீ.., சீ.பீ.எம். தலைவர்களையே 'இந்தியாவின் இடது சக்திகள்' என சந்தர்ப்பவாத தலைவர்கள் அரவணைத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவினுள் சிறுபான்மை தேசிய இனங்களையும் மதக் குழுக்களையும் நசுக்கவும், தொழிலாள வர்க்கத்தினை ஏகாதிபத்தியச் சார்பு முதலாளிகளுக்குப் பலியிடவும் இந்திய ஸ்டாலினிஸ்டுகள் தொழிற்படுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற நவசமசமாஜக் கட்சியின் 13வது ஆண்டு நிறைவு விழாவுக்கு சீ.பீ.எம். மின் தமிழ்நாடு நிறைவேற்றுக் குழு 'நல்வாழ்த்து' அனுப்பியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த துரோக நடவடிக்கையை தமக்கு முற்றிலும் சாதகமாக்கிக் கொண்டுள்ள படுபிற்போக்கு இந்திய வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி, இன-மதவெறிப் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளது. ஏப்ரல் 4ம் திகதி புது டில்லியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய பா.. கட்சி தலைவர் எல். ஜே. அத்வானி பாகிஸ்தானத்தின் நிர்வாகத்துக்குள் வரும் 'காஷ்மீரினை இந்தியாவுக்குப் பெறும் பொருட்டு தமது கட்சி செயற்பட்டு வருவதாகக் கூறினார். விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆர். எஸ். எஸ். போன்ற வலதுசாரி இனவெறியர்களுடன் சேர்ந்து இத்தகைய இன-மத ஆத்திரமூட்டல்களில் பாரதீய ஜனதா கட்சி ஈடுபடக் காரணம், இந்தியத் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக பாசிச இயக்கம் ஒன்றைக் கட்டி எழுப்புவதே.

தொழிலாள வர்க்கத்தின் மீது அத்தகைய மிலேச்ச பாசிச சர்வாதிகாரத்தினைத் திணிக்க அவசியமான நிலைமைகளை சிருஷ்டிப்பதற்கு இந்திய தொழிலாள வர்க்கத்தினை முதலாளித்துவ மக்கள் முன்னணி பொறிகளில் மாட்டுவதற்கு ஸ்டாலினிச ஏஜன்டுகளின் சேவை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அவசியம். சீ.பீ.., சீ.பி.எம். தலைவர்கள் தமது எஜமான்களுக்கு இச்சேவையை வழங்கத் தயாராகி வருகின்றனர்.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த மக்கள் முன்னணி துரோக அரசியலுக்கு எதிராக மாற்றுப் புரட்சித் தலைமையைக் கட்டி எழுப்புவதற்கு இந்தியத் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களிடையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழமை இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டுமே போராடி வருகின்றது. முதலாளித்துவ ஜனநாயக நப்பாசைகளுக்கு எதிராக இந்திய முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கி வீசி, தொழிலாள வர்க்க அரசினை ஸ்தாபிதம் செய்வதற்கான புரட்சிகர வேலைத்திட்டத்துடன் சோ.தொ.. வட சென்னை, வில்லிவாக்கம் தேர்தல் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Monday, August 8, 2016

பு.க.க. மே தினச் செய்தி: உலக யுத்தத்துக்கும் காலனிமயமாக்கலுக்கும் எதிராகப் போராடு!


[“The Revolutionary Communist League's May day message states that the Sri Lankan section of ICFI (RCL) and India Socialist Labour League were fighting to mobilise the Indian sub-continent working class for revolutionary program under Trotsky's Permanent Revolution theory.”]

Thozhilalar Paathai, Volume 405 (File 039)
April, 1991

உலகத்தை மீண்டும் பங்கு போடும் கொடிய காலனித்துவத்துக்காக ஏகாதிபத்தியவாதிகளிடையே இழுபறிகள் ஏற்பட்டுள்ள முன்றாவது அணுவாயுத உலக யுத்தத்துக்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கம்—ஒன்றிணைந்த அனைத்துலக புரட்சிகரச் சக்தியாகக் கிளர்ந்து எழ வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த மே தினத்தில் வேண்டிக் கொள்கிறது. …

இந்தியத் துணைக்கண்டம்

சீர்திருத்தவாதிகளும் ஸ்டாலினிச அதிகாரத்துவங்களும் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியாளர்களைக் காக்கும் பொருட்டு தம்மை அர்ப்பணம் செய்து கொண்டுள்ளன. இந்த அழிவினை தொழிலாள ஒடுக்கப்படும் மக்கள் மீது திணிப்பது பற்றி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து கிடைக்கும் அறிக்கைகள் மிகவும் கேவலமான வடிவங்களை எடுத்துள்ளன. இவை ஏனைய இடங்களில் இழைக்கப்பட்ட காட்டிக் கொடுப்புக்களை எல்லாம் தாண்டிச் செல்கின்றன.

இலங்கையில் சமசமாஜ, ஸ்டாலினிச தலைவர்களும் இந்தியாவில் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் திணிக்கப்பட்ட பிற்போக்கு முதலாளித்துவ அரசாங்கங்களும் அடிபணிந்தமையானது கோடானுகோடி இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ், பர்மிய, இலங்கை மக்களுக்கு சகிக்க முடியாத வேலையின்மை பஞ்சம், பட்டினியையே தேடிக் கொடுத்துள்ளது. இவற்றுக்கு எதிராகத் தலைதூக்கும் மக்கட் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் தயாரிப்பு நடவடிக்கையாக ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களை இடைவிடாமல் இன, மத மோதுதல்களில் ஈடுபடச் செய்து இராணுவ—பாசிச சர்வாதிகாரத்தினை திணிக்க முயன்று வருகின்றது. 1947-48ல் இந்தியாவை பிரிவினை செய்த வேளையில் இந்தியத் துணைக்கண்டம் பூராவும் இடம் பெற்ற இரத்தக் களரியை தாண்டும் ஒரு தொகை மோதுதல்களை தூண்டிவிடுவதில் பிற்போக்கு ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் பயங்கர இயக்கமானது இந்த காட்டுமிராண்டி நடவடிக்கையின் ஒரு பாகமே.

யுத்தத்தின் பின்னைய ஏகாதிபத்திய உலக அமைப்பின் பொறிவானது இந்தியத் துணைக்கண்டத்தின் உள்ளே ஏகாதிபத்தியச் சார்பு தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்களின் பிற்போக்கும், அழிவும் இலட்சோப இலட்சம் மக்களுக்கு வசிப்பிடமும் இல்லாமல் செய்வதன் மூலம் வெளிப்பாடாகியுள்ளது. இன்று பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, இந்தியா, இலங்கை முதலான சகல முதலாளித்துவ நாடுகளில் திணிக்கப்படும் இன-மத ஒடுக்குமுறைகளைச் … மக்களும், ஏழைகளும் ஒரு நாட்டில் இருந்து மறு நாட்டிற்கு அகதிகளாக கலைக்கப்பட்டு வருகின்றார்கள். இந்தியாவின் பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குப் பெருக்கெடுக்கும் அகதிகளும் பங்களாதேஷ் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் ஒடுக்குமுறையைச் சகிக்க முடியாமல் இந்தியாவுக்குள் பெருக்கெடுக்கும் இலட்சக்கணக்கான … மக்கள் உட்பட ஒடுக்கப்படும் மக்களும், பர்மாவின் இராணுவ ஒடுக்குமுறையினாலும் முஸ்லீம் எதிர்ப்பினாலும் பங்களாதேசுக்குள்ளும் இந்தியாவுக்குள்ளும் பெருக்கெடுப்போரும், வடகீழ் மாகாண தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தினால் அவர்களின் வீடுவாசல்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட 8 இலட்சம் மக்கள் இந்தியாவுக்குச் சென்றமையும் இந்த சரணாகதியடைந்த மாபெரும் மக்கட் சனத்தொகையின் ஒரு சிறு துளியாகும்.

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொண்டுள்ள இன்றைய உலக நிலையில் குறைந்தபட்ச மனித வாழ்க்கை வசதிகள் தன்னும் இல்லாமல் இங்ஙனம் புகலிடம் தேடிக் கொண்டுள்ள இலட்சோப லட்சம் மக்கள் ஏகாதிபத்திச் சார்பு முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிராகத் தொடுக்கும் பலத்த குற்றச்சாட்டாகும்.

இது வெறுமனே இன்று அடைக்கலம் தேடிக் கொண்டுள்ள மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அழிவு மட்டுமின்றி முழுத் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்கள் மீதும் மிலேச்ச ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியினை திணிக்க எடுக்கப்பட்டு வரும் ஆரம்ப நடவடிக்கையாகும். இதனை ஈராக்கில் இடம்பெறும் சம்பவங்கள் எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துக் கொண்டுள்ளன, அந்தந்த நாடுகளில் மக்கள் வாழ்க்கைகளை நாசமாக்கும் முறையில் தலையிட்டு வரும் ஏகாதிபத்தியவாதிகள். அந்நாடுகளில் தமது படைகளை இருத்தும் திட்டங்களுக்கான நிலைமைகளைச் சிருஷ்டித்து வருகின்றார்கள். இந்த விதத்திலேயே ஈராக் குர்திஷ் மக்களின் அவலநிலையை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய இனத்துக்கு எதிரான இனவாத யுத்தமும் அதனால் உருவான அகதிகள் பெருக்கமும் 1987ல் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவு பெற்ற இந்திய படைகளின் நுழைவுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இன்று இந்த வேலைத்திட்டம் உலகம் பூராவும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது இந்நிலைமையில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் முதலாளித்துவ கட்சிகள், குழுக்களும் முஸ்லீம் எதிர்ப்பு இந்து வெறியை தூண்டுவதானது இந்தியாவிலும் துணைக்கண்டம் பூராவும் ஏகாதிபத்திய நிலைமைகளைச் சிருஷ்டிப்பதாக உள்ளது. …

புரட்சித் தலைமை

இந்த சகல அபிவிருத்திகளும் தொழிலாள வர்க்கத்தினதும், ஒடுக்கப்படும் மக்களதும் பாரிய நலன்களை இட்டு நிரப்ப அவசியமான அனைத்துலகவாத புரட்சித் தலைமை பற்றிய பிரச்சினையைத் தோற்றுவிக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகமும் லியொன் டிரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய துணைக்கண்ட தொழிலாள வர்க்கத்தினை புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டப் போராடி வருகின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் சகிக்க முடியாத ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆட்பட்டு வரும் மதக் குழுக்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் இளைஞர்கள் இல்லப் பெண்கள் இளைஞர்கள் இல்லப் பெண்கள், கிராமப்புற ஏழை விவசாயிகள் அனைவரையும் தொழிலாள வர்க்கத்தினைச் சூழ புரட்சிகரமான முறையில் அணிதிரட்டுவதன் மூலம் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ அரசினைத் தூக்கி வீசி, சோசலிச சோவியத் குடியரசு ஒன்றியத்தினை நிறுவுவதே அப்போராட்டத்தின் இலக்காகும். உலக சோசலிசப் புரட்சியின் முன்நோக்கின் அடிப்படையில் இடம்பெறும் இப்போராட்டத்துடன் இணைவதென சகல தொழிலாள வர்க்கப் போராளிகளும், ஒடுக்கப்படும் மக்களும் இந்த மே தினத்தில் தீர்மானம் செய்ய வேண்டும்.

  • யூ.என்.பி யை வெளியேற்று!
  • மக்கள் முன்னணிகளை நிராகரி!
  • இலங்கை-தமிழ் ஈழம் சோசலிச குடியரசினை கட்டி எழுப்பு!
  • இந்தியத் துணைக்கண்ட சோசலிச சோவியத் குடியரசு ஒன்றியத்தினை நோக்கி முன்னேறு!
  • புரட்சிக் கட்சியை கட்டி எழுப்பு!

Saturday, August 6, 2016

போக்குவரத்து தொழிலாளர்கள் மேல் துப்பாக்கிச் சூடும் தொழிற்சங்கத் தலைமைகளின் காட்டிக் கொடுப்பும்!


Thozhilalar Pathai Volume 039
June 1991

வேலூரில் கடந்த மாதம் 6ம் தேதி பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ அரசு எந்திரமான போலீஸ் நடத்திய காட்டுமிராண்டி தனமான துப்பாக்கி சூட்டையும், தடியடி பிரயோகத்தையும் பணம், நகை போன்ற பொருட்களை கொள்ளையடித்தல் போன்ற ஈனத்தனமான செயல்களையும் சோசலிசத் தொழிலாளர் கழகம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.


மே. 6, 1991 போலீசில் அடாவடித்தனமான, கீழ்த்தரமான நடவடிக்கையை போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்த்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக வேலூர் போக்குவரத்து தொழிலாளர்கள் மேல் போலீசார் மிருகத்தனமான கோர தாக்குதலை நடத்தி உள்ளனர். வேலூரில் உள்ள அனைத்து போலீஸ் படையும் ஆயுதம் தாங்கிய வண்ணம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிராக நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜாராம் என்ற இளம் தொழிலாளி கொல்லப்பட்டதுடன் 350க்கும் அதிகமான தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இந்த போலீஸ் படுகொலைக்கும் பெருமளவில் பேருந்துகளை நாசமாக்கியதற்கும், வேலூர் பஸ் டெப்போவை அடித்து நொறுக்கியதற்கும், தொழிலாளர்களின் உடமைகளை கொள்ளை அடித்ததற்கும் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு கால வரையற்ற பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம், இந்திய முதலாளித்துவ கட்சிகளுடன் ஒரு கூட்டரசாங்கத்தில் சேருவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்யும் சி.பி.. (எம்), சி.பி.. தலைமைகளைக் கொண்ட துரோகத் தனமான தொழிற்சங்கத் தலைமைகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த கிரிமினல் காட்டிக் கொடுப்பானது ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்புகின்றது, அது இந்த துரோகத் தலைமைகளுக்கு எதிராக ஒரு புதிய புரட்சிகரமான தலைமையை காட்டுவதாகும்.

இந்தியாவின் அண்மைக் காலத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களில் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முக்கியமான ஒன்றாகும். வேலூர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான மிருகத்தனமான போலீஸ் தாக்குதலானது ஒரு போலீஸ், இராணுவ சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கும், விவசாயிகளுக்கும் எதிராக தொடுக்கப்படும் எதிர்ப்புரட்சிகர தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாடு தழுவிய அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களின் தன்னெழுச்சியான காலவரையற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டமானது, இந்த புரட்சிகர தாக்குதலுக்கு ஒரு சவாலாகும். இது பொது வேலை நிறுத்தத்தை சூழ அனைத்து தொழிலாள வர்க்கத்தையும், விவசாயிகளையும் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.

இப்படியான புரட்சிகரமான அணிதிரட்டலை கண்டு ஸ்டாலினிச சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் அஞ்சுகின்றன. இதனால் தான் வேலைநிறுத்தத்தை திட்டவட்டமாக காட்டிக் கொடுத்தனர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொழிலாளர்களை மறுபடி வேலைக்குத் திரும்ப செய்தனர். இவ்வாறாக போலீசார் அவர்களது குற்றத்திலிருந்து தப்பிக்க அனுமதித்தார். இதற்கு காரணம் இந்த ஸ்டாலினிச தலைமைகள் முதலாளித்துவ அமைப்பை கட்டிக் காக்க தம்மை 'அர்ப்பணம்' செய்திருப்பதனாலாகும்.

இந்தக் காட்டிக் கொடுப்பு தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அபாயத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் இந்த துரோகத் தலைமைகள் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏஜண்டுகளாக செயல்பட்டு முதலாளித்துவ அரசின் ஆயுதப் படைகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மேலும் கோரத் தாக்குதல் நடத்தவும், உள்நாட்டு யுத்தங்களை நடத்தவும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதையே நிரூபித்துள்ளது.

இப்படியான காரணங்களினால் இந்த வேலை நிறுத்தப் போராட்ட படிப்பினைகளை தொழிலாள வர்க்கம் மிகக் கவனமாக ஆய்வு செய்து அவசியமான அரசியல் முடிவுகளுக்கு வர வேண்டும்.

வேலை நிறுத்தம் தொடங்கியது எப்படி?

இந்தச் சம்பவம் ஒரு போக்குவரத்து போலீசின் ஆத்திர மூட்டலின் விளைவாக ஏற்பட்டது.

6-5-91 அன்று காலை 5-20 மணியளவில் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்ற திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் கைக்குழந்தையுடன் வண்டியை நிறுத்தச் சொல்லி ஓடிவந்த பெண்மணிக்கு மனமிரங்கி வண்டியை நிறுத்தினார் டிரைவர் கணேசன், அப்பொழுது போக்குவரத்து போலீஸ் தகாத வார்த்தைகளால் திட்ட, கண்டக்டர் வி… மரியாதையாகப் பேசுங்க என்று கேட்டும் மேலும் போலீஸ் தரக்குறைவாகப் பேசியதுடன், கண்டக்டரை பலவந்தமாக பஸ்ஸிலிருந்து இழுத்து, ஆட்டோவில் ஏற்றிச் சென்று வேலூர் … காவல் நிலையத்தில் வைத்து அடித்திருக்கின்றனர். ஏனைய பஸ் தொழிலாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து பஸ்ஸை நிறுத்தவும், போலீஸ் இன்னும் வெறி கொண்டு—கிருஷ்ண நகரில் இருக்கும் டெப்போவில் சென்று உள்ளிருந்த தொழிலாளர்களை அடித்து நொறுக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியது காலை 8-30 மணிக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்ட ஆயுத போலீஸ்படை (ARP) பணிமனை வாசலில் கோவில் கட்டுவதற்கு குவிக்கப்பட்டிருந்த செங்கற்களை வீசியும், சோடா பாட்டில்களை வீசியும் ஆத்திரமூட்டல் செய்திருக்கின்றனர். பகல் 1-30 மணி அளவில் டெப்போவினுள் உள்ள தொழிலாளர்களின் மண்டை, கை, கால்களை அடித்து, எலும்பை முறித்ததுடன், துப்பாக்கியினாலும் ஐந்தாறு ரவுண்டுகள் சுட்டு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். அத்துடன் மட்டுமில்லாது வேலூர் பஸ்டாண்டில் சாலைகளில் ஆங்காங்கு தென்பட்ட காக்கிச்சட்டை அணிந்த அனைவரையும் … அடித்து நொறுக்கியிருக்கின்றனர். இந்த அராஜகம் மேலும் மருத்துவமனையிலும் நடைபெற்றதாகத் தெரிகிறது.

கிருஷ்ணா நகர் டெப்போவினுள் லத்தியினாலும், இரும்பு பைப்புகளாலும் தாக்கிய போலீசார் தொழிலாளர்களின் கைக் கடிகாரங்கள், மோதிரங்களை, கண்டக்டர்களின் பணப்பைகளை, டெப்போவில் இருந்த கலெக்ஷன் பணத்தையும் சூறையாடியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறியுள்ளனர். காயம்பட்டு மருத்துவமனையில் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்துவிடவே, அவர்களில் பலரை காயம் குணமடையும் முன்னரே 'டிச்சார்ஜ்' செய்து அனுப்பும்படியும் நிர்பந்தித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியது என்னவென்றால் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் போலீசாருக்கு அக்கறை இல்லை. மாறாக தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ் படையினால் நசுக்குவதே ஆகும். மாவட்ட கலெக்டர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் வேலை நிறுத்தத்தை தீர்ப்பது பற்றி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கையில் போலீசார் உண்மையில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். பேச்சு வார்த்தையில் ஒரு உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்து போடுவதற்கு ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் போதே, போலீசாரை பிரதிநிதித்துவம் செய்த போலீஸ் சூப்பிரடெண்ட் ஒரு 'அவசர செய்தியை' பெறப்போகும் சாக்கில் பேச்சு வார்த்தை மேசையிலிருந்து எழுந்து சென்றார். இந்த 'அவசர செய்தி' என்னவென்பது மிகத் தெளிவானது அது ஒரு முழு அளவிலான தாக்குதலுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்குத் தயார் செய்வதாகும். தெருக்களில் தொழிலாளர்களினால் கைவிடப்பட்ட பஸ்களை தொழிலாளர்களின் எதிர்ப்பின் நடுவே போலீசார் தொடர்ந்து அகற்றிக் கொண்டிருந்தனர். வேலூர் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பின்னர் ஒரு தமிழ்நாடு தழுவிய வேலை நிறுத்தமாக வளர்ச்சி கண்டது.

இச்சம்பவம் தற்செயலான ஒன்றில்லை; ஆனால் இந்தியத் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்காக முதலாளித்துவ அரசினால் தயாரிக்கப்பட்ட எதிர்ப் புரட்சிகரமான திட்டங்களின் ஒரு பகுதியாகும். இதன் பின்னணியில் 'இருப்பது இந்திய முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொண்டுள்ள மோசமான நெருக்கடியாகும். சர்வதேசிய முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாக இந்திய முதலாளித்துவ பொருளாதாரம் உடனடி நிதி திவாலை எதிர் கொண்டுள்ளது. தற்போது வெளிநாட்டு செலாவணி இருப்பு முழுமையாக திவாலாகி உள்ள நிலையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கும் ஏகாதிபத்திய வங்கிகளின் நிதி உதவியிலேயே தங்கியுள்ளது உடனடியாக பட்ஜெட் பற்றாக் குறையையும், வட்டி செலுத்துகையையும் சமாளிப்பதற்கு டெல்லி அரசாங்கத்திற்கு உடனடியாக ரூ. 16 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. உலக வங்கியும், .எம்.எப். வும் புதிய கடன்களை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளன. அதாவது அவற்றின் நிபந்தனைகளை நிறைவேற்றும் ஒரு முழுமையான பட்ஜெட் தயார் செய்த பின்னரே புதிய கடன் வழங்கப்படும்.

ஏகாதிபத்திய வங்கியாளர்களின் நிபந்தனைகள் இதுவரையில் தொழிலாள வர்க்கம் அதன் முழு வரலாற்றிலும் போராடிப் பெற்ற அனைத்து சமூக வெற்றிகளையும் அழிப்பதாகும்.

போக்குவரத்து உள்பட அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார் துறையிடம் தாரை வார்க்க இருக்கின்றன, பெருமளவில் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவிருக்கின்றனர்; அரசாங்க உதவிகள் நிறுத்தப்பட இருக்கின்றன. அதிகளவு லாபங்களை எடுப்பதற்காக சுரண்டல் உக்கிரப்படுத்தப்படவிருக்கிறது. இதுவே பல லட்சம் தொழிலாளர்களை வேலையற்றோர் பட்டியலில் சேர்க்கும். அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் அகற்றப்படவிருக்கின்றன. ஏகாதிபத்திய மூலதனம் தடையின்றி உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படவிருக்கிறது. ஏற்கனவே ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் தமது மூலதனம் சுதந்திரமாக உள்ளே வருவதற்கு தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நாட்டுக்குள் ஏகாதிபத்திய கம்பெனிகளின் உற்பத்திப் பொருட்கள் வரையரையின்றி நுழைய அனுமதிக்கும்படி கோருகின்றன. இது இந்தியாவில் பல தொழிற்துறைகளை திவால் நிலைக்கு தள்ளும். இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான ஆலைகள் மூடப்படவும், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் தூக்கி வீசப்படவும் நிலைமைகளை உண்டு பண்ணும். எந்த முதலாளி தனது ஆலையுள் மிகக் குரூரமான நிலைமைகளையும் சுரண்டலையும் செயற்படுத்துகின்றனரோ, அவர்கள் வியாபாரத்தை தொடர்ந்து செய்ய முடியும் சமூக சேவைகளுக்கான செலவுகளும், விவசாயிகளுக்குமான மானியங்களும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் ஏகாதிபத்திய வங்கியாளர்கள் கோருகின்றனர், எந்த ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வருமாயினும் அது அனைத்து உணவுப் பொருட்களின் மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விலைகளை உயர்த்தும், முதலாளித்துவ லாப உற்பத்தி அமைப்பை பாதுகாக்க நகர்ப்புறங்களில் பரந்தளவில் வறுமையையும், நாட்டுப்புறத்தில் பஞ்ச நிலைமையையும் ஏற்படுத்த திட்டமிடும்.

இந்த தேர்தலில் எந்த அரசாங்கம் வந்தாலும் இந்தத் திட்டத்தையே அமல்படுத்த ஆளும் வர்க்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறாக காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை அமல்படுத்தும் போது எதிர்கொள்ளும் பிரதானமான தடையாக இருப்பது அவற்றுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பாகும். இந்தத் தாக்குதல்களை முன்னர் அமல்படுத்திய ஒவ்வொரு தடவையும் தொழிலாள வர்க்கத்தின் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் தோன்றின. சென்னையில் ஸ்டாண்டர்ட் மோட்டார்சின் போராட்டம் இதில் முக்கியமானதாகும். அதேபோல் இந்தியா முழுவதும் பரந்தளவில் வளர்ச்சி அடையும் இதர தொழிலாள வர்க்க போராட்டங்களும் இத்தகையதானதாகும்.

சென்னையில் கதவடைப்பு செய்யப்பட்ட பி&சி தொழிலாளர்களுக்கு ஆதரவான பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஸ்டாலினிச சி..டி.யு. தலைமை காட்டிக் கொடுத்தது. பி & சி ஆலையில் சி..டி.யு. வின் W. R. வரதராஜன் தலைமை வகித்த போதிலும், அவர் சார்ந்த சி..டி.யு. வே பஸ் தொழிலாளர்களது வேலைநிறுத்த ஆதரவைக் காட்டிக்கொடுத்தது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய தொன்றாகும். உண்மையில் பெரம்பூர், அயனாவரம், மாதவரம் டெப்போவில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு செய்யப்பட்டது. இவ்வாறு சி..டி.யு. தலைமையே காட்டிக் கொடுத்து விட்டு, 'ரம்ஜான் பண்டிகையையும்' மாணவர்களுக்கான தேர்வையும் காரணம் காட்டி தமது காட்டிக் கொடுப்பிற்கு சப்பைக்கட்டு கட்டினர். இவை பற்றியெல்லாம் முன்கூட்டியே தெரியாதவர்கள் போல் தமது காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தினர்.

இந்திய முதலாளித்துவ வர்க்கமும் அதன் பின்னணியிலுள்ள ஏகாதிபத்தியவாதிகளும், இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்ட இயக்கங்களை நசுக்குவது சம்பந்தமாக சமமான அக்கறை காட்டுகின்றனர்: முழு ஏகாதிபத்திய அமைப்புமே, அதன் வரலாற்றில் ஆழமான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. பிரதான ஏகாதிபத்தியவாதிகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர். ஒருவருக்கு எதிராக ஒருவர் வர்த்தக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வேறு வழியில்லை; இந்தியா போன்ற நாடுகளை மறுபடி காலனி நாடுகளாக முழுமையாக அவர்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர சதி செய்கின்றன, தொழிலாள வர்க்கத்திற்கு ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராக ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய முதலாளித்துவ வர்க்கமும் கூட்டாக சூழ்ச்சி செய்கின்றன.

இப்படியான சூழ்ச்சித் திட்டங்களை அமல்படுத்தவே முதலாளித்துவ வர்க்கம் உள்நாட்டு யுத்தத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது. இதையே பஞ்சாபிலும், காஷ்மீரிலும், வடகிழக்கு பகுதிகளிலும் முக்கிய குறிக்கோளாக செய்து வருகின்றது. தமிழ் நாட்டில் ஈழப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் இதே குறிக்கோளையே கொண்டுள்ளன, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில்.

ஆளும் வர்க்கம் இரண்டு முக்கிய திட்டங்களில் செயற்படுகின்றது என்று சிறுபான்மை தேசிய இனங்களான பஞ்சாபி, காஷ்மீரி அஸாம், தமிழ் ஈழ தேசிய இனங்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தங்களை உக்கிரப்படுத்தி பின்னர் இந்த யுத்தங்களையே சாக்காக பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான யுத்தத்தை கட்டவிழ்த்து விடுவதாகும்.

இரண்டாவதாக பாரதீய ஜனதாக் கட்சி போன்ற இந்துமத வெறி அமைப்புகளின் உதவியுடன் பாசிச ஆயுத குண்டர் பட்டாளங்களை பெரும் முதலாளிகளின் உதவியுடன் உருவாக்கி, தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஆத்திர மூட்டல்களை ஏற்படுத்துவதாகும். இதன் மூலமாக போலீஸ் அரசு சட்டங்களை திணிப்பதற்குமாகும்.

இப்படியான கொள்கைகளை அமுல்படுத்த முதலாளித்துவ அரசு தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளில் சி.பி.. (எம்). சி.பி.. தலைமைகளில் நேரடியாக தங்கியுள்ளது; தொழிலாள வர்க்க எதிர்ப்பை காட்டிக் கொடுக்கவும், தொழிலாள வர்க்கத்தை மத்திய தர வர்க்கம், ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் அவர்களை சோர்வடையச் செய்து, தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கான நிலைமையை உண்டு பண்ணவுமே ஆகும்.

இப்படியான தயாரிப்புகளே போலீஸ் தாக்குதலுக்கு வழி வகுத்ததுடன் கவர்னர், அரசாங்க சட்ட அதிகாரிகளும் மற்றவர்களும் உள்ளடங்கலாக முதலாளித்துவ அரசு போலீஸ் கிரிமினல்களை பாதுகாக்க வைத்தது. போலீசும், இராணுவமும் வேறு யாருமல்ல ஆயுதம் தரித்த மனிதர்கள், இவர்கள் முதலாளித்துவ அரசை பாதுகாக்க சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிராக பலாத்காரத்தை பிரயோகிப்பவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த தாக்குதல்கள் மிக நவீன செய்தி தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி உயர் அதிகாரிகளினால் வரிசை கிரமமாக திட்டமிட்டு நடத்தப்பட்டன: நிராயுதபாணிகளான தொழிலாளர்கள் மேல் துப்பாக்கிச் சூடுகள் இராணுவ பயிற்சிகள் போன்று செய்யப்பட்டன. போலீஸ் அதிகாரிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் கையாண்ட முறைகள் இப்போது வளர்ச்சியடையும் தொழிலாளர் வர்க்க போராட்டங்களை நசுக்குவதற்கான அவர்களது தந்திரோபாயங்களை கச்சிதமாக செய்வதற்கான ஒத்திகைகளே. தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளுடன் அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தைகள் வெறும் கண் துடைப்பே. அவை நேரத்தை எடுப்பதற்கான அவர்களின் யுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

தலைவர்களின் காட்டிக்கொடுப்பு

தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களுக்கு எதிராக துரோக உடன்பாட்டை செய்து போலீஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக தொழிலாளர்கள் தம்மை தற்காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விடாது காட்டிக் கொடுத்துள்ளனர். சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகளின் முயற்சிகள் தாக்குதலுக்குள்ளான தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக தாக்குதல் தொடுத்த போலீசாரை எவ்வாறாயினும் அதற்கான தண்டனையிலிருந்து தப்ப வைத்து காப்பாற்றுவதே ஆகும்.

அரசாங்கம் நியமித்த 'விசாரணைக் கமிஷனை' சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் ஏற்றுக் கொண்டதன் மூலம் இத்தலைமைகள் போலீசாரை பாதுகாக்க முன் வந்துள்ளனர். முதலாளித்துவ பிரதிநிதிகளைக் கொண்ட இந்த கமிஷனில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று தொழிலாளர்களை கேட்கிறோம். இது குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியாவதை போன்றதாகும். இதே அரசாங்கத்துக்கு போலீசும், இராணுவமும் தேவைப்படுகிறது தொழிலாளர்களை தாக்குவதற்காக. எனவே இங்கு அவசியமானது போலீசின் தாக்குதலுக்கும் படுகொலைக்கும் எதிராக விசாரணை செய்ய தொழிற் சங்கங்களின் சுதந்திரமான விசாரணைக் கமிஷனை ஏற்படுத்துவதாகும். இந்த படுகொலை தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் தமது சொந்த விசாரணையை நடத்த வேண்டும்.

இவ்வாறான விசாரணை தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் அனைது சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தும். அத்துடன் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும். அது அரசின் ஆயுதப் படைகளின் எதிர்புரட்சிகர திட்டங்களை வெளிப்படுத்தும். அது இந்த முதலாளித்துவ அரசின் ஆயுதப் படைகள் உடனடியாக கலைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டும். மேலும் தொழிலாளர்கள் தமது சொந்த பாதுகாப்பு அணிகளை அமைக்க வேண்டிய தேவையையும் உணர்த்தும்.

அரசு பற்றிய மார்க்சிய தத்துவத்தை சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் நிராகரிக்கின்றனர். முதலாளித்துவ அரசை நிர்மூலமாக்கி ஒரு தொழிலாளர் அரசை உருவாக்கும் வேலைத்திட்டம் அவர்களிடம் இல்லை. அதனால் தான் அவர்கள் முதலாளித்துவ அரசு பஞ்சாபிலும், காஷ்மீரிலும், அஸாமிலும் நடத்தும் உள்நாட்டு யுத்தங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இவ்வாறாக உள்நாட்டு யுத்தங்களுக்கு சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் வழங்கும் ஆதரவு தான் தொழிலாளர்கள் மேல் பயங்கரமான தாக்குதல் தொடுப்பதற்கு வேலூர் போலீசாருக்கும் உற்சாகம் அளித்தது. வேலூர் போக்குவரத்து தொழிலாளர்களை இந்த துரோகத் தலைமைகள் காட்டிக் கொடுத்தது. இப்படி தாக்குதல்களை போலீசார் தொடர அவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. வேலை நிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்ட மறுநாள் திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் தாக்கப்பட்டதன் மூலம் இது மேலும் நிரூபணமாகி உள்ளது.

தொழிலாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பஞ்சாபிலும், காஷ்மீரிலும், அஸாமிலும், தமிழ் ஈழத்திலும் உள்நாட்டு யுத்தங்களை நடத்தும் இதே ஆயுதப் படைகள் தான் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதலை தொடுத்துள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் அடிப்படையில் சிபிஐ (எம்), சிபிஐ தலைவர்களின் தேசியவாத, பேரினவாத நிலைப்பாடுகளை தொழிலாள வர்க்கம் அடியோடு நிராகரிக்க வேண்டும். முதலாளித்துவ அரசினால் நடத்தப்படும் யுத்தங்கள், நமது யுத்தங்கள் அல்ல என்று தொழிலாளர்கள் கூற வேண்டும். ஒரு பைசாவோ, ஒரு ஆளையோ இந்த யுத்தங்களுக்கு வழங்கக் கூடாது. பஞ்சாப், காஷ்மீர், அஸாமிலிருந்து இராணுவங்கள் வாபஸ் வாங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோர வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க இதர தொழிலாளர்களையும் ஐக்கியப் படுத்துவதற்கு பதிலாக இத்துரோகத் தலைமைகள் போலீசாருடனும், அரசாங்கத்துடனும் ஐக்கியப்பட்டு நின்று "பொது மக்களின் வசதி"யை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நீடிக்காது இடை நிறுத்த வேண்டும் என்று அழைப்புவிடுத்தனர். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவையும், அனுதாபத்தையும் காட்டினார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நீடிக்கப்பட்டிருக்குமாயின் அதற்கு பொதுமக்களும் அவர்களுது முழுமையான ஆதரவை தெரிவித்திருப்பார்கள். ஏனெனில் போக்குவரத்து தொழிலாளர்களைப் போலவே இதர தொழிலாள வர்க்கப் பிரிவினரும், ஒடுக்கப்படும் மக்களும் இளைஞர்களும் இதே போன்ற தாக்குதல்களை எதிர் கொள்ளுகின்றனர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இதற்கு தொழிலாளர்கள் கொடுக்கக்கூடிய ஒரே பதில் முதலாளித்துவ அரசை தூக்கிவீசி சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்தும் ஒரு தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கம் அமைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்டுவதே, இந்த வர்க்கப் போராட்டத்தில் முதலாளித்துவ அரசு தூக்கி வீசப்பட வேண்டும். அழித்தொழிக்கப்பட வேண்டும். அந்த ஒடுக்குமுறை அரசை தொழிலாள வர்க்கம் எந்த வழியிலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. எதிர்ப்புரட்சிகர தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், தமது உயிர்களையும் அமைப்புகளையும் பாதுகாக்க பாதுகாப்பு அணிகளை உருவாக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடர விடாது தடுக்க ஒரு காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்ய வேண்டும், சரியான புரட்சிகர தலைமையும், வேலைத்திட்டமும் வழங்கப்ப்படுமாயின் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கான நிலைமைகளை உண்டு பண்ணும்.

அது மேற்கூறிய வேலைத்திட்டங்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகமும், தன் தொழிற்துறை பிரிவான டிராட்ஸ்கிசத் தொழிலாளர் அணியுமே. காட்டிக் கொடுப்புகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களினுள் மாற்று புரட்சித் தலைமையைக் கட்ட போராடி வரும் டிராட்ஸ்கிசத் தொழிலாளர் அணியில் சேர்ந்து சோசலிசக் கொள்கைகளுக்கான தொழிலாள வர்க்க ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க வருமாறு அனைத்து வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும் அழைக்கிறோம். சோசலிசத் தொழிலாளர் கழகமும், டிராட்ஸ்கிச தொழிலாளர் அணியும் பின்வரும் கோரிக்கைகளுக்கு போராட முன்வரும்படி தொழிலாளர்களை அழைக்கிறது.

ஃ கண் துடைப்பு அரசாங்க விசாரணைக் கமிஷன்களில் நம்பிக்கை வைக்காதே!

ஃ தொழிற்சங்கங்களின் சொந்த 'விசாரணை கமிஷனை' ஏற்படுத்து!

ஃ கொலைகாரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கு!

ஃ போலீசார் உண்டு பண்ணிய நாசத்துக்காக முழு நஷ்ட ஈடு வழங்கு!

ஃ வேலைநிறுத்த நாட்களுக்கு முழு சம்பளம் வழங்கு!

ஃ காலவரையற்ற பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடு!

ஃ போராட்டத்திலுள்ள அனைத்து தொழிலாள வர்க்க பிரிவுகளையும் ஐக்கியப்படுத்து!

ஃ போலீஸ் இராணுவங்களை கலை!

ஃ தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு அணிகளை கட்டு!

ஃ பஞ்சாப், காஷ்மீர், அஸாமிலிருந்து உடனடியாக இராணுவங்களை வாபஸ் வாங்கு!

ஃ சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவை துண்டித்து சுதந்திரமாக சோசலிசக் கொள்கைகளை நிறைவேற்றும் தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடும்படி நிர்பந்தி!

மேற்கூறிய கோரிக்கைகளுக்காகவும், இதர தொழிலாளர் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைப்புவிடு!