"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, May 26, 2016

இந்திய மக்கள் முன்னணிக்கு இடமளிக்காதே!

தொழிலாளர் பாதை

20 நவம்பர் 1987 (இதழ் 376)

இந்திய மக்கள் முன்னணிக்கு இடமளிக்காதே!

சிபிஐ (எம்) - சிபிஐ ஸ்டாலினிச தலைமைகள் முதலாளித்துவ வர்க்க எதிர்யுடன் மக்கள் முன்னணி அமைப்பதை நிராகரி- இந்த தலைமைகள் ஒரு தொழிலாளர்-விவசாய அரசாங்கத்திற்கு சுயாதீனமாக போராட கோரு!

இந்திய சோசலிச தொழிலாளர் கழகத்தின் அறிக்கை


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் (சீ.பீ.ஐ) கட்சிகளின் துரோக ஸ்டாலினிஸ்ட் தலைமைகள் 'காங்கிரசுக்கு பதிலீடாக ஒரு தேசிய அரசாங்கம்' அமைக்க நாடு தழுவிய தீவிர பிரச்சாரத்தினை தொடுக்கப் போவதாக சீ.பீ.ஐ. (எம்) பொதுச் செயலாளர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் டெல்லியில் அறிவித்துள்ளார்.

இந்த மக்கள் முன்னணி அரசியல்—முதலாளித்துவ வர்க்க எதிரியுடன் ஒரு வர்க்க கூட்டு அரசாங்கம் அமைக்கும் கொள்கை—சிலியிலும், இந்தோனேசியாவிலும் அந்நாடுகளின் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடைபிடிக்கப்பட்டது.

இது 1965 ல் இந்தோனேசியாவிலும், 1973 ல் சில்லியிலும் இலட்சோப லட்சம் தொழிற் சங்கவாதிகள், தொழிலாளர்கள், கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளர் வர்க்க கட்சிகள், இயக்கங்களின் ஆதரவாளர்களின் இரத்தம் தோய்ந்த படுகொலைகளுக்கும், எதிர்ப் புரட்சியின் வெற்றிக்கும் இட்டுச் சென்றது.

செப்டம்பர் (1987) நடுப்பகுதியில் இடதுசாரிக் கட்சிகள் எனப்படும் சீ.பீ.ஐ. சீ.பீ.எம் கட்சிகளின் ஸ்டாலினிச தலைமைகளும், புரட்சிகர சோசலிசக் கட்சி, போவாட் புளக்கும் தொடுக்கவுள்ள நாடு தழுவிய பிரச்சார இயக்கம் ஒரிசா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வரட்சியால் இடம் பெறும் நூற்றுக் கணக்கான பட்டினிச் சாவுகளை நிறுத்திவிடாது.

இது, இக்கொடூரக் காட்சிகள் ஏனைய மாநிலங்களுக்குப் பரவுவதைத் தடுக்கவோ அல்லது அடுத்த சில மாதங்களில் இந்த பலி எண்ணிக்கை நூறுகளிலிருந்து ஆயிரங்களாக அதிகரிப்பதை நிறுத்தவோ போவதில்லை.

அவ்வாறே இந்த ஸ்டாலினிச தலைமைகள் தொடுக்க உத்தேசித்துள்ள பிரச்சார இயக்கமோ அல்லது 'தேசிய அரசாங்கமோ' வரட்சியின் பிடியில் அகப்பட்டு உள்ள நாட்டின் 25 மாநிலங்களுள் 21 மாநிலங்களின் நெல் வயல்களுக்குப் பசளையிடும் கால்நடைகளின் மரண எண்ணிக்கையை நிச்சயம் நிறுத்தப் போவதில்லை.

அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் காய்ந்து சுருக்கோடிய முகங்களோடும், வெறும் வயிறுகளோடும் குடிதண்ணீர் இல்லாமலும் வான் பார்க்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஏதும் வழி பிறக்குமா? ஒரு போதும் இல்லை.

மார்ச் (1987) மாதத்தில் இருந்து மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பண்டங்களின் விலைகள் இரண்டு, மூன்று, நான்கு மடங்காக அதிகரிக்கத் தொடங்கி விட்டன.

இன்று வரை தமது பணத்தினை நிறுவனப் பங்குகளிலும் சொத்து ஊகங்களிலும் முதலீடு செய்து வந்த 'பண மூட்டைகளின்' கண்கள் இலாப வீதத்தை பெருக்க பிணம் தின்னும் கழுகுகளைப் போல் நாட்டுப் புற ஆடுகள், மாடுகளிலிருந்து அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் பக்கம் திரும்பி உள்ளது.

மத்திய அரசாங்கம் தனது ஐந்தாண்டு திட்டங்களுக்கு வருடாந்தரம் 200,00 கோடி ரூபாக்களை ஒதுக்கீடு செய்கையில் கறுப்பு பணத்தின் திரட்சி வருடாந்தம் 40,000 கோடி ரூபாக்களாக உயர்ந்தது என மாஜி. நிதி அமைச்சர் வி.பி. சிங் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் அன்றி சிங் மேலும் கூறியதாவது: 'ஆளும் கட்சிக்கும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்து வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு முரணானது. எனினும் அரசாங்கம் கருணை காட்டும் கொள்கையை கடைப்பிடிக்கிறது. அத்தோடு ஒரு வகையான சமரசப் போக்கும் நிலவி வருகின்றது.”

பெரும் முதலாளித்துவப் பத்திரிகைகளால் 'காந்தி அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமாகப்ப ஓராடும் ஒரு மனிதனாக' வரவேற்கப்பட்டு முன்னணிக்கு கொணரப்பட்டுள்ள இந்த வீ.பி. சிங், சீ.பீ.ஐ. (மார்க்சிஸ்ட்) செயலாளரால் பின்வருமாறு புகழப்பட்டார்:

“மாஜி நிதி அமைச்சர், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை கிளர்ச்சி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஊழல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க அவர் விரும்புகிறார். உட்கட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கட்சியை … லீக், சிவசேனை, பாரதீய ஜனதா போன்ற இனவாத கட்சிகளுடனான காங்கிரஸ் கட்சியின் உறவுகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

“அவர் மதச் சார்பற்ற ஒரு அரசியல் சட்டத்தைக் கோருகின்றார். அவர் கைத்தொழில்களின் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு பற்றல் போன்ற சில தீவிரவாத நடவடிக்கைகளை விரும்புகின்றனர். அத்தோடு அவர் எமது மக்களின் வாழ்வில் பயங்கர உருவெடுத்துள்ள வரட்சி பிரச்சினை பற்றியும் பேசுகிறார்.

“இந்த விவகாரங்கள் அனைத்தும் அவரால் எழுப்பப்பட்டு உள்ளன. இந்த விவகாரங்களில் காந்தி அரசாங்கத்தை எதிர்த்தாக வேண்டும் எதிர்க்கவும் முடியும். இந்தப் போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அன்றி எவ்விதத்திலும் ஒரு கோஷ்டி போராட்டம் அன்று.”

('காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவோம்'—துண்டுப் பிரசுரம் — பக்கம் — 13-14)

இறுதியில் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து கழன்றவர்களும் — வீ.பி. சிங் போன்றவர்கள் — ஒரு பொது அரசியல் மேடையை அமைத்து உள்ளனர். சோசலிசப் புரட்சியின் உயிராபத்து எதிரிகளான முதலாளி வர்க்கத்தினராலும் அவர்களது பத்திரிகைகளாலும், ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாலும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்ட வீ.பி. சிங்கின் 'காந்தி எதிர்ப்பு' கண்டனங்களின் உள்ளடக்கத்தினை எந்தவொரு வர்க்க நனவுள்ள தொழிலாளியும் இனங்கண்டு கொள்வான்.

விவசாய மாநிலமான ஹரியானாவில் சமீபத்தில் இடம் பெற்ற தேர்தலில் நாட்டின் ஜனத் தொகையில் பெரும்பான்மையினராக விளங்கும் ஏழை விவசாயிகள், முதலாளித்துவ காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீதான தமது வெறுப்பை வெளிக் காட்டினர்.

தேவிலால் தலைமையிலான முதலாளித்துவ லோக்டால் கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியை ஏறக்குறைய துடைத்துக் கட்டிய … — ஏகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஏழை விவசாயிகளின் 2.27 பில்லியன் கடன்களை ரத்துச் செய்வோம் என்பதே லோக்டால் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும் என்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியின் பல தசாப்த கால ஆட்சி, வேலையற்றோரின் எண்ணிக்கையை 10 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 42 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு, கீழே வாழ்ந்து கொண்டு உள்ளனர். 120,000 கைத்தொழில்கள் 'நோய் அலகு' களாக பிரகடனம் செய்யப்பட்டு மூடப்பட்டு உள்ளன.

சுமைகள்

நாட்டுப் புறங்களில் விசாயத் தொழிலாளர்கள் நிலச்சுவாந்தர்களால் முரட்டுத்தனமாக சுரண்டப்பட்ட அடகு வகைகப்பட்ட தொழிலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். தமது உற்பத்தி பொருட்களுக்கு நியாய விலையைப் பெற்றுக் கொள்ள முடியாத ஏழை விவசாயி, தமது தலைக்கு மேல் பிரமாண்டமான வங்கிக் கடன்சுமைகள் தொங்கிய வண்ணம் கொள்வனவுச் சுமையையும் இழந்து உள்ளனர்.

செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இந்தத் தாக்குதல்கள் அனைத்துக்கும் எதிராக இடம் பெற்ற நாடு தழுவிய எதிர்ப்பியக்கத்தில் இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் பங்கு கொண்டனர்.

இந்திய முதலாளித்துவ அரசாங்கம் ஏகாதிபத்திய வங்கிகளிடம் இருந்து 285 பில்லியன் ரூபாக்களை கடனாக பெற்று உள்ளன. இந்தக் கடன்களுக்கான வருடாந்த வட்டிக் கொடுப்பனவு ரூபா. 6.7 பில்லியன்கள். இது நாட்டின் தேசிய வருமானத்தில் 20 சதவீதமாகும். 1987-88 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை 8.8 கோடி ரூபாக்கள் ஆகும்.

இந்திய முதலாளி வர்க்கம் சார்ந்துள்ள உலக ஏகாதிபத்திய வங்கிகள் பேரளவிலான நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. பல லத்தீன் அமெரிக்க நாடுகளுள் பிரேசிலும் மெக்சிக்கோவும் மட்டும் 20,000 கோடி டாலர்கள் கடன் பெற்றுள்ளன. பிரேசில் இன்னுமோர் 4 வருடங்களுக்கு வட்டிக் கொடுப்பனவை இடை நிறுத்தி உள்ளது.

சிக்கன நடவடிக்கைகளை

அநேக லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது தேசிய வருமானத்தில் பெரும் வீதத்தை வட்டி கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு செய்கின்றன. இதைத் தொடர்ந்து இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கின்றனர்.

உலகச் சந்தையில் தனது பிடியை இழந்ததன் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜப்பானிய, ஐரோப்பிய, ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான கடும் வர்த்தக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஜப்பானுடனான அமெரிக்க வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறை 5,070 கோடி டாலர்களை எட்டி உள்ளது. சமஷ்டி வருவு செலவுத் திட்டம் கூட வெளிநாட்டுக் கடன்காரர்களாலேயே நிதீயீட்டம் செய்யப்படுகின்றது.

அமெரிக்கா இன்று பெரும் கடனாளி நாடாகி உள்ளது. அமெரிக்கா நிகரகுவா, ஈரானுக்கு எதிரான ஆத்திரமூட்டும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளதும் வரலாற்று உரித்தான அரசியல், பொருளதார நெருக்கடியின் நல்ல வெளிப்பாடாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் இந்தியாவிலும் வெளிப்பட்டு உள்ளன. இந்திய முதலாளிகளின் உற்பத்திப் பண்டங்களுக்கு ஏனைய முதலாளித்துவ போட்டியாளர்களுடன் போட்டியிடும் அளவுக்கு உலகச் சந்தையில் கேள்வி இல்லை. அவ்வாறே உள்ளூர் சந்தையில் பெரும்பான்மை மக்களின் கொள்வனவுச் சக்தியின் வீழ்ச்சியால் அவை வர்த்தக நிலையங்களில் குவிந்து போய் கிடக்கின்றன. இதன் பிரதி பலனாக மேலும் ஆயிரக் கணக்கான பக்டரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வட்டிக் கொடுப்பனவுகளை திரட்டும் பொருட்டு ஏகாதிபத்திய வங்கியாளர்கள் தொழிலாளர்களை மிலேச்சமான முறையில் சுரண்டும் கடும் சிக்கன நடவடிக்கைகளை இந்திய அரசாங்கத்தின் ஊடாக அமுல் செய்து வருகின்றனர். இந்த தாக்குதல்கள் நகரங்களிலும் அத்தோடு நாட்டுப் புறங்களிலும் வர்க்கப் போராட்டத்தை உக்கிரம் அடையச் செய்துள்ளது.

இந்திய முதலாளி வர்க்கத்தின் முக்கிய கட்சியான ஆளும் காங்கிரஸ் கட்சியின் கீழும் முதலாளித்துவ அரசின் கீழும் இனவாதப் படுகொலைகள் பன்மடங்கு அதிகரித்து உள்ளன. இது மூரூட்டில் முஸ்லீம் மக்களுக்கும் பஞ்சாபில் சீக் மக்களுக்கும் எதிரான ஹிந்து இனவாதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இவற்றின் பின்னணியில் பொலிஸ், இராணுவம், காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ். ஆயுதக் குண்டர்கள் இருந்து வருகின்றனர் என்பது நன்கு பிரசித்தம். இந்தச் சம்பவங்களால் உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் வெறுப்பினை அரசாங்கம் ஈட்டிக் கொண்டுள்ளது.

நூற்றுக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொண்டுள்ள வரட்சி முதலாளி வர்க்கத்தின் உயிராபத்து நெருக்கடியைத் ஆழமாக்கியுள்ளது. இந்நிலைமைகளின் கீழ் வீ.பி.சிங் இடதுசாரிக் கட்சிகளை (ஸ்டாலினிஸ்டுகள்) தனது இயற்கையான சகாக்களாகப் பிரகடனம் செய்தார். ஆளும் முதலாளி வர்க்கம் தொடர்பாக நகர்புற, நாட்டுப்புற பல இலட்சம் உழைக்கும் ஜனத்தொகை கொண்டுள்ள வெறுப்பு, விசனங்களோடு தன்னை 'இனங்காட்டிக் கொள்ளும்' சுலோகங்களை எழுப்புகின்றார்.

ஜனதா கட்சியின் ஒரு தலைவரான பிஜூ பட்நாய்க் கூறியது போன்று "பட்டினியால் வாடும் மக்களை கிளர்ந்து எழுந்து, ஆட்சியாளர்களை பலாத்காரமாக தூக்கி எறியும் படி" அழைப்பு விடுக்கும் வீ.பி. சிங் கின் "போராட்டம்", அத்தகைய ஒரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதே, உயிர் நீத்துக் கொண்டுள்ள முதலாளித்துவ அமைப்பினைக் காக்கும் பொருட்டு பாராளுமன்றப் போராட்டத்தை ஒரு மாற்று "தீர்வாக" முன் வைப்பதே சிங்கின் நோக்கம். ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இதன்படி செயல்பட்டு வருகின்றனர்.

மாஜி. ஜனாதிபதி ஷெயில் சிங்குக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையிலான தகராறில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உரத்த குரலில் கூறியதாவது, “ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் அரசாங்கம் ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்படுவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை" அத்தோடு "நாம் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பேணுவோம்" என்றனர்.

ஆனால் இந்நிலைப்பாடு, வர்க்கப் போராட்டத்தின் சூட்டினால் விடவதற்குள் மாற்றும் அடைந்தது. தபால் தொழிலாளர்களின் முழு அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பல்கலைக்கழ, கல்லூரி ஆசிரியர்களின் ஒரு மாத கால வேலை நிறுத்தம் வரை காட்டிக் கொடுத்த இந்த ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் அயோக்கியர்கள், இன்று இடைத் தவணை தேர்தலை கோரி வருகின்றனர்!

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வீ.பி. சிங்குடன் இணையக் காரணம், ஊழல் வகுப்புவாதம், பொருளாதார கொள்கைகள் ஆகியன மனித ஜீவன்களில் நல்லதும் கெட்டதுமான ஒழுக்கங்களில் இருந்து தோன்றுவன போல் காட்டுவதே! இந்த ஒழுக்கவியலாளர்களைப் பற்றி ருஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:

“நான்காம் அகிலம் சர்வ ரோக நிவாரணிகளை தேடுவதும் இல்லை. கண்டு பிடிப்பதும் இல்லை. அது முற்றிலும் மார்க்சிசத்தின் அடிப்படையிலேயே தனது நிலைப்பாட்டினை கொண்டுள்ளது. ஒரே புரட்சிகரக் கோட்பாடு என்ற முறையில் அது ஒருவர் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவும், தோல்விகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டு பிடிக்கவும், வெற்றிக்கு நனவாகத் தயார் செய்யவும் உதவுகின்றது.

"நான்காம் அகிலம், ஆட்சியை கைப்பற்றுவது எப்படி என்பதை பாட்டாளி வர்க்கத்துக்கு முதலில் காட்டிய போல்ஷிவிசத்தின் பாரம்பரியங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது.

“நான்காம் அகிலம், அரை வைத்தியர்கள் போலிகள், வேண்டத் தகாத ஒழுக்க ஆசான்களை துடைத்துக் கட்டுகின்றது. சுரண்டலை அடிப்படையாகக் கொட ஒரு சமூகத்தில் சமூகப் புரட்சியின் ஒழுக்கமே உயர்ந்தது.

“தொழிலாளர்களின் வர்க்க நனவை உயர்த்துகின்றதும், தமது சொந்த சக்திகளில் நம்பிக்கை வைக்கின்றதும், போராட்டத்தில் சய தியாகத்துக்கு ஆயத்தமானதுமான சகல விதிமுறைகளும் சிறப்பானவை. தமது ஒடுக்குவோரின் முன்னிலையில் ஒடுக்கப்படுவோரிடையே அச்சம் அடிபணிவுகளை திணிக்கும் விதிமுறைகளை அனுமதிக்க முடியாது. இவை எதிர்ப்பு, வெறுப்புகளை நசுக்குகின்றன. அல்லது வெகுஜனங்களின் விருப்புக்குப் பதிலாக தலைவர்களின் விருப்பினை பதிலீடு செய்கின்றன.

“எனவே தான் மார்க்சிசத்தை வேசையாட்டத்துக்கு பயன்படனுத்தும் சமூக ஜனநாயகம், போல்ஷிவிசத்தின் எதிரிடையான ஸ்டாலினிசம் இரண்டும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும், அதன் ஒழுக்கத்திற்கும் உயிராபத்து மிக்க எதிரிகளாகும்.”

('இடைமருவு வேலைத்திட்டம்'—லேபர் பிரசுரம் —39-39)

4 லட்சம் அங்கத்தவர்களையும், 2 கோடி ஆதரவாளர்களையும் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரும் கட்சி என ஜம்பம் அடித்த படி சீ.பீ.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் செயலாளர் நம்பூதிரிபாத் கூறியதாவது: “மதச்சார்பற்ற ஏனைய எதிர்கட்சிகளுடன் உடன்பாடு கொண்டிருக்க வேண்டி உள்ளதால் நாம் சுயாதீனமாக செல்ல விரும்பவில்லை. எமது நோக்கம் ஒரு பொது இயக்கத்தை விருத்தி செய்வதே. நாம் அந்த இலக்கில் சென்று கொண்டிருக்கிறோம்.” ('ஹிந்து'—செப்டம்பர் 10)

தனியார் சொத்தை ஒழிக்கத் தனது கட்சிக்கு வேலைத்திட்டம் கிடையாது என்பதைக் கூற முதுகெலும்பு இல்லாத நம்பூதிரிபாத் ஒரு புதிய சக்தி (!) நாட்டில் உருவெடுத்து வருவதாகவும், அச்சக்திகள் ஐக்கியப் படுத்தப்பட வேண்டும், ஐக்கியப் படுத்த முடியும் என்று உள்ளார். “இந்தப் புதிய சக்திகளில் ஒன்று இடதுசாரி கட்சிகள் (!) இரண்டாவதாக காங்கிரஸ் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி செய்யும் காங்கிரஸ் காரர்களுக்கும், இனவாத சக்திகளுக்கும் (!!) இடையேயான தொடர்புகள் மூன்றாவதாக பீ.ஜே.பீ. (பாரதீய ஜனதா கட்சி) முஸ்லீம் லீக் போன்ற இனவாதச் சக்திகளுடனான சந்தர்ப்பவாதக் கூட்டுக்களுடன் எதிர்க்கட்சிகளிலுள்ள இடதுசாரி அல்லாத சக்திகள் மனமுறிவு கண்டுள்ளன". (காங்கிரஸ் ஆட்சியை நீக்குவோம்'—பக்கம் 30)

முதலாளித்துவக் கட்சிகளுடனான ஸ்டாலினிச மக்கள் முன்னணிக் கோலத்தை இங்கு நீங்கள் காண்கிறீர்கள். இந்த ஸ்டாலினிச வேடதாரிகள் தாம் 'காங்கரிஸ் அரசாங்கம் கடைபிடிக்கும் முதலாளித்துவ அபிவிருத்தி பாதையை அடிப்படையில் எதிர்ப்பதாகவும்'! முழங்குகின்றன்றர். (பீபிள்ஸ் டெமோகிரசி—செப்டம்பர் — 13) ஆனால் பாராளுமன்ற விதிமுறைகளினூடாக எப்படி? முதலாளித்துவக் கட்சிகளுடான கூட்டினாலா?

இந்தியா உட்பட அனைத்துலக ரீதியில் இந்த ஸ்டாலினிச கட்சிகள் கொலைகாரத் தனமான மக்கள் முன்னணி அரசியலையும், 'சோசலிசத்துக்கான பாராளுமன்ற பாதையையும்' கடைப்பிடிக்கின்றன. அநேக நாடுகளில் இது இலட்சோப லட்சம் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க வழி வகுத்தது. சில்லி கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்புரட்சி நிலைப்பாடு காரணமாக 1973 செப்டம்பரில் சீ.ஐ.ஏ. ஆதரவு இராணுவச் சதியினால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

அலன்டேயின் சீர்திருத்தவாதக் கட்சியுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, சீ.ஐ.ஏ யினால் பயிற்றப்பட்ட சில்லி இராணுவத்தினரை 'சீருடையில் உள்ள மக்கள்' என வருணிக்கும் அளவுக்கு சென்றது. பாசிச சதியினால் அவர்களின் மக்கள் முன்னணி அரசாங்கம் வீழ்த்தப்படுவதற்கு சிறிது காலத்துக்கு முன்னதாக சில்லி கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவரான பஞ்சாரோ இந்த ஸ்டாலினிச போக்கினைப் பற்றி கூறியதாவது:

“அதிதீவிர இடதுசாரி போக்குகள் சோசலிசத்தை உடனடியாக 'அறிமுகம்' செய்யுமாறு கூக்குரல் போடுகின்றனர். எவ்வாறு எனினும் தொழிலாள வர்க்கம் பூரண அதிகாரத்தை படிப்படியாக தேடிக் கொள்ளும் என நாம் நம்புகிறோம். அரச இயந்திரத்தினை எமது கட்டுப்பாட்டுக்குள் கொணரும் நடவடிக்கையாக நாம் இதனை புரட்சியின் மேலாய அபிவிருத்தியின் நலன்களாக பரிணாமம் செய்வோம்.

ஆனால் சில்லியின் அரச இயந்திரம் இந்த போலி தீர்க்கதரிசிகளையும் அரசியல் சூழல்நிலைகளையும் எங்ஙனம் உருமாற்றியது என்பதை சகலரும் அறிவர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் பூண்ட சோசலிச தொழிலாளர் கழகம், இந்தியாவில் மற்றுமோர் சில்லியை தயார் செய்யும் ஸ்டாலினிஸ்டுகளுக்கு எதிராக உறுதியான அரசியல் போராட்டத்தை தொடுக்க முன்வருமாறு வர்க்க நனவுள்ள சகல தொழிலாளர்களையும், இளைஞர்களையும் வேண்டுகின்றது.

இதனை ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்டாலினிசம், சீர்திருத்தவாதம் மத்தியவாதங்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற போராட்டத்த்தின் மூலம் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் உலக சோசலிச புரட்சியின் பக்கம் வென்றெடுக்கும் போராட்டத்தை —நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தில் இருந்து வேறு படுத்திவிட முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை முதலாளித்துவ கட்சிகளுடனான சகல உறவுகளையும் துண்டித்துக் கொண்டு, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர் — விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கும்படி தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.

இப்போராட்டம் ஸ்டாலினிசத் தலைமைகளின் 'கம்யூனிஸ்ட்' முகமூடிகளை கிழித்தெறிய வாய்ப்பளிக்கும்.

இப்போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல சோசலி தொழிலாளர் கழகம், நகர நாட்டுப்புற தொழிலாளர்களை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில்—நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க் குழுவில் சேருமாறு வேண்டுகின்றனது.

தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடும்படி கோர வேண்டும்:

சகல ஏகாதிபத்திய வங்கிக் கடன்களையும் இரத்துச் செய்!

சகல வங்கிகள் 'கறுப்பு பணங்களை' நஷ்ட ஈடின்றி தொழிலாளர் அதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, தொழில்களை அடிப்படை உரிமைகளாக்கு!

சகல நிலங்களையும் நஷ்ட ஈடின்றி தேசியமயமாக்கி, ஏழை விவசாயிகளுக்கு அவற்றை பகிர்ந்து கொடு!

விவசாயிகளின் கடன்களை இரத்துச் செய்து இலகுவான கடன்களை வழங்கு!

விவசாய உரங்களுக்கு மானியம் வழங்கு!

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை!

முதலாளித்துவ அரச இயந்திரத்தை நிர்மூலமாக்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டு!

ஆயுதம் தாங்கிய தொழிலாளர்களைக் கொண்ட சோவியத்களை நிறுவு!

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உத்தரவாதம் செய்!

இந்திய ஆக்கிரமிப்பு படைகளை ஈழத்திலிருந்து வாபஸ் பெறு.

சென்னை பெரியார் திடல் பொதுக் கூட்டம்

தொழிலாளர் பாதை"

08 செப்டம்பர் 1989 (இதழ் 391)

சென்னை பெரியார் திடல் பொதுக் கூட்டம்:

உள்நாட்டில் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கும் இராணுவம், வெளிநாட்டில் விடுதலை போராட்டத்தினைக் காப்பது எப்படி?

சோசலிச தொழிலாளர் கழகம்

'புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று தோழர்கள் பாசிச மக்கள் முன்னணியினரால் படுகொலை செய்யப்பட்டமைக்குக் காரணம் பு.க.க. வின் போராட்டம் பாட்டாளி வர்க்க அனைத்துலக வாதத்தினை அடிப்படையாக கொண்டுள்ளதே. பு.க.க. இலங்கை முதலாளி வர்க்கத்தின் இனவெறிக்கும் தமிழ் முதலாளித்துவ தேசியவாதத்துக்கும் எதிராக தமிழ், சிங்கள தொழிலாளர்களை தமிழ் ஈழம் -இலங்கையைக் கொண்ட ஒரு ஐக்கிய சோசலிச அரசினை அமைக்க அணிதிரட்டி வருகின்றனது.'

பு.க.க. சிலாபம் உறுப்பினர் தோழர், கிறேஷன் கீகியனகே பாசிச ம.வி.மு. யால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திய சோசலிச தொழிலாளர்கள் கழகத்தின் உறுப்பினரும் பி அன்ட் சி ஆலை சென்னை தொழிலாளர் சங்க உறுப்பினருமான தோழர். மோசஸ் ராஜ்குமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் ஜூலை 22 இல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பேசிய தோழர். மோசஸ் இங்கைப் பிரச்சினைகள் சம்பந்தமான பொய்களும், திருப்புகளும் பரப்பப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலையை விளக்குமுகமாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

தென் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஏகாதிபத்திய பொலிஸ் ஏஜன்டு பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் தோழர் கைலாசம் பின்வருமாறு குறிப்பிட்டார்:

ஏகாதிபத்தியத்தின் பூரணமான ஆசீர்வாதங்களுடன் இந்திய முதலாளி வர்க்கம் தென் ஆசியாவில் ஏகாதிபத்திய பொலிஸ் பாத்திரத்தை வகித்து வருகின்றது. முன்னர் பங்களதேஷிலும் இன்று இலங்கை மாலத்தீவிலும் அதை செய்து வருகிறது. பங்களாதேஷிலும் தமிழ் ஈழத்திலும் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் இந்திய முதலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் முற்போக்கானதென சாயம்பூசி வந்துள்ளன. இந்திய-இலங்கை உடன்படிக்கை தமிழர்களைக் காப்பதற்கன்றி விடுதலைப் போராட்டத்தை நசுக்கவே கைச்சாத்திடப்பட்டது. … தென் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உப குழுவின் தலைவரான ஸ்ரீபன் கே. சொலார்ஸ் இந்திய-இலங்கை உடன்படிக்கையை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நசுக்கக் கைச்சாத்தான காம்ப் டேவிட் ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய தோழர். கைலாசம், ஸ்ரீபன் காந்தி - ஜயவர்தன பேர்களை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ததையும் கூட்டத்தினருக்கு நினைவுபடுத்தினார்.

அடுத்து பேசிய தோழர் ராம் பு.க.க. உறுப்பினர் தோழர் கிறேஷன் படுகொலை செய்யப்பட்ட வர்க்க நிலைமையை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

மரண நெருக்கடி

உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பாகமாக இலங்கை முதலாளி வர்க்கம் மரண நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. தோழர் கிறேசன் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் முன்னணிக்கு வந்து கொண்டுள்ள நிலையிலேயே பாசிச ம.வி. முன்னணியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பு.க.க. பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனை அடிப்படையாக கொண்டு தமிழ் ஈழம் -இலங்கையை கொண்ட ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவ தொழிலாள வர்க்கத்தினை அணி திரட்டிக் கொண்டுள்ள சமயத்திலேயே இப்படுகொலை இடம் பெற்றுள்ளது. தோழர் கிறேசன் மட்டுமின்றி கடந்த வருடம் தோழர்கள் பிட்டவெலவும், குணபாலவும் ஜே.வி.பி. பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டனர்.

பிரித்தானிய ஒடுக்குமுறைக்கு எதிரான அயர்லாந்தின் போராட்டம் சம்பந்தமாக மார்க்சின் அறிவுரையை சுட்டிக் காட்டுகையில் தோழர். ராம் கூறியதாவது:

அயர்லாந்து

அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்துக்காக போராடாத வரையில் பிரித்தானிய தொழிலாள வர்க்கம் பிரித்தானிய முதலாளி வர்க்கத்தில் இருந்து எங்ஙனம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதோ அங்ஙனமே இந்திய தொழிலாள வரக்கம் தமிழ் ஈழத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடாத வரையில் இந்திய முதலாளி வர்க்கத்தில் இருந்து விடுபட முடியாது எனக் குறிப்பிட்டார்.

'மக்கள் விடுதலை முன்னணி பாசிஸ்டுகளதும் யூ.என்.பி. குண்டர் படைகளதும் கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் பு.க.க. தோழர்கள் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக உறுதியான போராட்டத்தினை தொடுத்துள்ளனர். பாசிஸ்டுகள் தோழர்களை உடல்ரீதியாக ஒழித்துக் கட்ட முயன்றுள்ளனர்.'

இந்திய ஆக்கிரமிப்பு படைகளை தமிழ் ஈழத்தில் தொடர்ந்தும் வைத்திருப்பதில் இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் துரோகப் பாத்திரத்தை கூட்டத்தினருக்கு சுட்டிக் காட்டிய ராம், உள்நாட்டில் துறைமுகத் தொழிலாளர்கள், புகையிரத் தொழிலாளர்கள், டாக்டர்களின் போராட்டங்களை நசுக்கி வரும் இராணுவம் வெளிநாட்டில் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது எப்படி? எனக் கேட்டார்.

இந்திய படைகளை தமிழ் ஈழத்தில் இருந்து வாபஸ் பெறுவது தொடர்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைத்திட்டத்துக்கும் பாசிச மக்கள் விடுதலை முன்னணியின் இனவாத இந்திய எதிர்ப்பு கூச்சலுக்கும் இடையேயான பண்புரீதியிலான அடிப்படை வேறுபாட்டை விளக்கிய தோழர் ராம் 'இந்திய படைகளை வெளியேற்றும் ம.வி. முன்னணியின் கோரிக்கை இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் 'தேசபக்த இராணுவ அரசாங்கத்துக்காக' போராடுகின்றனர். ம.வி. முன்னணியின் இந்திய விஸ்தரிப்புவாத கொள்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்க கட்சிகளுக்கும் தலைமைக்கும் எதிரான புதிய தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக ம.வி.மு. அறிவித்துள்ளது. 'இந்திய ஐந்தாம் படையின் ஆலோசனையின் பேரில் சிங்கள இந்திய ஏஜன்டுகள் இடதுசாரிகளாக வேடம் பூண்டுள்ளதாக' அது குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தின் பேரில் தொழிலாள வர்க்கக் கட்சிகளின் பல அங்கத்தினர்கள் சமசமாஜ கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், பு.க.க. உறுப்பினர்கள் உட்பட—ம.வி.மு யால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

'ம.வி.மு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் 'வேலைநிறுத்தங்களுக்கு' இட்டுச் செல்லும் யூ.என்.பி. ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தொழிலாளர்களை வேலைக்குத் தள்ளுவதும் 'அன்றாட நிகழ்ச்சி'களாகி விட்டன. இதன் விளைவாக நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

'பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரும் நிலையில் அது உடனடியாக தனது பிற்போக்கு இனவாத, மத அரசினைக் காக்கும் பொருட்டு இந்திய முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும். ஐக்கிய முன்னணிக்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அழைப்பு இலங்கையிலும், அனைத்துலக தொழிலாள வர்க்கத்திடையேயும் ஆதரவினை வென்று வருகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு இந்த ஐக்கிய முன்னணிக்கான போராட்டத்தினை அனைத்துலக தொழிலாள வர்க்கத்திடையே ஆழமாக எடுத்துச் செல்கின்றது.

பூரணத்துவம் செய்யப்படாத ஜனநாயகப் புரட்சியின் பாத்திரத்தினை நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் பூர்த்தி செய்யும் பொருட்டு இலங்கையில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகமும், இந்தியாவில் சோசலிச தொழிலாளர் கழகமும் இந்திய துணை கண்டத்தில் ஒரு சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தினை — உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு களமாக நிறுவ போராடி வருகின்றது எனவும் தோழர். ராம் குறிப்பிட்டார்.